Ad

புதன், 16 ஜூன், 2021

`கிராமங்களும் கொரோனாவை வெல்லமுடியும்!' - சாதித்துக் காட்டிய சிட்லிங் பஞ்சாயத்து; நேரடி விசிட்

கொரோனா முதல் அலையில் அதிகளவில் பாதிக்கப்பட்டவை நகரங்களே. ஆனால், இரண்டாம் அலையில் நகரங்கள், கிராமங்கள் என்று பாகுபாடின்றி அனைத்துப் பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பபட்டன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நகரங்களில் மருத்துவமனைகளில் பெட்கள் கிடைக்காதா என்று அலைந்து திரிந்தனர்.

கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோர்

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் பஞ்சாயத்தில் மலைவாழ் மக்களுக்கான மருத்துவமனையில் கொரோனா வார்டை தொடங்கி அந்தப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு உதவி வருகின்றனர் ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ் அமைப்பினர். தற்போது கிராமங்களில் கொரோனா பரவும் விகிதத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

சிட்லிங் பஞ்சாயத்து, மலைவாழ் மக்கள் வாழும் இடத்தில் ஒரு முக்கிய பணியைச் செய்து வருகிறது என்று ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும் இந்த முயற்சிகளைப் பாராட்டியுள்ளது. மற்ற பஞ்சாயத்துகளும் இதை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றி அறிய தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் உள்ள சிட்லிங் பஞ்சாயத்துக்குப் பயணப்பட்டோம். தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டியிலிருந்து சேலம் மாவட்டம் தும்பல் செல்லும் மலைப்பாதையில் அமைந்திருக்கிறது சிட்லிங் (சித்தலிங்கி). ஊருக்கு இரண்டுபுறத்திலும் மலைத்தொடர் நீண்டு காட்சியளிக்கிறது. ஊரின் முகப்பிலேயே வரவேற்கிறது ட்ரைபல் ஹெல்த் இனிஷியேட்டிவ் (Tribal Health Initiative) மருத்துவமனை. பழங்கால ஓடுகளால் வேயப்பட்ட மருத்துவமனையில் உள்ளே நுழைந்ததும் வலதுபுறத்தில் புறநோயாளிகள் பிரிவு, இடதுபுறத்தில் பல் மருத்துவப் பிரிவு, அதற்கு எதிர்ப்புறத்தில் கொரோனா வார்டு, அதைக் கடந்து நேராகச் சென்றால் பிரசவப் பிரிவு. இங்கு சிகிச்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையோர் மலைவாழ் மக்கள். நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக ஒருவரைத் தவிர உள்ளே யாருக்கும் அனுமதியில்லை. கொரோனா வார்டை பார்வையிட்ட பிறகு, இதைத் தொடங்க காரணமாயிருந்த டாக்டர் ரெஜி ஜார்ஜைச் சந்தித்தோம்.

ரெஜி ஜார்ஜ்

அவர் பேசியபோது, ``கிராமங்களில் பணி செய்வதற்கு பெரும்பான்மையான மருத்துவர்கள் தயங்குகிறார்கள். அதுவும் மலைக்கிராமங்களில் பணி செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அப்படியிருந்த சூழ்நிலையில் 1993-ம் ஆண்டு சிறிய குடிலில் இங்கு மருத்துவமனையைத் தொடங்கினோம். இத்தனை ஆண்டுகளில் சந்திக்காத ஒரு பெரிய சவாலை இந்த கொரோனா காலத்தில் சந்தித்தோம். முதல் அலையில் கிராமங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாம் அலையில் கிராமங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அதன் தாக்கம் இங்கும் எதிரொலித்தது.

ஏனென்றால் சிட்லிங் பஞ்சாயத்திலிருந்து பெரும்பான்மையான மக்கள் விவசாய கூலி வேலைக்குச் செல்வது, விவசாய விளைபொருள்களை விற்பதற்குச் செல்வது, மற்ற வேலைகளுக்காகச் செல்வது என்று வெளியில் சென்று வருகிறார்கள். அப்படி சென்று வந்ததில் கோவிட் தொற்று இங்கும் பரவ ஆரம்பித்தது. நிறைய பேர் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு என்று அவதிப்பட்டார்கள். காரணம் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில்லை, தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான வசதியும் இல்லை. இதை உணர்ந்து கடந்த மே முதல் வாரத்தில் இங்கே 15 படுக்கைகளுடன் கொரோனா வார்டைத் தொடங்கினோம்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்

கையிலிருந்த நிதியோடு மும்பை, டெல்லி என்று தெரிந்து நண்பர்களிடமிருந்து மாஸ்க், பி.சி.ஆர் கிட், டெஸ்ட்டுக்கான கிட், மருந்து, மாத்திரைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று வாங்கினோம். இங்கே சி.டி ஸ்கேன் எடுக்கும் வசதியில்லை. அதனால் வாழப்பாடிக்கு அனுப்பி அங்கே சி.டி ஸ்கேன் எடுக்க வைத்தோம். இங்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பான்மையோர் விவசாயிகள், விவசாயக் கூலிகள். அதனால் ஸ்கேனுக்காகக் கட்டணத்தை நாங்களே கட்டினோம்.

ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் கொரோனாவால் ஒருவர் இறந்து போய்விட்டார். இரண்டு பேர் மருத்துவமனைக்கு வராமலேயே இறந்து போய்விட்டனர். எங்கள் வார்டிலும் ஒருவர் இறந்தார். இதுவரை 400 பேருக்கு கொரோனா சிகிச்சை அளித்திருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகளுக்கே சென்று கொரோனா தாக்குதலிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது என்று விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறோம்” என்றார்.

கொரோனா வார்டு

கொரோனா வார்டை நிர்வகித்து வரும் டாக்டர் சங்கீதா பேசியபோது, ``கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறோம். முதல் நிலை லேசான காய்ச்சல், சளி இருப்பவர்களுக்கு மாத்திரைகள் கொடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள சொல்கிறோம். இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இங்கே அனுமதித்து சிகிச்சை அளிக்கிறோம். மூன்றாம் நிலையில் அதிக பாதிப்பு உள்ளவர்களை வெளியில் பார்த்துக்கொள்ள சொல்கிறோம். பெரும்பாலும் முதல் நிலை அல்லது இரண்டாம் நிலையிலேயே குணப்படுத்தி அனுப்பி விடுகிறோம்.

மூன்றாம் நிலைக்கு அதிகம் யாரும் செல்வதில்லை. கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரத்துக்காக கம்யூனிட்டி ஹெல்த் டீம் அமைத்திருக்கிறோம். அவர்கள்தாம் இந்தப் பணிகளைச் செய்து வருகிறார்கள். கொரோனா வார்டில் இரண்டு செவிலியர் பணிபுரிகிறார்கள். அவர்கள்தாம் நோயாளிகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். மூன்று வேலை உணவு, மருந்து, மாத்திரைகள், ஆக்ஸிஜன் அனைத்தும் இலவசமாகக் கொடுத்து காப்பாற்றி அனுப்புகிறோம். இங்கே சிகிச்சைக்காக வருபவர்களுக்கு எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை. இந்தப் பகுதியில் உள்ளோர் அனைவரும் வந்து இங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

டாக்டர் சங்கீதா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட, ஏ.கே தண்டா கிராமத்தைச் சேர்ந்த தனபால் பேசியபோது, ``போன மாசம் என் தம்பிக்கு கொரோனா தாக்குச்சு. சரியான சிகிச்சை கிடைக்காததால இறந்துபோயிட்டான். 12 நாள்களுக்கு முன்ன எனக்கு கொரோனா தாக்குச்சு. பக்கத்திலே இருந்த இந்த மருத்துவமனையில வந்து அட்மிட் ஆனேன். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல்னுனு அறிகுறிகளோடு இருந்துச்சு. இப்போ ஓரளவுக்கு நல்லாயிட்டேன். செத்து பிழைச்சிருக்கேன்னுதான் சொல்லணும்.

இந்தக் காட்டுப்பகுதில கொரோனா மருத்துவமனை இருக்கிறதாலதான் என்னைக் காப்பாத்த முடிஞ்சிருக்கு. இல்லைனா எங்க தம்பி மாதிரி போய் சேந்திருப்பேன். இன்னொண்ணு இங்கே இருக்கிறவங்க ரொம்ப அன்பா பார்த்துக்குறாங்க. நேரத்துக்கு சாப்பாடு கொடுத்திடுறாங்க. சிகிச்சையும் நல்லா தரமா இருக்குது. லட்சம் லட்சமா செலவு பண்ணி மருத்துவம் பார்த்தாலும் இந்த வசதி கிடைக்காது. மலைவாழ் மக்களோட உயிருக்குப் பாதுகாப்பு கிடைச்சிருக்கு” என்றார்.

கொரோனா வார்டு

Also Read: Covid Questions: வீட்டிலிருக்கும் தடுப்பூசி போடாத முதியவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது எப்படி?

சிட்லிங் பஞ்சாயத்து தலைவர் மாதேஸ்வரி மஞ்சுநாத் பேசியபோது, ``சிட்லிங்கிலிருந்து தர்மபுரி சுமார் 100 கி.மீ, சேலம் 85 கி.மீ. இங்கிருந்து கொரோனா சிகிச்சைக்கு போகணும்னா இவ்வளவு தூரம் பயணப்பட்டே ஆகணும். அப்படியே போனாலும் இடம் கிடைப்பது அதைவிட பெரிய விஷயம். இதனால கொரோனா தொற்று முற்றிப்போய் 4 உயிர்களை இழந்துட்டோம். சிட்லிங் பஞ்சாயத்தில் 42 குக்கிராமங்கள் இருக்கின்றன.

15,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். இங்கு தொடங்கப்பட்ட கொரோனா வார்டு மூலம் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். நிறைய பேர் மருத்துவமனைக்கு வருவதற்கே தயங்கினார்கள்.

மாதேஸ்வரி மஞ்சுநாத்

அதற்கு தன்னார்வலர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி கிராமம்தோறும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தோம். மருத்துவமனையின் உதவி எண்களைக் கொடுத்து அதில் ஆலோசனை பெற வைத்தோம். அதன்பிறகே, மருத்துவமனைக்கு வராதவர்கள்கூட பிறகு வந்தார்கள்.

Also Read: கொரோனா: அரசின் உதவிகளைப் பெறமுடியாமல் தவிக்கும் திருநர் சமூகம்; தீர்வு என்ன?

அதேமாதிரி இலவச மருத்துவ ஆலோசனை மையம் அமைத்தோம். கிராமங்களில் தண்டோரா மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இப்படிப் பல பணிகளால் சிட்லிங் பஞ்சாயத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. கிராமங்களிலும் கொரோனா வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க முடியும் என்ற என்பதைச் சாதித்துக் காட்டியிருக்கிறோம். இது மற்ற பஞ்சாயத்துகளுக்கு ஒரு முன்மாதிரி” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/how-dharmapuri-sittilingi-panchayat-successfully-tackled-covid-19-on-its-own

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக