Ad

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

`மேக்கப் இல்லாமலே ஜொலிச்ச ஸ்கின், சகுந்தலா ஆன்ட்டியின் நட்பு!' - அம்மா குறித்து ராஜசுலோச்சனா மகள்

`இந்தப் புறா ஆட வேண்டுமென்றால் இளவரசர் பாட வேண்டும்' - 1958-ல் வெளிவந்த `சாரங்கதாரா' படத்தில் இடம்பெற்ற `வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே' பாடலில், நடிகை ராஜசுலோச்சனா பேசுகிற இந்த வரிகள், இந்தக்கால தலைமுறையினருக்குக்கூட நன்கு பரிச்சயம்தான். சில பாடல்கள், அதில் நடித்த நடிகர்களுக்கு சாகாவரம் அளித்துவிடும். இதேபோல், சில நடிகர்கள் அவர்கள் நடித்த பாடல்களுக்கு சாகாவரம் தந்துவிடுவார்கள்.

அந்த வகையில், ராஜசுலோச்சனாவை பார்த்தாலே `வசந்தமுல்லை' பாடல் காதுக்குள் ஒலிக்கும்; `வசந்த முல்லை' என்ற வார்த்தை காதில் விழும்போதே ராஜசுலோச்சனாவின் முகம் மனக்கண்ணுக்குள் வந்துவிடும். விஜய் நடித்த `போக்கிரி'யில்கூட இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள். சில பாடல்கள் இப்படித்தான் தலைமுறை கடந்தும் பயணிக்கும்.

நடிகை ராஜசுலோச்சனா

ராஜசுலோச்சனா தற்போது நம்முடன் இல்லையென்றாலும், அவரின் மகள்களில் ஒருவரான தேவி, தன் அம்மாவின் பிறந்த நாளில் (ஆகஸ்ட் 15), மூத்த நடிகையர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடிகை கே.ஆர்.விஜயாவை கெளரவித்தவர், சில தினங்களுக்கு முன்னால் நடிகை சி.ஐ.டி சகுந்தலாவை கௌரவித்திருக்கிறார். இதுகுறித்து தேவியுடன் பேசுகையில்தான், மேலே சொன்னவையெல்லாம் நம் மனதுக்குள் ஓடின. இனி ஓவர் டு தேவி, டாட்டர் ஆஃப் ராஜசுலோச்சனா.

``நிறை வாழ்வுன்னு சொல்வாங்க இல்லையா..? அப்படியொரு வாழ்க்கையை அம்மா 78 வயசு வரைக்கும் வாழ்ந்தாங்க. அவங்க எங்களைவிட்டுப் போனதுக்குப் பிறகும் அவங்களோட நினைவா ஒரு நல்ல விஷயம் செய்யணும்னு முடிவு செஞ்சு எங்க ஃபேமிலியும் ரோட்டரி கிளப்பும் இணைஞ்சு, அம்மாவோட பிறந்த நாள்ல மூத்த நடிகையர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க ஆரம்பிச்சோம். 2019-ல விஜயாம்மாவுக்கு கொடுத்தோம். இப்போ சகுந்தலா ஆன்ட்டிக்கு கொடுத்திருக்கோம்.

கே.ஆர். விஜயாவுடன்...

அம்மாவும் ஆன்ட்டியும் ரொம்ப நெருக்கமான தோழிகள். ஆன்ட்டி குரூப் டான்ஸரா இருந்து ஹீரோயின், கேரக்டர் ரோல்னு முன்னேறி வந்தவங்க. அம்மாவோட ஆரம்பகால படங்கள்ல, பாடல் காட்சிகள்ல பார்த்தீங்கன்னா அம்மாவுக்கு பக்கத்துலேயே க்யூட்டா டான்ஸ் ஆடிட்டு இருப்பாங்க ஆன்ட்டி. அப்போ இருந்தே ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ். ஒருதடவை ஸ்டார் நைட் புரோகிராமுக்காக அம்மாவும் ஆன்ட்டியும் தென் ஆப்பிரிக்காவுல 45 நாள் ஒண்ணா இருக்க, நட்பு இன்னும் இறுக்கமாகியிருக்கு. விஜயாம்மாவும் அம்மாவும் நிறைய தெலுங்கு படங்கள்ல ஒண்ணா நடிச்சிருந்தாலும், `பாரத விலாஸ்'ல ஒரே வீட்டுக்குள்ள நடிச்சப்போ திக் ஃப்ரெண்ட்ஸாகிட்டதா சொல்வாங்க.

அந்தக் காலத்துல ஃபிட்னஸ், டயட்னு ரொம்ப கட்டுப்பாடா இருந்த நடிகைன்னு அம்மாவை குறிப்பிடுவாங்க. ஷூட்டிங்ல கொடுக்கிற சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்களாம். வீட்ல இருந்தே காய்கறி சாலட், பழச்சாறுன்னு எடுத்துட்டு போயிடுவாங்களாம். அதனால, மேக்கப் போடாமலே அம்மாவோட ஸ்கின் ஜொலிக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க, அம்மாவுக்கு 60 வயசுலதான் முடி நரைக்கவே ஆரம்பிச்சது. எல்லாத்துக்கும் காரணம், அவங்களோட டயட்டும் செஞ்சுக்கிட்டிருந்த யோகாவும்தான்'' என்றவர், சிவாஜியுடன் தன் அம்மா நடித்த சில படங்களைப் பற்றியும் பகிர்ந்தார்.

ராஜசுலோச்சனாவுடன் மகள் தேவி

Also Read: “அப்பாவின் குரலில் அப்படியே பாடுவேன்” - செந்தமிழ் தேன்மொழியாள் சாவித்திரி!

``சிவாஜி அங்கிள்கூட `அம்பிகாபதி', `சாரங்கதாரா', `படித்தால் மட்டும் போதுமா'ன்னு நிறைய படங்கள் நடிச்சிருக்காங்க. படித்தால் மட்டும் போதுமாவில் படிக்காத சிவாஜி அங்கிள் படிச்ச அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி கதை. அதனால, அந்தப் படத்துல சிவாஜி அங்கிளை எதிர்த்து நின்னு பேசுற கேரக்டர் அம்மாவுக்கு. படம் வந்தப்போ பலரும் அம்மாவைப் பாராட்டினாங்களாம். நிஜத்துலேயும் அம்மா ரொம்ப வெளிப்படையான, தைரியமான பெண்மணிதான். எங்க சொந்தக்காரங்க வட்டத்துல அம்மாவை இரும்புப் பெண்மணின்னுதான் சொல்வோம்'' என்கிற தேவியின் குரலில் அம்மா மீதான பாசமும் பெருமிதமும் பொங்கி வழிகின்றன.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-rajasulochana-s-daughter-recalls-fond-memories-of-her-mom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக