Ad

திங்கள், 12 ஜூலை, 2021

`வீரப்பன் மட்டும் இருந்திருந்தால்..!' - கர்நாடக அத்துமீறல்களை விவரிக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர்

மார்கண்டேய நதியின் குறுக்கே `யார்கோள்’ என்ற இடத்தில், பிரமாண்ட தண்ணீர் சேமிப்புக் கிடங்கைக் கட்டியிருப்பதன் மூலம் அடுத்து மேக்கேதாட்டூ அணையையும் கட்டி முடிப்போம் என்று சவால் விடுத்திருக்கிறது, கர்நாடக அரசு. குடிசை வீடு வேயப்படுவதைப்போல், ஓரிரு நாளில், யார்கோள் அணை கட்டி முடிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில், கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவே கர்நாடகா அத்துமீறுவதற்குக் காரணம் என்று கொந்தளிக்கிறார்கள், தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள். மார்கண்டேய நதியில், கர்நாடக அரசு ரகசியமாக அணை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியபோதே, முதல் போராட்டம் நடத்தியவர், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான ராமகவுண்டர் என்பவர்தான்.

யார்கோள் அணை

Also Read: தென்பெண்ணை ஆற்றில் 162 அடி உயர அணை, அத்துமீறிய கர்நாடகா; அதிர்ச்சியில் தமிழகம்!

அணை கட்டியதன் பின்னணியில் கர்நாடகாவின் திட்டம் குறித்து ராமகவுண்டரிடம் பேசினோம். ``மார்கண்டேய நதியிலிருந்து தென்பெண்ணையாற்றுக்குப் பாய்ந்துவரும் தண்ணீரை நம்பிதான் தமிழகத்திலுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களும் பாசனம் பெறுகின்றன. கர்நாடகாவின் அத்துமீறலால், 6 மாவட்டங்களிலும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது, அணை கிடையாது. நீர் சேமிப்புக் கிடங்கு அல்லது ராட்சச தடுப்பணை என்றுதான் சொல்ல வேண்டும். அணை என்றால் மதகு இருக்கும். இதில், எதுவுமே இல்லை. பிரமாண்ட தடுப்புச்சுவரைப்போல் கட்டி எழுப்பியிருக்கிறார்கள். 2011-ம் ஆண்டு அடித்தளம் போட்டபோதே அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம்.

இதனால், தென்பெண்ணை ஆறு வறண்டுப் போகும். அதில், புல் முளைக்கும். தமிழகத்திலுள்ள 6 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் காரணம், தமிழக அரசியல் கட்சிகள்தான். தடுப்பணைப் பணிகள் நடைபெற்றபோது, ஒருவரும் வாய் திறக்கவில்லை. இப்போது, அறிக்கைக்கு மேல் அறிக்கை விடுகிறார்கள். இவையெல்லாம் தமிழக மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றுவதற்கான நாடகம். இதுதொடர்பாகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டாலும், தடுப்பணையை இடிக்கப் போவதில்லை. இந்நேரம் வீரப்பன் மட்டும் இருந்திருந்தால் நடப்பதே வேறு. இவ்வளவு பெரிய தடுப்பணையைக் கட்டுவதற்கு யோசித்துக்கூட இருக்காது, கர்நாடகா அரசு. அப்படியே முடிவெடுத்திருந்தாலும், பின்வாங்கும் சூழல் ஏற்பட்டிருக்கும்.

வீரப்பன்

Also Read: `விவசாயிகள் இல்லாமல் மேக்கேதாட்டூ ஆலோசனை கூட்டமா?' - வலுக்கும் ஆதங்க குரல்கள்!

வீரப்பன் உயிருடன் இருந்தபோது, தமிழகத்தின்மேல் கர்நாடகாவுக்குப் பயமிருந்தது என்ற பேச்சு இன்றளவிலும் விவசாயிகள் மத்தியில் உள்ளது. கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது அவர் வைத்த கோரிக்கைகளில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடணும் என்பதுவும் ஒன்று. ஒகேனக்கல், பாலாறு, மாதேஸ்வரன் மலை, மேக்கேதாட்டூ பகுதிகளில் வீரப்பனின் நடமாட்டம் காரணமாக கர்நாடகாவினர் எல்லைப் பகுதியில் அதிகம் அத்துமீறியதில்லை. காட்டையே கோட்டையாக வைத்திருந்த வீரப்பன் இறந்த பின்னர்தான், காட்டுக்குள்ளேயே ரோடு போட்டு மரம் வெட்டிக்கொண்டு செல்கிறார்கள். மேக்கேதாட்டூ விவகாரத்திலாவது, தமிழக ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்கிறார்.

மேலும், ``காட்டுப்பகுதி என்பதால் அரசு அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லவில்லை. அதன்பிறகு நானே, விவசாய சங்க நிர்வாகிகளுடன் தடுப்பணைக் கட்டப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று போட்டோ எடுத்து ஆவணத்துடன் புகார் தெரிவித்தேன். அந்த போட்டோ ஆல்பத்தை ஆதாரமாக வைத்துதான் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. தென்பெண்ணையாற்றின் பெரும் பகுதி தமிழகத்திலிருந்தாலும், நீர்ப்பிடிப்புப் பகுதி முழுவதும் கர்நாடகாவிலிருக்கிறது. இதனால், 164 அடி உயரத்துக்குத் தடுப்பணையைக் கட்டி தண்ணீரைச் சேமிக்க திட்டமிட்டிருக்கிறது, கர்நாடக அரசாங்கம்.

ராமகவுண்டர்

Also Read: ஒருபக்கம் மேக்கேதாட்டு.. மறுபக்கம் தென்பெண்ணை! - அடங்காத கர்நாடகா; தடுக்குமா தமிழக அரசு?

தடுப்பணைப் பகுதியிலேயே ஜல்லி அரவை இயந்திரங்கள் அமைத்து கற்களைக் கொண்டுவந்து உடைத்து பணிகளைச் செய்து முடித்திருக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில், முக்கிய பதவியிலிருந்த நபரின் பினாமிகள் மூலமாகவே மணல் விநியோகம் நடந்திருக்கிறது. அதுவும், தமிழகத்திலிருந்து மணலை லோடு, லோடாக அள்ளிச் சென்று கட்டுமானப் பணிகளுக்கு உதவியிருக்கிறார்கள். தற்சமயம், பைப்லைனையும் போட்டுவிட்டார்கள். இனிமேல், மார்கண்டேய நதியின் தண்ணீரை மொத்தமாக சேமித்து வைப்பார்கள். உபரி நீரை பைப்லைன் மூலம் எடுத்து வேறு இடத்தில் ஸ்டாக் வைத்துவிடுவார்கள்." என்கிறார் ராமகவுண்டர்.



source https://www.vikatan.com/news/agriculture/things-wouldve-been-different-if-veerappan-still-alive-farmer-activist-on-mekedatu-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக