Ad

வியாழன், 6 ஜனவரி, 2022

`இப்படியும் நடக்கலாம் ஆன்லைன் மோசடிகள்!' - எச்சரிக்கும் குமரி போலீஸ்

மோசடிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என சொல்லும் அளவுக்கு தினமும் தினுசு தினுசாக ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்ட சைபர் செல்லுக்கு சமீபத்தில் வந்த சில மோசடி புகார்கள் போலீஸாரையே அதிர வைத்துள்ளன. அந்த மோசடிகளின் ரகங்களை இங்கு வரிசையாக பார்க்கலாம். இதில் புகார்தாரர்களின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.

1. கூரியர் அனுப்பினால் கூட நம் பணத்தை கூறுபோட்டுவிடுவார்கள் என்பதை உணர்த்து ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. சுபின் என்பவர் 23.12.2021 அன்று ஒரு தனியார் கூரியர் சர்வீஸ் மூலமாக ஒரு தபால் அனுப்பியிருக்கிறார். அந்த தபால் அவர் கொடுத்த முகவரிக்கு போய் சேராததால், இணையதளத்தில் கஸ்டமர் சர்வீஸ் எண்ணை தேடி எடுத்து போன் செய்து கேட்டிருக்கிறார். அதற்கு கஸ்டமர் கேரில் இருந்து பேசிய நபர் டெலிவரி அட்ரஸ் அப்டேட் செய்வதற்கு என ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் அவரின் மொபைலுக்கு ஒரு ஓ.டி.பி சென்றுள்ளது. அவர் அந்த ஓ.டி.பி-யை பதிவு செய்தவுடன் அவரின் வங்கி கணக்கில் இருந்து 1,44,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் மோசடி

2. இ மெயிலையும் கவனமாக கையாள வேண்டும் என்பதை மற்றொரு சம்பவம் விளக்குகிறது. மடவிளாகம் பகுதியை சேர்ந்த ராபின் என்பவரின் ஜி மெயில் கணக்கில் 23.12.2021 அன்று ஸ்க்ராட்ச் கார்ட் ரிவார்ட் (Scratch card Reward) ரூ.3269 என்று ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜை ஓபன் செய்து, பணம் பெறும் ஆசையில் தனது வங்கி விபரத்தை தெரிய படுத்தியுள்ளார். பணம் வருவதற்கு பதில், ராபினின் வங்கி கணக்கில் இருந்து 3269 ரூபாய் காணாமல் போயுள்ளது.

3. ஆன்லைனில் வரும் விளம்பரங்களில் உஷாராக இருக்க வேண்டும். கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவருக்கு அறிமுகம் இல்லாத வாட்ஸ் அப் எண்ணில் இருந்து நாய் விற்பனைக்கு என்ற விளம்பரம் 23.12.2021 அன்று வந்துள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு 10,000 ரூபாய்க்கு நாயை விலை முடித்திருக்கிறார் அஜய். அவர் கூறிய முகவரியில் பணத்தை அனுப்பிவிட்டு காத்திருந்திருக்கிறார். நாய் டெலிவரி ஆகவில்லை.

4. மேக்காமண்டபம் பகுதியைச்சேர்ந்த ரமேஷ் என்பவர் மொபைலுக்கு பார்ட் டைம் ஜாப் என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அவரும் அந்த குறுஞ்செய்தியில் வந்த எண்ணின் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, வின் சாட் ஆப்பில் (Winchest App) ரீசார்ஜ் செய்தால் வருமானம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். ரமேஷ் பல தவணைகளாக 4,83,000 ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். அதன் பின்னர் அந்த முதலீட்டு நிறுவனத்திலிருந்து எந்த தகவலும் இல்லை. ரமேஷ்-ஆல் அந்த நிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை. பணத்தை தொலைத்தவர் இப்போது புலம்பிக்கொண்டிருகிறார்.

5. கோட்டார் பகுதியை சேர்ந்த மதன் என்பவரின் செல்போனுக்கு போன் செய்த ஒருவர், எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் என்று அதிமுகம் செய்து பேசியவர், ஏ.டி.எம் கார்டு ரினீவல் செய்து தருவதாகக் கூறி, கூகுள் பே-க்கு ஒரு பாகோட் ஸ்கேனர் (Barcode Scanner) அனுப்பியிருக்கிறார். அந்த பார்கோடை ஸ்கேன் செய்யும்படி ஆத நபர் கூறியதை நம்பி, மதன் ஸ்கேன் செய்துள்ளார். உடனே அவரின் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் இருந்து 9,445 ரூபாய் திருடப்பட்டது.

கன்னியாகுமரி எஸ்.பி பத்ரி நாராயணன்

கடைசியாக சொன்ன இரண்டு மோசடிகள் கூட ஓரளவுக்கு பரிச்சயமாக இருக்கலாம். ஆனால் இந்த மோசடி சந்தைக்கு புதுசு. முளகுமூடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அந்த வீடியோ அழைப்பை அட்டன் செய்துள்ளார் ஸ்டீபன். அதில் ஒரு பெண் ஆபாசமாக காட்சியளித்துள்ளார். ஸ்டீபன் வீடியோ அழைப்பில் இருப்பதை ஸ்கிரீன் ரெக்கார்டு செய்துள்ளனர். பின்னர் ஸ்டீபனினையும், அந்த பெண்ணையும் இணைத்து ஆபாசமாக சித்திரித்துள்ளனர். அந்த வீடியோவை முகநூலில் போடாமல் இருக்க பணம் வேண்டும் என முகம் தெரியாத நபர் ஒருவர் ஸ்டீபனை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். இதுபற்றி ஸ்டீபன் கொடுத்த புகாதின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த புகார்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பொதுமக்களுக்கு விழிபுணர்பு ஏற்படுத்தி வருகிறார். ``ஆனலைனின் தினமும் புதுப்புது மோசடிகள் அரங்கேறு வருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எனவேதான் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து மக்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்கிறார் குமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன்.



source https://www.vikatan.com/news/crime/aware-of-online-frauds-say-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக