இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பலரையும் கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாகத் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``எல்லோருடைய அன்புக்கும் நன்றி. 7.29 மணி முதல் நான் ஓய்வுபெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்’’ என்று அறிவித்திருந்தார். தோனியின் திடீர் அறிவிப்பு தொடர்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், சக வீரர்கள், தோனி ரசிகர்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களின் வழியாகத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தோனியின் மனைவி சாக்ஷியும் தோனியின் ஓய்வு குறித்து உருக்கமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``உங்களது சாதனைகளைக் குறித்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். விளையாட்டுக்கு நீங்கள் உங்களது சிறப்பான பங்களிப்பை அளித்ததற்கு வாழ்த்துக்கள். உங்களைக் குறித்தும் உங்களது சாதனைகளைக் குறித்தும் பெருமைப்படுகிறேன். உங்களது பேஷனை விட்டு வெளியேறும்போது எவ்வளவு கண்ணீரைக் கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்பதை அறிவேன். உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை விரும்புகிறேன். இன்னும் பல அற்புதமான விஷயங்கள் முன்னால் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் தோனி சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
மாயா ஏஞ்சலோவின், ``நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள். நீங்கள் செய்தவற்றையும் மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால், நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை ஒருபோதும் மக்கள் மறக்க மாட்டார்கள்” என்ற வரிகளையும் அந்தப் பதிவில் சாக்ஷி மேற்கோள் காட்டியுள்ளார். சக்ஷியின் பதவும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
source https://sports.vikatan.com/cricket/sakshi-dhonis-post-about-dhonis-retirement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக