Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

தமிழ் சினிமாவின் ஆக்ஸிஜன், ரசிகர்களின் தலைவன்…'உங்கள் விஜய்' எப்படி உருவானார்? #fanboyseries-1

கோலிவுட்டின் கமர்ஷியல் சினிமாக்கள் மீதும், கமர்ஷியல் பட ஹீரோக்கள் மீதும் சில கலைப்படைப்பாளிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் ஆதங்கமும் இருப்பதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்படும் படங்கள் மட்டுமே நல்ல சினிமா. அதை விடுத்து மற்ற பொழுதுபோக்குப் படங்கள் எல்லாம் ரசிக்கத் தகுதியவற்றவை, அவற்றை படமாக்க பெரிய மெனக்கெடல்கள் எதுவும் தேவைப்படுவதில்லை.

உண்மையில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்பதைத்தாண்டி, வெகுஜன ரசனையிலிருந்து மாறுபட்டு வெளியாகும் படங்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தன்மையைவிட மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்களே அதிகப்படியான ஜனநாயகத்தன்மையை இயற்கையாகவே தங்களுக்குள் பொதிந்து வைத்துள்ளன.

நாள் முழுவதும் உழைத்து, அலுத்து. களைத்து முன் வரிசையில் டிக்கெட் எடுத்து பார்க்கும் சாமானியன் தொடங்கி, பாப்கார்ன் வாங்கவே 300 ரூபாய் செலவழிக்கும் எலீட் ஆடியன்ஸ் வரை பரந்து விரிந்து எல்லா தரப்பு ரசிகர்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த ஜனரஞ்சகம்தான் கமர்ஷியல் படங்களின் ஜனநாயகத்தன்மைக்கான சான்று.

இந்த கமர்ஷியல் ஜனநாயகத்தில் வென்ற நடிகர்கள் கோட்டையில் கொடியேற்றும் அளவுக்கு செல்வாக்கு பெற்றது கோலிவுட்டின் அழிக்கமுடியாத வரலாறு. எவ்வளவுக்கு எவ்வளவு செல்வாக்கை பெற்றுத்தருமோ அதே அளவுக்கு இந்த வகை படங்கள் ரிஸ்க் ஆனவையும்கூட.

விஜய்

ஒரு இயல்பற்ற வித்தியாசமான படம் தோற்கும்போது ஏற்படும் இழப்பை விட ஒரு கமர்ஷியல் படம் தோற்கும் போது ஏற்படும் இழப்பும் நஷ்டமும் அதிகம். அந்தத் தோல்வி தயாரிப்பாளர்-நடிகர்-இயக்குநர் தொடங்கி டெக்னீஷியன்கள் வரை எல்லோரையுமே பாதிக்கும். ஒன்றிரண்டு படங்களிலேயே கரியர் காலியான நட்சத்திரங்கள் ஏராளம். கமர்ஷியல் எனும் முரட்டு குதிரையிடம் எத்தனை முறை அடிபட்டு விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வித்தையை கற்றுக்கொண்டு நீண்ட நெடிய வெற்றிப் பயணத்தை மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அந்த வெகு சிலரில் மிக முக்கியமானவர் ஜோசப் விஜய்!

'விஜய்' இந்த பெயர் தமிழ் சினிமாவிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. சாதாரண நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இன்று நம்பர் 1 நாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார்.

மூச்சு முட்டிக் கொண்டிருந்த திரையரங்குகளுக்கு விஜய்யின் படங்களே ஆக்ஸிஜனாக உயிர் கொடுக்கிறது. சினிமா நடிகர் என்பதைத்தாண்டி விஜய்யின் மீது வெறித்தனமாக அன்பு செலுத்த ஒரு பெருங்கூட்டமே உருவாகியிருக்கிறது. ஐ.டி ரெய்டின் போது நெய்வேலியில் விஜய்க்கு ஆதரவாக பெருங்கடலென கூடிய அந்த கூட்டமே இதற்கு சாட்சி. ஓடிடி- க்கள் மூலம் சினிமா முற்றிலும் வேறொன்றாக உருமாறிக் கொண்டிருக்கும் சூழலில், திரையரங்கின் மூலம் கோலிவுட்டிற்கு கிடைத்திருக்கும் கடைசி சூப்பர்ஸ்டார் விஜய்யே!

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜய் என்ற நிலையில் சிலருக்கு விஜய்யை தெரிந்திருக்கலாம். 90-களின் கட்டக்கடைசியில் பிறந்து ஒரு 2கே கிட்டாக வளர்ந்ததால் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி என்ற நிலைக்கு விஜய் உயர்ந்தபிறகுதான் அவர் எனக்கு அறிமுகமானார். எந்த படத்திலிருந்து விஜய்யை பிடிக்கும் என கேட்டால், ஒரு பதிலை என்னால் சொல்லவே முடியாது. எவ்வளவு யோசித்து பார்த்தாலும் எந்த படத்திலிருந்து விஜய்யை பிடிக்க ஆரம்பித்தது என்கிற கேள்விக்கு மட்டும் எப்போதும் விடை தெரிந்ததில்லை. காரண காரியம் எதுவுமின்றி நினைவு தெரிந்த நாளிலிருந்தே மனதுக்கு பிடித்த நடிகர் விஜய் மட்டுமே.

விஜய்

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’, ‘குஷி’ போன்ற படங்களுக்கு கைப்பிள்ளையாக இருக்கும்போது என்னையும் சேர்த்து தூக்கி சென்றிருக்கிறார் அம்மா. அப்போதே விஜய்யின் முகம் எனக்குள் அழுத்தமாக பதிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். '’இவன தூக்கிட்டு போய் விஜய் படமா பார்த்தது பெரிய தப்பா போச்சு. இப்ப விஜய்...விஜய்னு உசுரவிடுறான்’' என பின்னாட்களில் அம்மாவை புலம்பவிடும் அளவுக்கு விஜய் நேசனாக வளர்ந்தேன்.

'விஜய்' என்றவுடன் அனிச்சையாக வள்ளி ஆச்சியும் எனக்கு ஞாபகம் வந்துவிடுகிறார். வள்ளி ஆச்சிக்கு 60+ வயது இருக்கும். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். எனக்கும் என் தம்பிக்கும் டஃப் கொடுக்கும் அளவுக்கு தீவிரமான விஜய் ரசிகை. ‘வில்லு’ படத்தின் ட்ரெய்லரில் விஜய் பேசும் ‘'வில்லு... பவர்ஃபுல்லு'’ என்கிற வசனத்தை நாங்கள் பேசிக்காட்ட உட்காந்து ரசித்துக்கொண்டே இருப்பார்.

ஒருமுறை எங்கள் தெருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுவர் கூட்டம் விஜய் பாடலுக்கு டான்ஸைப்போட, ஸ்பீக்கர் சத்தத்தை கேட்டு தேய்த்துக்கொண்டிருந்த பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு விறுவிறுவென ஓட்டமும் நடையுமாக விநாயகர் மேடை பக்கம் ஓடினார் வள்ளி ஆச்சி. அந்த விஜய் பாடல் முடியும் வரை ஒரு ஓரமாக நின்று சிறுவர்களின் டான்ஸை பார்த்துவிட்டே வீட்டிற்கு திரும்பினார். ஓட்டமும் நடையுமாக விஜய் பாடலை பார்க்க வள்ளி ஆச்சி சென்றது ஒரு சித்திரமாக அப்படியே மனதில் நிற்கிறது.

60+ வயதில் இருந்த வள்ளி ஆச்சியும் விஜய் ரசிகர். திருமண வயதில் இருந்த அவருடைய மகனும் விஜய் ரசிகர். குட்டீஸ்களாக இருந்த நாங்களும் விஜய் ரசிகர்கள். கிட்டத்தட்ட ஒரு மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே விஜய் உருவாக்கி வைத்திருந்தார். ஒரு நடிகர் உச்சத்துக்கு உயர இதைவிட வேறென்ன தகுதி வேண்டும்?

விஜய்

விஜய் என்பவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி ஒரு உணர்வாக அன்றாட வாழ்வோடு கலந்தே இருந்தார். அப்பா வெறித்தனமான ரஜினி ரசிகர். 'இளந்தென்றல் ரஜினி ரசிகர் மன்றம்' என ரஜினியின் ஆரம்பகாலத்திலேயே அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய இளசுகளின் கூட்டத்தில் ஒருவர். ரஜினிக்காகவும் ரஜினி படங்களுக்காகவும் ஊருக்குள் பல அலப்பறைகளை செய்திருக்கிறார். 'கொடி பறக்குது' படத்திற்கு பெட்டி வர லேட் ஆனதால் ஒருநாள் முழுக்க தியேட்டர் வளாகத்திலேயே காத்துகிடந்து, மறுநாள் லத்தி அடியெல்லாம் வாங்கி படம் பார்த்த அனுபவத்தையெல்லாம் கேட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அந்த வெறித்தனமான ரசிகரின் ஜீன்களே கொஞ்சம் ஓவராக இருந்ததில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் ஒரு முறை சினிமா பார்த்து கெட்டுப்போகாதீர்கள் என்ற வகையில் வழக்கமான அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது 'ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா’, ‘கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா’ என கேட்டுவிட்டு கடைசியாக 'உங்கள் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?’ எனக்கேட்டார். விஜய்க்கு மட்டும் அந்த 'உங்கள் விஜய்' என்கிற பட்டம் ஏன்?

வள்ளி ஆச்சி மாதிரியான எம்.ஜி.ஆர் காலத்து ஆட்களையும் விஜய்யால் எப்படி கவர முடிகிறது? நாளை பார்க்கலாம்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/how-vijay-evolved-as-number-one-actor-in-tamil-cinema

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக