Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மும்பை: `இரண்டு வேளை உணவு; சம்பளம் கேட்டால் அடி!' - கொத்தடிமையாக்கப்பட்டவர் தற்கொலை!

மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காலுபவார். இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு தீபாவளியின்போது காணாமல்போன பவார் மகன் சில நாள்கள் கழித்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை தகனம் செய்யக்கூட பணம் இல்லாமல் புதைத்தார். அப்போது மகனின் மேல் போர்த்துவதற்கு துணி வாங்க ராம்தாஸ் என்பவரிடம் ரூ.500 கடன் வாங்கினார். அந்தப் பணத்தை பவாரால் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் பவாரை ராம்தாஸ் தனது தோட்டத்தில் பல மாதம் சம்பளம் எதுவும் கொடுக்காமல் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கினார்.

காலுபவார், சாவித்ரா

Also Read: மும்பை: இறந்த தந்தையின் உடலை 4 நாள்களாக வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்; தற்கொலை முயற்சியால் பரபரப்பு

தினமும் இரண்டு நேரம் மட்டுமே சாப்பாடு கொடுத்து கடுமையாக வேலை வாங்கியதோடு சம்பளம் கேட்கும் நேரமெல்லாம் பவாரைக் கடுமையாக அடித்து துன்புறுத்தி வந்தார். இந்த கொடுமை தாங்க முடியாமல் பவார் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவார் மனைவி சவித்ரா போலீஸில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் வெறுமனே விபத்து மரணம் என்று வழக்கு பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராம்தாஸ் உள்ளூர் எம்.எல்.ஏ.வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கேள்விப்பட்ட சமூக ஆர்வலர் விவேக் பண்டிட், ராம்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். பவார் மனைவி தனது புகாரில், 'ராம்தாஸிடம் ரூ.500 வாங்கிய போது எனது கணவர் தனது தோட்டத்தில் வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனது கணவரும் அதன் படி வேலை செய்தார். ஆனால் சம்பளம் கேட்கும்போதெல்லாம் அடித்து உதைத்தார். ஜூலை மாதத்தில் இரண்டு நாட்கள் உடல் நிலை சரியில்லை என்று கூறி வேலைக்கு செல்லவில்லை. அடுத்த நாள் வேலைக்கு சென்றபோது அவரை கடுமையாக அடித்து அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் அவமானத்தில் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார். ராம்தாஸ் மீது குற்றம் சாட்டியும் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விவேக் பண்டிட் இதில் தலையிட்டு ராம்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதத்திற்கும் மேலாக போராடினார்.

விவேக் பண்டிட்டின் தீவிர முயற்சி காரணமாக போலீஸார் ராம்தாஸ் மீது இப்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதோடு பவார் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்காக மும்பைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மீண்டும் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும் இன்னும் ராம்தாஸ் கைது செய்யப்படவில்லை என்று விவேக் பண்டிட் தெரிவித்தார். மொஹாடா போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் இது குறித்து கூறுகையில், 'குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது' என்று மட்டும் தெரிவித்தார். இது குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ.சுனில் புசாராவிடம் கேட்டதற்கு, 'ராம்தாஸ் மீது போலியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று நான் நிர்ப்பந்தம் செய்யவில்லை. முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/crime/a-man-has-committed-suicide-by-committing-a-rs-500-loan-for-his-sons-funeral-near-mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக