Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

பாரதியார் பிறந்தநாள்: `கட்டாயக் கல்வியை உறுதி செய்வோம்!’– எட்டயபுரத்தில் உறுதியேற்ற இளம்பாரதிகள்

விடுதலைக் கவி, புரட்சிக்கவி, மகாகவி என்றெல்லாம் போற்றப்படும் பாரதியாரின் 139-வது பிறந்த நாள் விழா, இன்று கொண்டாடப்படுகிறது. பாரதியின் சொந்த ஊரான, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஆண்டுதோறும் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரதி மணிமண்டபத்திலுள்ள பாரதியாரின் முழுவுருவச் சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

வழக்கமாக, பாரதியாரின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் மணிமண்டபத்திலிருந்து பிறந்த வீட்டுக்கு பாரதி வேடமணிந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எட்டயபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக பாரதியின் பாடல்களைப் பாடியும், ’வந்தேமாதரம்’ கோஷம் எழுப்பியும் ஊர்வலமாகச் செல்வார்கள்.

Also Read: ``பெண்கள் அரசியலுக்கு வர முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார்”- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

பின்னர், பாரதியின் உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்வதுடன், பாரதி இல்லத்தின் முன்பு பாரதியின் மனைவி செல்லம்மா வேடமணிந்த மாணவிகளின் கோலாட்ட நிகழ்ச்சி, பேச்சுப் போட்டிகள் ஆகியவை நடைபெறும். பாரதி பிறந்தநாளன்று இவற்றைக் காண எட்டயபுரத்தில் வீதியெங்கும் மக்கள் கூடி நிற்பார்கள். இந்தாண்டு, கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கபபடவில்லை.

பாரதியின் பிறந்த வீட்டின் முன்பு இளம்பாரதிகள்

`கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை’ சார்பில் பாரதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 6 மாணவ, மாணவிகள் மட்டும் பாரதியாரின் வேடமணிந்து பாரதியின் வீட்டுக்கு வந்தனர். பாரதியின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த மாணவர்கள்,``14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாயக்கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம், பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம், தேசபக்தி தேசப்பற்றை வளர்ப்போம்” என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாரதியாரின் கருத்துவரிகள் அடங்கிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக இளம்பாரதிகளை உருவாக்கிய 3 தலைமைஆசிரியர்களுக்கு `பாரதியார் விருது’ம், பேச்சுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசும் வழங்கப்பட்டது. ``ஒவ்வொரு வருஷமும் பாரதியாரின் பிறந்தநாளன்று பள்ளிகூடத்துப் பிள்ளைகளோட ஊர்வலமும், பாட்டும், பேச்சுமா இந்தத் தெருவே கோலாகலமா இருக்குமே.

பேச்சுப்போட்டி

பிள்ளைகள் கூட்டம் நிரம்பி வழியுமே. பாரதி வேஷத்தோட தெருவில் எல்லாக் குழந்தைகளும் ஒன்னா உட்கார்ந்து சாப்பாடு சாப்பிடுவாங்களே... இந்த வருசம் கொரோனா பரவலால எதுவுமே நடக்காமே தெருவே களையிழந்து அமைதியாகிடுச்சு” என்றனர் பாரதியின் பிறந்தவீட்டுத் தெருவில் வசிக்கும் மக்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/bhatathiyar-birthday-celebration-in-ettaiyapuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக