Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

5 ரூபாய் டிபன்; 30 ரூபாயில் மருத்துவம் - `கோவை சாந்தி சமூக சேவை' சுப்பிரமணியம் காலமானார்!

மனிதநேயத்துடன் செய்யும் சேவை, கடவுகளுக்கே செய்யும் சேவை (Service to Humanity is Service to God).. இதுதான் கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் தாரக மந்திரம். ரூ.5-இல் இருந்து, ரூ.15-க்கு டிபன் வகைகள், ரூ.25-க்கு தரமான முழு சாப்பாடு, டீ, பில்டர் காபி, ராகி பால், சத்து மாவு பால் எல்லாமே ரூ.5 தான்.

சாந்தி சமுக சேவை

Also Read: 5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை!

கோவையில் உள்ள உயர்தர உணவகங்களின் சுவைக்கும், தரத்துக்கும் சவால்விடும் அளவுக்கு சந்தோஷமான சேவையை செய்து வருகின்றனர். இந்நிலையில், சாந்தி சமூக சேவை நிறுவனத்தின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை சுப்பிரமணியம் கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கினார். அதன்மூலம், இயந்திர உதிரி பாகங்களை உற்பத்தி செய்து, பல்வேறு நாடுகளுக்கு கொடுத்து வேகமாக வளர்ச்சியடைந்தார். இதையடுத்து, 1996-ம் ஆண்டு சாந்தி சமூக சேவை என்ற அறக்கட்டளையை தொடங்கி, அதன் அறங்காவலராகவும் இருந்து வந்தார்.

சாந்தி சமூக சேவை

சாந்தி கியர்ஸ் நிறுவனம், வேறு நிறுவனத்துக்கு விற்கபட்டுவிட்டது. ஆனால், சாந்தி சமூக சேவையின் மூலம் தொடர்ந்து ஏராளமான சேவைகளைச் செய்து வந்தார் சுப்பிரமணியம். உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை லாப நோக்கம் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.

குறைந்த விலையில், தினசரி பல எளிய மக்களுக்கு அக்‌ஷய பாத்திரமாகப் பசியாற்றினார். மேலும், தினசரி 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய் தான். மருந்தகங்களில், 30 சதவிகிதம் தள்ளுபடியில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

Also Read: கோவை: அரசுப் பள்ளிக்காக நில தானம் செய்த தொழிலதிபர்! - விழா எடுத்துப் பாராட்டிய பொதுமக்கள்

இதனால், பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத ஏழை, நடுத்தர குடும்பத்தினர் இங்கு மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும், மருந்துகள் வாங்கவும் அதிகளவில் வருவார்கள்.

சாந்தி சமூக சேவையின் பெட்ரோல் நிலையத்தில், ஸ்டாக் வரும் போது என்ன விலையோ?, அந்த ஸ்டாக் முடியும் வரை, அதே விலைக்குதான் விற்பனை செய்யப்படும். சாந்தி சமூக சேவை அமைப்பால் இலவச மின்மயானமும் இயங்கி வருகிறது. இவ்வளவு சேவைகளுக்கு சொந்தக்காரரான சுப்பிரமணியம், அதுகுறித்து ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்ற கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தார். இதனிடையே, உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சுப்பிரமணியம் ஓர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சுப்பிரமணியம்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு கோவை மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முகம் காட்டாமல், முகவரியும் தெரிவிக்காமல் மக்கள் மனதை குளிரவைத்த சுப்பிரமணியம், மக்கள் மனதில் என்றும் உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டேதான் இருப்பார்.



source https://www.vikatan.com/news/death/coimbatore-shanthi-social-servie-subramaniam-passed-away

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக