Ad

வியாழன், 17 ஜூன், 2021

முகேஷ் அம்பானி இல்ல பாதுகாப்பு குளறுபடி: மும்பை என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் பிரதீப் சர்மா கைது!

மும்பையில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டிற்கு அருகில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிரச்னையை சரியாக கையாளததால் மும்பை போலீஸ் கமிஷனர் பிரதீப் சர்மா இடமாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே வெடிகுண்டுகள் இருந்த காரின் உரிமையாளர் மன்சுக் கிரண் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார். இந்த வெடிகுண்டு சம்பவம் மற்றும் கிரண் கொலை தொடர்பாக என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டும், குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியுமான சச்சின் வாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது.

அம்பானி வீட்டின் நுழைவு வாயில்

இது தவிர இவ்வழக்கில் மேலும் 3 போலீஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் பிரதீப் சர்மாவை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இன்று காலையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் உள்ளூர் போலீஸாரின் துணையோடு அந்தேரியில் உள்ள பிரதீப் சர்மா வீட்டில் ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பிரதீப் சர்மா கடந்த ஏப்ரல் மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சி முன்பு ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இவ்வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இப்போது பிரதீப் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சச்சின் வாசும், பிரதீப் சர்மாவும் மிகவும் நெருக்கமானவர்கள் ஆவர். தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு கிடைத்துள்ள சில ஆதாரங்களை உறுதி செய்து கொள்ள பிரதீப் சர்மாவை கைது செய்துள்ளனர். அதோடு அம்பானி வீட்டிற்கு அருகில் வெடிகுண்டுடன் நிறுத்தப்பட்ட கார் உரிமையாளரை கொலை செய்வது தொடர்பாக சச்சின் வாஸ் பிரதீப் சர்மாவை சந்தித்து பேசியிருக்கிறார்.

சச்சின் வாஸ்

கிரண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு தனது போன் வாட்ஸ் ஆப்பில் இருந்து கால் செய்துள்ளார். அதன் சிக்னல் அந்தேரியில் காட்டுகிறது. அந்தேரியில் தான் பிரதீப் சர்மா இருந்திருக்கிறார். இது குறித்து தெளிவுபடுத்திக்கொள்ளவும் தேசிய புலனாய்வு ஏஜென்சி முடிவு செய்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதீப் சர்மா நாலாசோபாரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு முன்பு அதாவது பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெரும் முன்பாக தானேயில் பிரட்டி பணம் பறித்தல் தடுப்பு பிரிவு போலீஸ் தலைவராக பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்த போது தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் கேஷ்கர் என்பவரை பிரதீப் சர்மா கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Also Read: அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் - ஸ்டார் ஹோட்டலில் தங்கி, திட்டம் தீட்டிய அதிகாரி

பணியில் இருந்த போது பிரதீப் சர்மா மும்பையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல கிரிமினல்களை என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொலை செய்து என்கவுன்டர் ஸ்பெலிஸ்ட் என்று பெயர் எடுத்தார். ஆனால் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி மாநில அரசு பிரதீப் சர்மாவை 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. ஆனால் 2009-ம் ஆண்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பிரதீப் சர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து மராத்தியில் படமும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/crime/mumbai-encounter-specialist-pradeep-sharma-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக