Ad

வியாழன், 6 ஜனவரி, 2022

`உங்க கணவர் இதை கொடுக்கச் சொன்னார்!' - மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம ஆசாமி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவர், மாயனூர் மின்சாரவாரிய அலுவலகத்தில் உதவி இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி பிரதீபா (வயது 29). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், குளித்தலை அருகில் உள்ள அய்யர்மலையில் உள்ள ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல் புகழேந்தி வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில், தனது குழந்தைகளுடன் பிரதீபா தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி இவரின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவை தட்டி, உங்க கணவர் புகழேந்தி இளநீர், மிளகாய் கொடுத்து வரும்படி கூறியதாக தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய பிரதீபா, வீட்டின் கதவை திறந்தார். பின்னர், அந்த மர்ம ஆசாமி தன் கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை பிரதீபா மற்றும் 2 மாத குழந்தையான நவீன் ஆகியோர் முகத்தில் வீசியுள்ளான்.

குளித்தலை காவல் நிலையம்

அதன்பின்னர், பிரதீபா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். இதனால், அதிர்ச்சியான பிரதீபா, குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து பிரதீபா அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரதீபாவின் சங்கிலியை பறித்து தப்பி ஓடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Also Read: அடிபம்ப்பை அகற்றாமல் தார்ச்சாலை; வைரலான வீடியோ! - நடவடிக்கை எடுத்த நகராட்சி



source https://www.vikatan.com/news/crime/in-karur-a-unknown-person-snatched-chain-from-women-says-her-husband-sends-him

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக