Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

தஞ்சாவூர் : `எனக்கு வேற வழி தெரியல!' வீடியோவில் கதறிய பெண்; நெகிழ வைத்த கலெக்டர்!

பேராவூரணி அருகே பட்டா இல்லாததால் வீடு கட்ட முடியாமலும், அருகில் வசிப்பவர் பிரச்னை செய்து வந்ததாலும் தொடர் துயரங்களை சந்தித்து வந்த பெண் எனக்கு நியாயம் கிடக்கணும் என கூறி கதறியபடி கலெக்டருக்கு கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அடுத்த 24 மணி நேரத்தில் கலெக்டர் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று பட்டாவினை வழங்கியுள்ளார். 'பல வருட பிரச்னையை ஒரு நாள்ல தீர்த்துட்டார் கலெக்டர்' என அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நெகிழ்ந்துள்ளனர்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி பட்டத்தூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணியம்மை. வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவரது கணவர் பாஸ்கரன் கொரோனா பரவல் மற்றும் பாஸ்போர்ட் கையில் இல்லாத காரணங்களால் சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.மணியம்மை தனது 2 குழந்தைகளுடன் சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார். குடிசை வீட்டின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளால் மழைக் காலங்களில் வீட்டுக்குள் மழை நீர் ஒழுகும் இதனால் பல வித இன்னல்களைத் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து மணியம்மை சந்தித்து வந்தார்.

இதையடுத்து கடன் வாங்கி தனது கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அருகில் வசிக்கும் செல்லக்கண்ணு என்பவர் இந்த இடம் எனது பெயரில் உள்ளது எனக் கூறி அதனை தடுத்து வந்ததுடன் தொடர்ந்து பிரச்னை செய்துள்ளார்.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணியம்மை, "கலெக்டர் அய்யா நான் கும்பிடுறேன். செல்லக்கண்ணு என்பவர் என்னை வீடுகட்ட விடாமல் தடுத்து பிரச்னை செய்து வருகிறார்.அஞ்சு வருஷமா நாங்க படாத கஷ்டமே இல்ல. என் உடம்புல தெம்பில்ல. எனக்கு நீதி கிடைக்கனும் இல்லைனா நான் சாகுறதைத் தவிர வேறு வழியில்லை!" எனக் கதறியபடி பேசி அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

பெண்ணுக்கு பட்டா வழங்கும் கலெக்டர்

சமூக வலைதளங்களில் வைரான அந்த வீடியோ தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்திற்கு சென்றது. உடனடியாக அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்னை என விசாரித்தார்.அதில் மனியம்மைக்கு பட்டா இல்லை என்பதும் விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தி கொண்டு வீடு கட்ட விடாமல் அருகில் இருப்பவர் தடுத்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மணியம்மைக்கு உடனடியாக பட்டா வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்யும்படி பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமியிடம் தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொனராஜ் ஆலிவர் மணியம்மையின் வீட்டிற்கு நேரடியாக சென்று பட்டாவினை வழங்கினார்.அதோடு மணியம்மை வீட்டின் அருகிலேயே வசிக்கும் இதே பிரச்னையை சந்தித்து வந்த ராஜாமணி என்ற பெண்ணுக்கும் பட்டாவினை வழங்கினார். வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்ட 24 மணி நேரத்தில் தன் கையில் பட்டா கிடைப்பதற்கான ஏற்பாட்டை செய்த கலெக்டரின் செயலை எண்ணி மணியம்மை குடும்பத்தினர் நெகிழ்ந்தனர்.

மணியம்மை குடும்பத்தினர்

மணியம்மையிடம் பேசினோம், "எங்க பேர்ல பட்டா இல்லாததால கடந்த சில ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டத்துக்கு அளவே இல்ல.பாதுகாப்பான ஒரு சின்ன வீட்ட கட்டி புள்ளங்களை கஷ்டம் இல்லாம வளக்க நெனச்சேன்.ஆனால் பக்கத்துல இருக்குற செல்லக்கண்ணு பிரச்னை செய்து அடிக்கடி அருவா எடுத்து வெட்ட வருவார்.இப்படி தெனம் சாவுறத விட ஒரேயடியா செத்து போயிடலாமுனு நெனச்சேன் எனக்கு வேறு வழியும் தெரியலை. கடைசிய நம்பிக்கையாக என்னோட துயரத்தை வீடியோ மூலம் கலெக்டர்கிட்ட தெரியப்படுத்தினேன்.எங்க கஷ்டத்தை உணர்ந்த கலெக்டர் சார் நேரடியாக எங்க வீட்டு வந்து எங்களுக்கான பட்டாவை வழங்கினார். கலெக்டர் சார் செஞ்சது என் வாழ் நாளுக்குமான உதவி" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/thanjavur-collector-helped-a-family-after-a-viral-video-which-shows-that-familys-trouble

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக