Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

சீர்காழி : `நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல்' - விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகள் பறிமுதல்!

தமிழகத்தில் சுருக்குமடி வலைகளுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவித்து மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். "சுருக்குமடி வலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்" என கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் "மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்திருந்தார்.

சுருக்குமடி வலைகள்

மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப் பிரிவு போலீஸார்  தடைகளை மீறி மீன்பிடித்து வரும் படகுகள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து "சரியான முறையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை" என ஆத்திரமடைந்த பூம்புகார் , திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த  சுருக்குமடி வலைகள் பயன்படுத்த ஆதரவு தெரிவிக்கும் மீனவர்கள் கடந்த 14 -ம் தேதி தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்கச்  சென்றனர். இதனையறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களைத் தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குச் சென்றனர். தங்களைத் தடுக்கவருவதைப் பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள் பைபர் படகின்மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த படகு முற்றிலும் சேதம் அடைந்தது.

இதன் எதிரொளியாக வானகிரி கிராம மீனவர்கள் தங்களது கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவருக்குச் சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்குத் தீ வைத்து தப்பித்துச் சென்றனர். இதுதொடர்பாக கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தீ வைத்த  4 பேரைக் கைது செய்தனர். தொடர்ந்து இரு தரப்பு மீனவ கிராமங்களிலும் விசாரணை நடைபெற்று வரும் சூழலில், படகுகள் மோதலுக்குக் காரணமான  விசைப்படகை பறிமுதல் செய்ய திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் 400 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Also Read: நள்ளிரவில் நடுக்கடலில் பற்றி எரிந்த மீன்பிடிப் படகு! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 மீனவர்கள்

சுருக்குமடி வலைகள்

தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில்  போலீஸார், வருவாய்த்துறையினர், மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் வரவழைக்கப்பட்டு மோதலுக்குக் காரணமான விசைப்படகு மற்றும் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளைப் பறிமுதல் செய்தனர். சுருக்குமடி வலைகள் மதிப்பு ரூபாய் 30 லட்சம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகின் மதிப்பு ரூ.1 கோடியாகும். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-seerkazhi-conflict-between-fishermen-in-the-mediterranean

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக