Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

''நல்லவளை கெட்டவளா மாத்துறாங்க?'' - 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இருந்து வெளியேறிய ரச்சிதா?

'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இருந்து ஹீரோயின் ரச்சிதா வெளியேறி இருப்பதாக உலவும் செய்தி சீரியல் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில தினங்களாக சீரியலில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகாத சூழலில் ''சீரியல்ல நீங்க இருக்கீங்களா இல்லையா?'' என தன்னிடம் சோஷியல் மீடியாவில் கேட்ட ஒரு ரசிகரைக் கடிந்து கொண்டுள்ளார் ரச்சிதா.

''நான் சீரியல்ல இருக்கேனா இல்லையாங்கிறதை சீரியலின் டைரக்டர், வசனம் எழுதறவங்ககிட்டப் போய் கேளுங்க'' என அந்த ரசிகருக்குக் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.

ரச்சிதா

மிர்ச்சி செந்தில் இரு வேடங்களில் நடித்து வரும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலைப் பொறுத்தவரை முதல் சீசனில் ரச்சிதா இல்லை. அப்போது கணவர் தினேஷ் ஜீ தமிழ் சேனலில் தயாரித்து நடித்த 'நாச்சியார்புரம்' சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.

கோவிட், அதைத் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக அந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட, உடனே விஜய் டிவி தரப்பிலிருந்து ரச்சிதாவை அணுகியிருக்கிறார்கள். ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம்தான் பிரபலமானார் ரச்சிதா. ஆனால் அந்தத் தொடர் யூனிட்டில் சிலருடன் கருத்து வேறுபாடு உண்டாகி ஒருவித கசப்புடனேயே விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் பக்கம் போனார்.

ரச்சிதா

இருந்தாலும் விஜய் டிவி மறுபடி அழைத்ததும் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டு 'நாம் இருவர் நமக்கு இருவர்' இரண்டாவது சீசனுக்குள் வந்தார். கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் அந்த சீரியலில் நடித்து வந்தவருக்கு தற்போது என்ன பிரச்னை எனத் தெரியவில்லை.

சீரியல் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசிய போது ''அவங்க கேரக்டர் சேஞ்ச் ஆகுற மாதிரி இருக்குன்னு வருத்தத்தில் இருந்தாங்க'' என்கிற தகவலை மட்டும் சொன்னார்கள். அதாவது பாசிட்டிவாகச் சென்று கொண்டிருந்த அவரது கேரக்டரின் முக்கியத்துவம் திடீரென குறைக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறாராம். குடும்பத்துக்குத் தியாகம் செய்கிற மாதிரியான ஒரு இமேஜ் இவரிடமிருந்து திடீரென இன்னொரு நடிகைக்குக் கடத்தப்பட்டிருப்பதாகவும், 'நல்லவளை கெட்டவளா மாத்துறாங்க' என்றும் ரச்சிதா தனக்கு நெருக்கமான சிலரிடம் வருத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ரச்சிதாவிடமே கேட்கலாம் என அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ் அப்பில் விஷயத்தைச் சொல்லியும் அவர் பதிலளிக்கவில்லை. இதனிடையே ரச்சிதாவுக்கு கன்னடப் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அதற்காக அவர் பெங்களூரு சென்று விட்டார் என்றொரு தகவலும் வந்து கொண்டிருக்கிறது.



source https://cinema.vikatan.com/television/rachitha-quits-from-naam-iruvar-namakku-iruvar-serial

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக