Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

பா.இரஞ்சித் பிரிவினையைத் தூண்டுகிறாரா... கனடிய ராப் பாடகர் சொல்வதும், உண்மையில் நடந்ததும் என்ன?

சந்தோஷ் நாராயாணன் இசையமைக்க, மாஜா எனும் கனடிய நிறுவனம் தயாரித்த ‘எஞ்சாய் எஞ்சாமி’, ‘நீயே ஒளி' பாடல்கள் குறித்த ‘க்ரெடிட்' பிரச்னை யாரும் எதிர்பாராத வகையில் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.

‘’எஞ்சாய் எஞ்சாமி’’, ‘’நீயே ஒளி’’ இரண்டு பாடல்களும் ராப்பர் அறிவு எழுதி பாடிய பாடல்கள். இதில் ‘’நீயே ஒளி'’ பாடலில் வரும் ஆங்கில வரிகளை எழுதிப்பாடியவர் ஷான் வின்சென்ட் டி பால் எனும் கனடிய இலங்கைத் தமிழ் ராப்பர். இரண்டு பாடல்களுக்குமே சந்தோஷ் நாராயணன்தான் இசையமைப்பாளர். இதில் ‘’எஞ்சாய் எஞ்சாமி’’ தனியிசைப்பாடலாக மட்டுமே வெளிவர, ‘‘நீயே ஒளி'’ ‘சார்பட்டா’ படத்திலும் வெளியானது. இந்த இரண்டையுமே கனடடியா இசை ஆல்பம் நிறுவனமான மாஜாதான் தயாரித்தது. அவர்கள்தான் இந்த பாடல்களுக்கான காப்புரிமையை வைத்திருக்கிறார்கள். இது இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படும் ஒரு நிறுவனம்.

ராப்பர் அறிவு

‘’எஞ்சாய் எஞ்சாமி’’ பாடல் கடந்த மார்ச் மாதம் யூடியூபில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதுவரை 31 கோடிக்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றிருக்கும் இந்தப்பாடல் இந்த ஆண்டின் மிக முக்கியமான பாடலாகக் கருதப்படுகிறது. பூர்வகுடி மக்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்ட கதையைச் சொல்லும் இந்தப்பாடலை எழுதி, பாடி, திரையிலும் தோன்றியிருந்தார் தமிழ் ராப்பரான அறிவு. இந்தப்பாடலில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ-யும் பாடி திரையில் தோன்றியும் நடித்திருந்தார்.

இதற்கிடையே இந்த ஆல்பத்தை தயாரித்த நிறுவனமான மாஜா பாடகர் அறிவை புறக்கணிப்பதாகவும், அவருக்கான அங்கீகாரத்தை வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் யூடியூபில் இருக்கும் ‘’எஞ்சாய் எஞ்சாமி'’ பாடலில், பாடல் வரிகள் அறிவு என்கிற பெயர் இல்லை. அத்தோடு நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் வைக்கப்பட்ட விளம்பரத்திலும் அறிவு இல்லை. இதற்கிடையே சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கில பத்திரிகையின் அட்டப்படைத்தில் தீ மற்றும் ‘நீயே ஒளி' பாடலில் ஆங்கில வரிகளை எழுதிப்பாடிய ஷான் வின்சென்ட் டி பால் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். பாடகர் அறிவு இதிலும் இல்லை. இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்கிற குழுவை தொடங்கி ரேப்பர் அறிவு போன்ற ஏராளமான தமிழ் ரேப்பர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்த பா.இரஞ்சித் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். ‘’நீயே ஒளி’’, ‘‘எஞ்சாய் எஞ்சாமி’ என இரண்டு பாடல்களையும் எழுதி பாடியிருக்கும் அறிவின் பெயர் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்த புறக்கணிப்பு எதனால் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிற ரீதியில் இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்ததோடு, சந்தோஷ் நாரயணன், பா.இரஞ்சித் இருவருக்குள்ளுமே பிரச்னை என்கிற கருத்துகளும் வெளிவரத்தொடங்கின.

''நீயே ஒளி'' பாடல்

இதுகுறித்து விகடனில் ஏற்கெனவே ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதை இந்த லிங்க்கில் படிக்கலாம்.

https://ift.tt/3B8qUf3

இந்த சூழலில்தான் கனடியே இலங்கைத் தமிழ் ரேப்பரான ஷான் வின்சென்ட் டி பால் தன்னுடைய சமூக வலை தள பக்கங்கள் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்...

‘’அறிவு... உங்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. பிரதிநிதித்துவதுக்கான உங்கள் போராட்டத்தில் இப்போது மட்டுமல்ல எல்லா தருணங்களிலும் நான் துணை நிற்பேன். நீங்கள் எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள். நாம் இருவரும் நம் சமூகத்துக்காகப் போராடுகிறோம். இந்தப் போராட்டத்தில் நம்மை யாரும் பிரிக்கமுடியாது. உங்கள் பாடல்களுக்கான அங்கீகாரத்தை நான் எடுத்துக் கொள்ள ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். இந்த விவகாரம் தொடர்பாக உங்களோடு விவாதிக்கவும், கலந்தாலோசிக்கவும் காத்திருக்கிறேன்'’ எனக் குறிப்பிட்டிருக்கும் ஷான் வின்சென்ட் இயக்குநர் பா.இரஞ்சித்தை தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கிறார்.

‘’ரஞ்சித்தின் ட்வீட்டும் அதற்கு வந்த கடுமையான எதிர்வினைகளும்தான் என்னை பாதிக்கிறது. அவர் பொறுப்பற்ற முறையில் தமிழ் கலைஞர்களிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டிருக்கிறார். இரஞ்சித்தின் ட்வீட்டில் ‘நீயே ஒளி’ பாடல் எழுதியவர்களில் அறிவின் பெயரை மட்டும் குறிப்பிட்டு என் பெயரைத் தவிர்த்திருக்கிறார். இந்தப் பாடலின் ஆங்கில வரிகளை எல்லாம் நான் எழுதி, வீடியோவை இணை இயக்கி, எடிட்டும் செய்தேன். அறிவு தமிழ் பகுதிகளை எழுதி பங்களித்தார். இது ஒரு கூட்டுழைப்பு. ஆனால், இயக்குநர் இரஞ்சித்தின் கருத்துகள் எங்களிடையே பிளவை உண்டாக்கியிருப்பதோடு, வளர்ந்துவரும் கலைஞர்களை பலி கொடுத்துவிட்டது'’ என்று தன்னுடைய அறிக்கையில் எழுதியிருக்கிறார் ஷான் வின்சென்ட்.

எஞ்சாய் எஞ்சாமி

‘எஞ்சாய் எஞ்சாமி' விவகாரத்தில் அறிவு மூலமாகத் தொடங்கிய பிரச்னை இப்போது இயக்குநர் பா.இரஞ்சித்துக்கும், சந்தோஷ் நாராயணுக்கும் இடையேயான பிரச்னையாக வளர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். இருவருக்கும் இடையே அரசியல் ரீதியிலான கருத்து முரண்கள் உருவானதே எளிதில் பேசித் தீர்த்திருக்கப்படவேண்டிய இப்பிரச்னை பெரிதாகக் காரணம் என சொல்லப்படுகிறது. அத்தோடு இரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயாணுடன் இருக்கும் சிலர் இரு தரப்பிலும் தவறான செய்திகளைச் சொல்லி சொல்லியே பிரச்னையை வளர்த்துவிட்டார்கள் என்கிறார்கள் இருதரப்புக்கும் நெருக்கமானவர்கள்.

சந்தோஷ் நாராயணன்

பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி பிரிந்துவிட்டதா?

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘அட்டகத்தி’ தொடங்கி ‘சார்பட்டா’ வரை அவரின் ஐந்து படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், இரஞ்சித் தனது அடுத்தப்படமான ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் முழுக்க முழுக்க புத்தம் புதிய டீமுடன் பணியாற்றுகிறார். இதில் சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல ரஞ்சித்தின் வழக்கமான டீமான ஒளிப்பதிவாளர் முரளி, கலை இயக்குநர் ராமலிங்கம், உதவி இயக்குநர்கள் என யாருமே இல்லை. எல்லாமே புதிய கலைஞர்களுடன் பணியாற்றுகிறார். அதனால்தான் சந்தோஷ் நாராயணன் இதில் இல்லை என்கிறார்கள்.

விரைவில் இந்த பிரச்னை சமூகமாகத் தீர்க்கப்படவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது!



source https://cinema.vikatan.com/tamil-cinema/rapper-shan-vincent-de-paul-accuses-pa-ranjith-over-enjoy-enjami-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக