Ad

புதன், 12 ஜனவரி, 2022

நடிகர் திலீப்-க்கு வில்லனான இயக்குநர் நண்பர்! - நடிகைக்கு பாலியல் தொல்லை வழக்கில் நடப்பது என்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனி இப்போதும் சிறையில் உள்ளார். அதேசமயம் நடிகர் திலீப் 74 நாள்கள் சிறையில் இருந்துவிட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். நடிகையை கடத்தியதில் நேரடியாக தொடர்புடைய பல்சர் சுனியை தனக்கு தெரியாது என சாதித்து வந்தார் நடிகர் திலீப். திலீப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் போலீஸாருக்கு சிக்கவில்லை. நடிகை வழக்கில் இருந்து எப்படியும் தப்பித்துவிடலாம் என மனக்கணக்கு போட்டிருந்தார் திலீப்.

ஆனால் அவரின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் ரூபத்தில் திலீபிற்கு எதிரான சாட்சிகள் உருவாகியுள்ளன. 2017-ல் இயக்குநர் பாலசந்திரகுமார் திலீபிற்கு நண்பராகத்தான் இருந்துள்ளார். இப்போது திடீரென திலீபிற்கு எதிரியாக மாறியுள்ளார். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனது மனசாட்சி உறுத்துவதால் இதை வெளிப்படுத்துவதாக பாலசந்திரகுமார் கூறுகிறார். ஆனால், நடிகை தரப்பில் இருந்து வேண்டுகோள் வந்ததை அடுத்தே பாலசந்திரகுமார் திலீபிற்கு எதிராக திரும்பினார் எனவும் சொல்லப்படுகிறது.

சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார்

பாலசந்திரகுமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுதான் முதன் முதலாக திலீப் குறித்த சில தகவல்களை வெளியிட்டார். "பல்சர் சுனியை தனக்கு தெரியாது எனக்கூறித்தான் திலீப் ஜாமீன் பெற்றார். ஆனால், திலீபும், பல்சர் சுனியும் ஒன்றாக அமர்ந்து பேசியதை நான் பார்த்திருக்கிறேன். திலீபின் வீட்டில் வைத்துதான் நான் அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தேன். நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை ஒரு அதிகாரி திலீபிடம் கொண்டுவந்து கொடுத்தார். திலீப் அந்த வீடியோவை பார்த்தார்.

திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சமயத்தில் அவரின் சகோதரன் அனூப், மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் எனக்கு போன் செய்து, பல்சர் சுனியுடனான நட்பு பற்றி வெளியே சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அவருக்கு ஜாமின் கிடைக்காது எனக் கேட்டுக்கொண்டனர். ஆலுவா சிறையில் இருந்த திலீப் என்னை பார்க்க வேண்டும் என கூறியதாக அவரின் சகோதரர் என்னிடம் சொன்னார். நான் சிறையில் சென்ற சமயத்தில் அங்கு திலீபிற்கு வி.ஐ.பி சலுகை கொடுக்கபப்ட்டிருந்தது. `பல்சர் சுனியுடனான தொடர்புபற்றி வெளியே சொல்லக்கூடாது’ என அப்போதும் திலீப் என்னிடம் கேட்டுக்கொண்டார். சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு தன்னை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்க வேண்டும் என திலீப் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேசினார்" என பல தகவல்களை வெளிப்படுத்தினார் பாலசந்திரகுமார்.

நடிகர் திலீப்

இதற்கிடையே அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் ஆலோசனை நடத்தியதாக திலீப் மீது கிரைம் பிராஞ்ச் வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக கோபால கிருஷ்ணன் என்ற திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். வி.ஐ.பி எனக்கூறப்படும் ஒருவர் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் யார் என தெரியவில்லை. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என திலீப் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட் 14-ம் தேதிவரை திலீபை கைது செய்ய தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் பாலசந்திரகுமார் நேற்று முன் தினம் கிரைம் பிராஞ்ச் போலீஸாரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது 20 டிஜிட்டல் ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. திலீப் உள்ளிட்டவர்கள் பேசும் ஆடியோவை ஒரு டேபில் ரெக்கார்டு செய்து வைத்துள்ளார். அதில் திலீப், திலீபின் சகோதரன் அனூப், மனைவியின் தம்பி உள்ளிட்டவர்கள் பேசும் ஆடியோ உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று எர்ணாகுளம் ஜூடீசியல் மஜிஸ்திரேட் கோர்ட்டில் பாலசந்திரகுமார் ஆஜராகி 6.30 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலங்கள் 51 பக்கத்துக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை

திலீபிடம் அறிமுகம் ஆனது முதல் அனைத்து விஷயங்களையும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகவும், இந்த விஷயங்களை வெளியே கூற காலதாமதம் ஆனதற்கான காரணம் குறித்தும் வாக்குமூலத்தில் கூறியதாக பாலச்சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வரும் 20-ம் தேதிக்கு முன் முதற்கட்ட விசாரணை அறிக்கை கோர்ட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்துவருகின்றன.



source https://www.vikatan.com/news/crime/in-actress-sexually-abused-issue-a-friend-became-enemy-for-actor-dilip

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக