Ad

புதன், 21 ஜூலை, 2021

`இந்திய கலாசார வரலாற்றை ஆராயும்குழு மாற்றப்படுவது, 32 எம்.பி-களுக்குக் கிடைத்த வெற்றி’-சு.வெங்கடேசன்

`இந்தியப் பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு, மறுசீரமைப்பு செய்யப்படும்’ என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்திருப்பது தமிழகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடப்படுகிறது.

நாடாளுமன்றம்

இந்தியாவின் 12,000 ஆண்டுக்கால பண்பாட்டின் தோற்றம், பரிணாம வரலாற்றை ஆய்வு செய்ய மத்திய அரசால் கடந்த ஆண்டு 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக அப்போதைய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்தார்.

இதை எதிர்த்து அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், `16 பேர்கொண்ட நிபுணர்குழு பன்மைத்துவத்தை பிரதிபலிக்கவில்லை. இந்தக் குழுவில் தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் இல்லை. குழுவிலுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலோர் இந்திய சமூகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற குழுக்களைச் சார்ந்தவர்கள்.

சு.வெங்கடேசன்

ஒன்றிய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தமிழ் ஆய்வாளர்கள் யாரும் குழுவில் இல்லை. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா... வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா... சம்ஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா?’ என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 23 -ல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 எம்.பி-க்கள் இந்தக் குழுவைக் கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்குக் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன், 'கடும் விமர்சனத்துக்கு உள்ளான அந்தக்குழு இன்னும் நீடிக்கிறதா... அந்தக் குழு கூடியிருக்கிறதா... குழு புதிதாகப் பன்மைத்துவ பிரதிநிதித்துவத்தோடு மாற்றி அமைக்கப்படுமா?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் பதில்

இதற்கு கடந்த 17 -ம் தேதி மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதிலில், ``இந்தக் குழு 2016-ல் அமைக்கப்பட்டது. கடந்த 2017, ஜனவ‌ரி 3, மே 2 தேதிகளில் இரு முறை கூடியிருக்கிறது. தற்போது இந்தக் குழுவை மாற்றியமைக்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ்வாறு மாற்றி அமைக்கப்படும்போது அதன் உறுப்பினர்கள் பன்மைத்துவத்துடன் அமைவதற்கான அனைத்து ஆலோசனைகளும் கருத்தில்கொள்ளப்படும்" என்று தெ‌ரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், ``இது 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக எழுப்பிய குரலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனாலும் அரசின் நோக்கம் குறித்து பரந்த விவாதம் தேவைப்படுகிறது. வரலாற்று திரிபு, பன்மைத்துவம் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுவதுமுள்ள வரலாற்று ஆய்வாளர்களின் கடந்தகால, நிகழ்கால அறிவியல்பூர்வமான பங்களிப்புகள் சிதைந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/india/the-team-formed-for-researching-indian-history-will-be-changed-madurai-mp-happy-for-the-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக