Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

நாம் தமிழர் சீமானுக்கும், `துக்ளக் தர்பார்' ராசிமானுக்கும் என்ன சம்பந்தம்?! பார்த்திபன் தொடர் - 27

" 'பாரதிகண்ணம்மா' படத்தின் இறுதியில் கதாநாயகியுடன் கதாநாயகன் தீயில் விழுந்து இறப்பது போன்று காட்சி இருக்கும். என் மனதைத் துளைத்த காட்சி. அத்தீயில் சாதி எரிந்து காதல் வாழ்ந்ததா அல்லது காதல் எரிந்து சாதி தீ வளர்ந்தா, இல்லை காதல், சாதி இரண்டும் தீயில் எரிந்தது என்றால் இருமனம் விரும்பிய காதல் இறுதியில் தீ-க்கு மட்டுமே இறையாக வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? இன்றைய சூழ்நிலையில் கண்ணம்மா நாயகன் பார்வை என்ன?!

- செ.ராஜாமணி, திருச்சி

"நான் காதல் சாதி. 'பாரதி கண்ணம்மா' இயக்குநரின் நீதி. அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் மீதி.''

பொன்னியின் செல்வன்

" 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சா... என்ன நடக்குது கொஞ்சம் சொல்லுங்களேன். மணிரத்னத்தின் இயக்கத்தில் உங்களைத் திரையில் பார்க்க மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்!:

- காமேஷ்வரன், சென்னை

"மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மெத்தப் பெருமை. படத்தில் பெரிய பெரிய கதாபாத்திரங்கள் அவரால் எனக்கு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில், அந்தச் சுழலில், என்னால் அவர் சொன்ன கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த படங்கள், அதற்குக் கொடுத்திருந்த தேதிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று முட்டியதால் அப்போது சில கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கமுடியாத சூழலை அவரிடம் சொன்னேன். அப்போது தவறவிடுகிறோமே என வருத்தமாக இருந்தது. ஆனால், அதுத்தவறாமல், மீண்டும் என்னிடமே திரும்ப வந்திருக்கிறது. இப்போது அது சிறிய கதாபாத்திரமாக இருக்கிறது. இதை `ஆயிரத்தில் ஒருவன்' கதாபாத்திரத்தோடு ஒப்பிடக்கூடாது. அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. `பொன்னியின் செல்வன்' படத்தில் நான் இருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். இந்தப் படத்தின் முதல்நாளே மணிரத்னம் சாரிடம் `உங்கள் கனவு படைப்பில் நான் ஒரு துளியாய் இருப்பதில் மகிழ்ச்சி' என்றேன். `கனவே கடலா இருக்குது... என்ன பண்றதுன்னு தெரியல' என மணிரத்னம் சொன்னார்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். மணிரத்னம் சார் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். `புதிய பாதை' ரிலீஸுக்குப் பிறகு சுஹாசினி மணிரத்னம் அவர்கள் என்னிடம் சீரியலில் நடிக்க கேட்டார். மணிரத்னம் அவர்கள் இயக்குவதாக இருந்தால் நடிப்பேன் என்று சொல்லி நடித்தேன். அவரது இயக்கத்தை வியந்து பார்த்திருக்கிறேன். அவரது படங்களில் வசனங்கள் இயல்பாக, எளிமையாக இருக்கும். `பொன்னியின் செல்வன்' படத்தில்கூட சுத்த தமிழில் பேசாமல் இப்போது பேசுவதுபோன்றுதான் வசனங்கள் இருக்கும். பொன்னியன் செல்வன் ஷூட்டிங்கே பிரமிக்கவைக்கிறது. ரவிவர்மனின் உழைப்பெல்லாம் வியக்கவைக்கிறது. ஒரு ஷாட் முடிந்ததுமே அடுத்த ஷாட் தயாராக இருக்கிறது. இயக்குநர் ரெடி என்றதும் ஐஸ்வர்யா ராய் முதற்கொண்டு எல்லோருமே குடுகுடுவென ஷாட்டில் நடிக்க ஓடுகிறார்கள். ஏனென்றால் இயக்குநர் மேல் இருக்கும் மரியாதை, நம்பிக்கை. நட்போடும், காதலோடும், விருப்பத்தோடும் விறுவிறுவென நடந்துகொண்டிருக்கிறது `பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்."

" 'துக்ளக் தர்பார்' டிரெய்லர் பார்த்தேன்... படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்போல நீங்கள் நடித்திருப்பதாக சிலர் சொல்கிறார்களே... உங்கள் கருத்து என்ன சார்?"

- சந்தோஷ், சென்னை

பார்த்திபன், விஜய் சேதுபதி

Also Read: "தனுஷுக்குப் பதில் நான்... எனக்கு பதில் தனுஷ்!"-`ஆயிரத்தில் ஒருவன் 2.0'-ல் பார்த்திபன் நடிக்கிறாரா?!

"சீமானும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள். என்னுடைய சிறு சிறு முயற்சிகளையும் பாராட்டுகிறவர் அவர். `ஒத்த செருப்பு' திரையடலுக்கு முன்பு அவரைப் பிரத்யேகமாகப் படம் பார்க்க அழைத்திருந்தேன். ஆனால், சில தொழில்நுட்ப கோளாறால் அன்று அவரால் படம் பார்க்கமுடியவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்துவிட்டுப்போனார். மீண்டும் அடுத்தநாள் வந்து படத்தைப் பார்த்து என்னை வாழ்த்தினார். இதை எதுக்கு சொல்றேன்னா அவ்வளவு வேலைகளுக்கு நடுவில் எனக்காக நேரம் ஒதுக்கி வந்தார். அவரோடு எனக்கு நல்ல நட்பு இருக்கிறது.

பொதுவாகவே எந்த அரசியல்வாதியின் முயற்சியையும் நான் கிண்டல் பண்ண மாட்டேன். `துக்ளக்' என்றாலே அரசியல் கேலி நையாண்டிதான். ஆனால், இந்த `துக்ளக் தர்பார்' அப்படி இருக்காது. இந்தப் படம் எந்த அரசியல் கட்சியையும் சாடுற மாதிரி இருக்காது. படத்தில் என் கேரக்டர் பெயர் ராசிமான். இந்தப் பெயர் எப்படி அவரோடு தொடர்புப் படுத்தப்படுகிறது என எனக்குப் புரியவேயில்லை. அந்தப் பெயரோடு சம்பந்தம் இருக்கிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை. இப்போதிருக்கிற அரசியல் கட்சிகளுக்கு இடையில் திரு.சீமான் அவர்கள் தொடர்ந்து தமிழுக்காவும், தமிழர்களுக்காகவும் குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறார். அவருடைய பேச்சுகள் இளைஞர்களுக்குப் பெரிய உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. உயர நினைக்கிறவர்களை கீழே தள்ளுதவதில், அவர்களை அழுக்காக்குவதில் எந்த விதமான லாபமும் இல்லை. நாம செய்யணும் அல்லது செய்றவங்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது. முடிஞ்சா உதவி செய்யணும். செய்ததை மறைத்து சொல்வதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. இதுவரை அப்படி எதுவும் செய்ததும் இல்லை. அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை. சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் திரு.சீமான் அவர்களுக்கும் அவரது கட்சிக்கும் என்னுடைய வாழ்த்துகள்.''

- நிறைவடைந்தது



source https://cinema.vikatan.com/tamil-cinema/parthiban-talks-about-seeman-and-ponniyin-selvan-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக