தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரைக்காக வெள்ளிக்கிழமை இரவு கோவை வந்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், கோவையில் அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க அ.தி.மு.க-வினர் முடிவு செய்தனர். கோவை முழுவதும் பிரமாண்ட கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டன. ஆங்காங்கே, குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்தன. வெள்ளிக்கிழமை இரவு கோவை தொழில் அமைப்பினருடன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், சனிக்கிழமை காலை கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார்.
முதல்வர் வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. அதற்குள் எம்.எல்.ஏ-க்கள், சீனியர் நிர்வாகிகள் ஸ்பாட்டில் ஆஜராகிவிட்டனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒருவழியாக அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் கோனியம்மன் கோயிலுக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டது.
அப்போது, `மூலவரை போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது’ என்று இந்துசமய அறநிலைத்துறை அதிகாரி பாதுகாவலர்களிடம் சொல்லிப் பார்த்தார். ஆனால், அதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நேரமாகிவிட்டதால், சாமி கும்பிட்டு முடித்தவுடன் கையில் இருந்த வாட்சைப் பார்த்தப்படியே பழனிசாமி வெளியே வந்தார்.
இதையடுத்து, அவர் கோவை அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அம்மன் அர்ஜுனன் வீட்டில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு, ராஜவீதியில் மக்களிடம் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ``தேர்தல் வரும் நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொய்யான அறிக்கையினை வெளியிடுகிறார்.
மக்கள் கிராமசபை என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றுகிறார். மக்கள் கிராம சபையில் ஒரு பெண் கேள்வி எழுப்பினார். அவரை தி.மு.க-வினர் தாக்கினர். அந்த பெண்மணியின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆட்சியைக் குறை சொல்வதுதான் அவரது நோக்கம்.
மக்கள் கிராம சபைக் கூட்டம் மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டமல்ல. அ.தி.மு.க-வை விமர்சனம் செய்யவே ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் நடத்துகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதே போன்று கிராம சபை நடத்தி கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?. ஸ்டாலின் ஒரு அரசியல் தலைவரா? அ.தி.மு.க-வை நேரடியாக சந்திக்கத் திராணியற்றவர் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டீர்கள்.
இப்போது முடியாது. மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் ஸ்டாலினை எள்ளி நகையாடி சிரிக்கின்றனர். தன்னைப் பார்த்து கிண்டலாக சிரிப்பதைக் கூட ஸ்டாலினால் உணர முடியவில்லை.
ஸ்டாலின் அ.தி.மு.க-வை உடைக்க முயன்றார். ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார். அவற்றையெல்லாம் முறியடித்தோம். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில், தமிழகம் சாதி, மதச் சண்டைகள் இல்லாமல் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு அதிகரித்து, வியாபாரிகள் நிம்மதி இழப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறும். ஆனால், அ.தி.மு.க அரசு அம்மா ஆசியோடு வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது” என்று பேசினார்.
இதன்பிறகு, செல்வபுரம் பகுதியில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அங்கு மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. ஆனால், ராஜவீதி, செல்வபுரம் இரண்டு இடங்களிலும் எடப்பாடி பேசும்போது, மைக் பிரச்னையாது. சற்று, ,இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்து மைக், பிறகு சுத்தமாக ஆஃப் ஆகிவிட்டது. இதனால், அவர் சற்று அதிருப்தியானார்.
Also Read: கட்அவுட், பேனர் குவிப்பு; ஸ்பீடு பிரேக்கர் உடைப்பு - முதல்வர் பழனிசாமி கோவை வருகை அட்ராசிட்டி!
இதையடுத்து, எடப்பாடி பேரூர் ஆதினத்தைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. பிறகு, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார், தொடர்ந்து, கோவை, பொள்ளாச்சி, சூலூர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். ஞாயிற்றுக்கிழமையும் அவர், கோவையில் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palanisamy-trolls-stalin-in-coimbatore-election-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக