Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

`அடகுக் கடைக்கு வந்த நகை, கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடமானம்; நடவடிக்கை நிச்சயம்!’ - ஐ.பெரியசாமி

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ``தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. குரும்பூர் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 247 நகைப் பொட்டலங்கள் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய அந்தியோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம்வைத்ததாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களிடம் எப்படி கிலோ கணக்கில் தங்கம் இருக்கும்? இதனால் பெரிய தவறுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தத் தவறுகள் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை மாவட்டத்திலுள்ள பாப்பையாபுரம் என்ற கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மூக்கையா என்பவர் 300 பவுன் நகைக்கடன் பெற்றிருக்கிறார். இதுபோல் ஒருசில நபர்கள் 100, 200, 300, 600 பவுன் என மொத்தமாக நகைக் கடன் பெற்றுள்ளனர். இதை அதிகாரிகள் விசாரணை செய்ததில், கடன் பெற்றவர்களுக்கும், கூட்டுறவுக் கடன் சங்கம், வங்கிகளிலுள்ள அலுவலர்களுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்திருக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

அமைச்சர்

அடகுக் கடைக்கு வரும் நகை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம்!

தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியான மொத்தம் ரூ.12,110 கோடியில் சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் சுமார் ரூ.2,500 கோடி அளவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தக் கடன் தள்ளுபடி ரூ.12,110 கோடி. இதில் 25 சதவிகித அளவுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Also Read: நகைக்கடன் vs நகை விற்பனை; இரண்டில் எது நமக்கு நல்லது தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 18

சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது, விவசாயம் செய்யாத தரிசு நிலங்களுக்கு ரூ.110 கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது. குவாரி நிலங்களுக்கும் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 4,451 கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. கடன் தள்ளுபடி பெற வருபவர்களின் தகுதியை உறுதி செய்த பின்புதான் அவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தனியார் நகை அடகுக் கடை நடத்தக்கூடியவர்கள் தங்களிடம் அடமானத்துக்கு வரும் நகைகளைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடமானம்வைத்துப் பணம் பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/fraud-in-the-co-operative-union-warns-minister-iperiyasamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக