Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

மகனுக்காகக் குறிவைக்கும் வெல்லமண்டி; எச்சரித்த வைத்திலிங்கம்!-என்ன நடக்கிறது திருச்சி அதிமுக-வில்?

`திருச்சி அ.தி.மு.க-வில் நடக்கும் கூட்டத்தில் கோஷ்டி மோதலைத் தவிர்த்தால் மட்டுமே இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியும்’ என நிர்வாகிகளுக்கு வைத்திலிங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், `இது தேர்தல் தொடர்பான கூட்டமா இல்லை அமைச்சரின் மகனுக்கு சீட்டுக்கு அச்சாரம் போடும் கூட்டமா..’ என அ.தி.மு.க நிர்வாகிகளே அமைச்சர் வெல்லமண்டியைப் பார்த்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

என்ன நடக்கிறது திருச்சி அ.தி.மு.க-வில்?

திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க-வின் இளைஞர், இளம் பெண்கள் பாசறை பூத் கமிட்டி, மாவட்டச் செயல்வீரர்கள் மற்றும் மாநகர், மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சி காஜாமலை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வைத்திலிங்கம்

எப்போதும் இல்லாத அளவுக்குப் புகழ்ந்து போஸ்டர்களும், ஃபளெக்ஸ் பேனர்களும் வைத்து வைத்திலிங்கத்தை அசத்தினர் வெல்லமண்டியின் ஆதரவாளர்கள். அதில் குறிப்பாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேருவை முன்னிலைப்படுத்தியிருந்ததுதான் திருச்சி அரசியல் ஹாட் டாபிக்.

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசுகையில், ``உலகை ஆளும் ஆங்கிலத்துக்கும், இந்தியாவில் அதிகம் பேசப்படும் இந்திக்கும் பல்கலைக்கழகம் இல்லாத நிலையில் தமிழுக்குப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த பெருமை எம்.ஜி.ஆரைச் சேரும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மறைந்துவிடும் என எதிர்க்கட்சிகள் நினைத்த வேளையில் எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிவருகின்றனர்.

வைத்திலிங்கம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலைப்போல் அல்லாமல் 20 சதவிகிதம் கூடுதல் வாக்குகள் பெற முழுமூச்சாகப் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் 25 பேர்கொண்ட பூத் கமிட்டிகள் அமைத்து, எதிர்க்கட்சிகளுக்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காமல் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மார்ச்சில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கவிருக்கிறது. அதற்காக நாம் இப்போதே தயாராகிவிடுவோம்” என்று பேசினார்.

அதன் பிறகு நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். என்ன பேசினார்... என்ன நடந்தது என்று திருச்சி அ.தி.மு.க-வில் உள்விவகாரம் அறிந்தவர்கள் சிலரிடம் பேசினோம்.

``தேர்தல் தொடர்பாகவும், கோஷ்டிப்பூசலை தவிர்க்கவும்தான் இந்தக் கூட்டத்தை நடத்தினார்கள். ஆனால், இது அமைச்சரின் மகனுக்கு சீட் கேட்பதற்காக அச்சாரம் போடும் கூட்டமாக மாறியிருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுகிறது. மாநகர் மா.செ-வும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனுக்கும், புறநகர் மாவட்டச் செயலாளர் குமாருக்கும் பல வருடங்களாகப் பனிப்போர் நிலவிவருகிறது.

குமார்!? - திருச்சி அ.தி.மு.க. புகைச்சல்

அதேபோல், அமைச்சர் வளர்மதிக்கும் குமாருக்கும் ஆகாது. அத்தோடு மா.செ பரஞ்ஜோதிக்கும் வளர்மதிக்கும் ஆகாது. இதுபோல் இடியாப்பச் சிக்கலில் திருச்சி அ.தி.மு.க இருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட வைத்திலிங்கம், `முக்கிய நிர்வாகிகளான நீங்களே இப்படி நடந்துகொண்டால் என்ன அர்த்தம். உங்களது கோஷ்டிப்பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தியுங்கள்.

ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார் பரஞ்ஜோதி!

நீங்கள் இப்படி அடித்துக்கொண்டால் தி.மு.க-வுக்கு அது சாதகமாக மாறாதா? உங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை போக்கிவிட்டுத் தேர்தலைச் சந்தியுங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தத் தேர்தலில் வெற்றி பெறமுடியும்’ எனச் சூசகமாகப் பேசியதோடு, தேர்தல் தொடர்பான பணிகள் குறித்தும் பேசியிருக்கிறார்” என்கின்றனர்.

`வைத்தியலிங்கத்தை அமைச்சர் வெல்லமண்டி தூக்கிப் பிடிக்க என்ன காரணம்?’ என்று விசாரித்தபோது, ``திரைமறைவில் இருந்துவந்த வெல்லமண்டியின் மகன் ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைப் போட்டு போஸ்டர்களும் பேனர்களும் அடித்து, திருச்சி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.

போஸ்டர்கள், பேனர்கள்

`எனக்கு சீட் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. தன் மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும்’ எனப் பலமுறை தலைமையை நாடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில், தற்பொழுது ஒரு படி மேலே போய், தேர்தல் நேரம் நெருங்குவதால் மகனை முன்னிலைப்படுத்தச் சொல்லி கட்சி நிர்வாகிகளுக்கு மறைமுக உத்தரவைப் பிறப்பித்திருப்பதால் வழக்கத்தைவிட இந்த முறை ஜவஹரின் புகைப்படத்தைப் போட்டு பேனர் வைத்திருக்கிறார்கள்.

அமைச்சரின் மகன்

தலைமையிடம் ஜவஹருக்கு சீட் கேட்க வைத்திலிங்கத்தை வைத்துக் காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார். அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தத் தொகுதியை தி.மு.க கைப்பற்றும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது” எனக் கோபத்தோடு முடித்துக்கொண்டனர்.



source https://www.vikatan.com/news/politics/trichy-vellamandi-nadarajan-targets-seat-for-son-whats-happening-in-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக