Ad

ஞாயிறு, 5 ஜூன், 2022

சென்னை: திருமணமான 5 மாதங்களில் ஒரே புடவையில் தூக்கிட்டு இளம் தம்பதி தற்கொலை - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் 3.6.2022-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``என் தங்கை ஆர்த்தி (20). இவருக்கும் என் அம்மாவின் அண்ணன் மகன் சக்திவேலுக்கும் (22) கடந்த 2022-ம் ஆண்டு, ஜனவரியில் திருமணம் நடந்தது. திருமணமாகி 5 மாதங்களாகின்றன. கடந்த 15 நாள்களாக சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகரில் ஆர்த்தியும் சக்திவேலும் வாடகைக்குக் குடியிருந்துவந்தனர். சக்திவேல், பழைய இரும்புக்கடை ஒன்றை கவனித்துவருகிறார்.

திருமணம்

கடந்த 3.6.2022-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் குடியிருக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த சித்திரைக்குட்டி என்பவர் எனக்கு போன் செய்து எனது தங்கை ஆர்த்தியும் அவரின் கணவர் சக்திவேலும் வீட்டிலுள்ள மின்விசிறி கொக்கியில் ஒரே புடவையில் ஆளுக்கொரு பக்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினார். உடனடியாக நான் அங்கு சென்று பார்த்தேன். அப்போது ஆர்த்தியும் சக்திவேலும் சடலமாகக் கிடந்தனர். என்ன நடந்தது என சக்திவேலின் அண்ணன் முத்துவிடம் விசாரித்தேன். அப்போது அவர், `கடந்த 2.6.2022-ம் தேதி இரவு 8:15 மணியளவில் சக்திவேல் தன்னிடம் போனில் பேசியதாகவும், அப்போது மதுரவாயல் கங்கையம்மன் நகரில் உள்ள பழைய இரும்புக்கடையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதாகவும் கூறினான்.

பின்னர் 3-ம் தேதி சக்திவேலுக்கும் ஆர்த்திக்கும் போன் செய்தபோது அவர்கள் போனை எடுக்கவில்லை. அதனால் சித்திரைவேலுக்கு போன் செய்து சக்திவேலின் வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி கூறினேன். அப்போது கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக சித்திரைவேல் பார்த்தபோது ஆர்த்தியும் சக்திவேலும் ஹாலில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தனர்' என்று கண்ணீர்மல்க முத்து என்னிடம் கூறினார். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியோடு இருவரையும் கீழே இறக்கிப் பார்த்தபோது அவர்கள் இறந்தது தெரியவந்தது. அவர்கள் அருகில் ஒரு பேப்பரில், எனது பிறப்பு உறுப்பின் நரம்பு உடைந்துபோனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்கள் இருவரும் சாகிறோம். இதில் யாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என எழுதப்பட்டிருந்தது. அதில் சக்திவேலும் ஆர்த்தியும் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்கொலை கடிதம்

எனவே இறந்துபோன என் தங்கை ஆர்த்தி, அவரின் கணவர் சக்திவேல் இறப்பு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். ஆர்த்தி, சக்திவேல் ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது குறித்து மதுரவாயல் போலீஸார் கூறுகையில், ``புதுமணத் தம்பதியான ஆர்த்தியும் சக்திவேலும் சந்தோஷமாக இல்லற வாழ்க்கையை சென்னையில் தொடங்கியுள்ளனர். அப்போது சக்திவேலின் பிறப்பு உறுப்பின் நரம்பு உடைந்ததாகவும் அதற்கு அவர்கள் போதிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. வெளியில் சொன்னால் அவமானம் எனக் கருதி இந்த முடிவை இருவரும் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது தொடர்பாக இருவரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்திவருகிறோம். தொடர்ந்து செல்போன் அழைப்புகள், தற்கொலைக் கடிதம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இருவரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/couple-commits-suicide-in-chennai-after-5-months-of-marriage-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக