கொரோனா மேலாண்மையின் 25-வது சீராய்வு கூட்டம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைப்பெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமைத் தாங்கினார். தலைமை செயலர் அஸ்வனிகுமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த செயலர்கள், சுகாதாரத்துறை இயக்குநர், ஜிப்மர் இயக்குநர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கொரோனா தொற்றுக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்குத் துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.
மேலும் கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசை வழங்கிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”புதுச்சேரியில் கடந்த இரண்டு மூன்று நாட்களாகக் கொரோனா தொற்றின் பாதிப்பு 100-ஐத் தாண்டியுள்ளது. அதற்காக யாரும் பயப்படப்பட வேண்டாம். அதேசமயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்களுக்காகப் பல முயற்சிகளைச் செய்கிறோம். பல்வேறு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டும்தான் மூன்றாவது அலை வந்தாலும் பயமின்றி இருக்க முடியும்.
18 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இன்னும் தயக்கம் இருக்கிறது. அது தேவையில்லாதது. எனவே, அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் தான் உள்ளன. மக்கள் இடைவெளியை விட்டு கோயில்களுக்கு வருகிறார்கள். அதனால் கோயில்களை முற்றிலும் மூடவேண்டிய அவசியமில்லை. பரிட்சார்த்த முறையில் திறந்து வைத்துள்ளோம். எல்லா விழாக்களிலும், பண்டிகை நாள்களிலும் கோயில்கள் திறந்துதான் இருந்தன. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா தொற்று கொஞ்சம் அதிகமாகியுள்ளது.
ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேரும், அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான். நம்மை பொறுத்தவரையில் கொரோனாவை அறிவியல் ரீதியில் அனுகிக்கொண்டிருக்கிறோம். ஆகவே கட்டுப்பாடுடன் மக்கள் இருந்தால் பயப்பட தேவையில்லை’’ என்றவரிடம் ‘தமிழகத்தில் விநாயகர் சதுர்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதே?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘இன்னோர் மாநிலத்தின் முடிவை நாம் கூற முடியாது. தெலங்கானாவில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Also Read: புதுச்சேரி:``கூட்டணிக் கட்சிப் பேச்சுவார்த்தைக்குள் தலையிட முடியாது! ”- தமிழிசை சௌந்தரராஜன்
மக்கள் விழிப்புடன் இறைவனை வழிபடும்போது ஏன் தடை விதிக்க வேண்டும்? மக்கள் கட்டுப்பாட்டுடன் இறைவனை வணங்க வேண்டும் என்று நினைக்கும்போது அரசுகள் அதற்கு செவி சாய்ப்பதில் தவறில்லை. அப்படித்தான் புதுச்சேரியிலும் தெலங்கானாவிலும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளித்துள்ளோம். எனவே, நான் தொடர்புடைய இரு மாநிலங்களிலும் விநாயகர் சிலை வைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. தெலங்கானாவில் மிக உயரமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதனை 10-ம் தேதி நான்தான் தொடங்கி வைக்கிறேன்." என்றார்.
source https://www.vikatan.com/news/politics/puducherry-governor-tamilisai-soundararajans-statement-on-vinayagar-chaturththi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக