தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த தி.மு.கவால், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் கோவை தி.மு.க-வில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்தான். அதனால் எளிதில் வாய்ப்பிருந்த தொகுதிகளையும் அ.தி.மு.க-விடம் பறிகொடுத்தது.
Also Read: சூயஸ் விவகாரத்தில் ஏன் அந்தர்பல்டி அடிக்கிறது தி.மு.க?
கோவை மாவட்டத்தில் தோல்வியடைந்த பிறகுகூட தி.மு.க உட்கட்சி பஞ்சாயத்துகள் ஓயவில்லை. கோவை தி.மு.க மாநகர் கிழக்கு, மேற்கு, புறநகர், தெற்கு வடக்கு, கிழக்கு என்று 5 மாவட்டங்களாக உள்ளது.
தேர்தல் படுதோல்வியால் ஏற்கெனவே கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். மேலும், சில மாற்றங்கள் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும், புதிதாக பதவியைப் பெறவும் உடன்பிறப்புகள் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை சென்று அறிவாலயம் புள்ளிகளைச் சந்திப்பது, சபரீசனை சந்திக்க முயற்சி செய்வது, அமைச்சர்களை சந்திப்பது, கோவை மாவட்டம் முழுவதும் போஸ்டர்களை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தி.மு.க-வைப் பொறுத்தவரை கவுண்டர் மற்றும் நாயுடு சமுதாயத்தினர் எப்போதுமே எதிரும் புதிருமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி, இரண்டு தரப்பு நிர்வாகிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். கோவை மாவட்டத்தில் தி.மு.க-வுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்றாலும், ஆட்சியில் இருப்பதால் முன்பைவிட ஆக்டிவாக உள்ளனர்.
ஆளுங்கட்சி என்பதால் வலுவான பதவியை வைத்து செழிப்பாக வாழலாம் என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். பதவியில் இருப்பவர்கள், பதவிக்கு முயற்சி செய்பவர்கள் தனித்தனி குழுக்களாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு கப்- சிப் என்றிருந்தவர்கள் இப்போது போஸ்டர், சுவர் விளம்பரம் எழுதுவது வரை பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் புதிதாக இணைந்த ஓர் உடன்பிறப்பு அரசின் சாதனைகளை சுவர் விளம்பரம் அடித்துள்ளார். ஆனால், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பழைய உடன்பிறப்பு, “என் மாவட்டத்துக்குள் என் பெயர் இல்லாமல் விளம்பரம் செய்வதா?” என்று அதை அழித்துவிட்டாராம். “சரி அப்ப நீங்களாவது இதை பண்ணுங்க” என்று அவர் கூறியதற்கு, “காசில்லை..” என்று சொல்லி கடந்துவிட்டாராம்.
நொந்துபோன புதிய உடன்பிறப்பு. “நமக்கு எதிரி நாம்தான். தி.மு.க ஏன் வெற்றி பெறவில்லை என்கிற கேள்விக்கான விடைகளை கழகத்துக்குள்தான் தேட வேண்டியிருக்கிறது” என்று கூறியுள்ளார். ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்து பிரயோஜனம் இல்லாத நிர்வாகிகளை நம்பாமல், புதிய நிர்வாகிகளுக்கு தலைமை முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், “புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் இவ்வளவு முக்கியத்துவமா..? இத்தனை ஆண்டுகள் உழைத்த நாங்கள் எங்கே போவது?” என்று அதற்கும் உடன்பிறப்புகள் பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.
விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...
விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-dmk-inner-politics-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக