Ad

வியாழன், 17 ஜூன், 2021

நுரையீரலை வலுவாக்கும் மூச்சுப்பயிற்சிகள், தினமும் செய்யவேண்டிய யோகாசனங்கள் - நீங்களும் பங்கேற்கலாம்!

உடல் ஆரோக்கியமும் உள்ள ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. இரண்டுமான மருந்தாக விளங்குவது யோகக் கலை என்பது ஞானிகளின் வாக்கு. நல்வாழ்வுக்கு எப்படி நல்ல உணவும் நல்ல பழக்க வழக்கங்களும் தேவையோ அதேபோன்று உடற்பயிற்சியும் அவசியம். யோகக்கலை நம் வாழ்வோடு இணைந்த ஒரு கலை. அதிலும் இந்த கொரோனா காலத்தில் அதன் அவசியம் மிகவும் இன்றியமையாததாகிறது.

இந்த உடலில் பிராணன் இருப்பதால்தான் நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம். நம் உடலில் இருக்கும் அனைத்தையும் இயக்குவது பிராணனே. அப்படிப்பட்ட பிராணனை தினமும் வலுவுள்ளதாக ஆக்குவதே மூச்சுப்பயிற்சி. தினமும் பிராணனை முறைப்படி உள்ளிழுத்து நிலை நிறுத்தி வெளியேற்றவதன் மூலம் நம் நுரையீரலை வலுப்படுத்த முடியும். இந்தப் பயிற்சிகள் மூலம் நுரையீரலில் தோற்று ஏற்படாதவண்ணம் பாதுகாக்கலாம். இவ்வாறு செய்யப்படும் மூச்சுப்பயிற்சிகள் இன்று கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகின்றன.

யோகா

மூச்சுப் பயிற்சிகள் மட்டுமின்றி உடலின் சரியான இயக்கத்துக்கும் யோகாவில் பல்வேறு ஆசனங்கள் உள்ளன. யோக சாஸ்திரத்தில் மொத்தம் 84 லட்சம் ஆசனங்கள் இருக்கின்றன என்கிறார் பதஞ்சலி முனிவர். ஒருவர் அனைத்து ஆசனங்களையும் கற்றுக்கொள்வது சாத்தியமில்லை. அதேவேளையில் தேவையும் இல்லை. மாறிவிட்ட நம் வாழ்வியலில் உடல் உழைப்பு குறைந்து பருமனும் வாழ்வியல் சார்ந்த நோய்களும் அதிகரித்துவருகின்றன. இதை மாற்ற உடல் பயிற்சியும் குறிப்பாக யோகப் பயிற்சியும் அவசியம். உடலை சுறுசுறுப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ளும் ஒரு சில ஆசனங்களை அறிந்துகொண்டு தினமும் அவற்றைப் பயிற்சி செய்தாலே போதும்.

யோகப் பயிற்சியின் முக்கியத்துவத்தை இன்று சர்வதேச சமூகம் நன்கு அறிந்துள்ளது. அனைத்து நாடுகளும் யோகம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், யோகாவின் பிறப்பிடமான நம் பாரததேசத்தில் அதைப் பின்பற்றுபவர்கள் மிகக் குறைவாக மாறிவிட்டார்கள். இதை மாற்றி அனைவரும் ஆரோக்கியமான வாழ்வியலுக்குத் திரும்ப வேண்டும். இதையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் யோகா புவனம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் புவனேஸ்வரி.

டாக்டர் புவனேஸ்வரி

இவர் யோகக் கலையில் டாக்டர் பட்டம் பெற்றவர். சிறுவயது முதலே யோகக் கலையில் ஆர்வம் கொண்டு ரிஷிகேஷிலும் கேரளாவில் இருக்கும் சிவானந்த குருகுலத்திலும் தங்கி யோகம் பயின்றார். தற்போது யோகா புவனம் என்னும் அமைப்பை நிறுவி யோகக் கலைகளைப் பரப்பிவருவதோடு யோகாவின் மூலம் நோய்களைத் தீர்க்கும் மகத்தான பணியையும் செய்து வருகிறார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விகடன் வாசகர்களுக்காகப் பலனுள்ள யோகப் பயிற்சிகளை கற்றுத்தர இருக்கிறார் டாக்டர் புவனேஸ்வரி. இணையம் மூலம் நடைபெற இருக்கும் கட்டணமில்லாத இந்தப் பயிற்சியில் நுரையீரலை வலுவாக்கும் மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தினமும் செய்ய வேண்டிய எளிய யோகாசனங்கள் ஆகியவற்றைக் கற்றுத்தர இருக்கிறார்.
யோகா

இந்த வகுப்பில் ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும் கபால பாத்தி, நாடிகள் அனைத்தையும் சுத்தி செய்யும் நாடிசுத்திப் பயிற்சி ஆகிய மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து அடிவயிற்றிலிருக்கும் கொழுப்புகள் கரைக்கும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளைப் போக்கும் துவிபாத உடானாசனா, வயிற்றில் இருக்கும் தேவையற்ற வாயுக்களை வெளியேற்றும் பவன முக்தாசனம், அல்சைமர், ஸ்ட்ரோக் ஆகியவற்றைத் தவிர்த்து முகப்பொலிவை அதிகமாக்கும் சர்வாங்காசனா, முதுகு மற்றும் கழுத்தைப் பகுதியை வலுப்படுத்தும் புஜங்காசனா, ரத்த அழுத்தம், நெஞ்சுவலி ஆகியவற்றுக்கு நல்ல தீர்வாகும் தனுர் ஆசனா இவற்றோடு அன்றாட வாழ்வை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும் சூரிய நமஸ்காரம் ஆகியவற்றை நமக்காகக் கற்றுத்தர இருக்கிறார்.

யோகா வகுப்பு

நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு இட்டுச்செல்லும் முதலீடாக இந்தப் பயிற்சி வகுப்பில் செலவு செய்யும் நேரம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாள்: 21.6.21 காலை 6.30 முதல் 7.30 வரை

கட்டணமில்லாத இந்தப் பயிற்சியில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/lifestyle/yoga/international-yoga-day-online-event-by-sakthi-vikatan-and-aval-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக