தமிழக அரசியலில் எப்போதும் ஹாட் டாப்பிக்காக இருக்க `டெல்லி மேலிடம்’ அவ்வப்போது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகிய ஏதாவது ஒன்றில் நிலுவையில் உள்ள பழைய வழக்கை கையில் எடுத்து இங்குள்ள அரசியல் எதிரிகளை வீழ்த்த திட்டம் போடுவார்கள். அந்த வகையில், தற்போது அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் சசிகலாவுக்கு அமலாக்கத்துறை மூலம் செக் வைத்துள்ளனர் என்ற தகவல் தான் அரசியல் களத்தில் பரபரக்கிறது.
17.4.2017 அன்று தெற்கு டெல்லியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் டெல்லி போலீஸார் திடீரென ரெய்டு நடத்தியதில், சுகேஷ் சந்திரசேகர் என்பவர் ஏராளமான ரொக்க பணத்துடன் பிடிபட்டார். சுகேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த பணத்தை டி.டி.வி.தினகரனிடமிருந்து பெற்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக மத்திய தேர்தல் ஆணைய முக்கிய அதிகாரி ஒருவரிடம் பேரம் பேசப்பட்டாகவும் தகவல்கள் வெளியாகின. சுகேஷ் வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. தமிழக அரசியலில் தினகரன், சசிகலா தீவிரம் காட்டும்போது அந்த வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையை பா.ஜ.க-வினர் துரிதப்படுத்துவார்கள் என்று பேசப்பட்டது. அந்த நேரம் இப்போது வந்துவிட்டது என்கிறார்கள்.
தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கொடநாடு எஸ்டேட் விவகாரம் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டட மோசடி விவகாரம் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நோக்கி காய் நகர்த்தப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் தி.மு.கழக அரசு செக் வைத்திருக்கிறது. இருவருக்கும் அரசியலில் பின்னடைவு ஏற்பட்டால், அது சசிகலாவுக்கு சாதகமாகிவிடும் என்று பா.ஜ.க. கணக்குப்போடுகிறது.
பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலா இருந்தபோது நிறைய சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பான விவகாரத்தை திடீரென கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க கட்சி சட்டரீதியாக துரிதப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, சசிகலா தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். திடீரென மௌனமாகிவிட்டார். வேறு ஒரு வழக்கில் தற்போது சுகேஷ், டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கிறார். இரட்டை இலை பெற லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் மீண்டும் துரிதப்படுத்தப்பட்டால், தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இன்னொரு தலைவலி நிச்சியம்!
Also Read: ஆனந்த விகடன்: அச்சிலிருந்து ஆன்லைன், ஓடிடி வரை... தலைமுறைகள் தாண்டி நிற்கும் தமிழர்களின் அடையாளம்!
அகில இந்திய அளவில் மோசடியில் ஈடுபட்டவர் சுகேஷ். டெல்லி, மும்பையில் அவர் மீது மோசடி புகார்கள் ஏராளமாக உள்ளன. அதில் சிலவற்றை மேற்கோள்காட்டி, இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் அமலாக்கத்துறையினர் சார்பில் சோதனை நடத்தப்பட்டது. விலை உயர்ந்த கார்கள், ரொக்க பணம் ஆகியவற்றை சோதனையின் போது கைப்பற்றினர் அமலாக்கத்துறையினர். இந்தச் சோதனைக்குப்பின்னணியில் அரசியல் சதுரங்க விளையாட்டு இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த ரெய்டு பற்றி கேள்விப்பட்ட தினகரன் தரப்பினர் கொஞ்சம் ஜெர்க் ஆகியுள்ளனர்.
விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் தரப்பில், '' இது தினகரன் தொடர்பான விவகாரம் இல்லை. முழுக்க முழுக்க வேறு காரணம். சுகேஷ் தொடர்புடைய வேறு மோசடி விவகாரத்தை விசாரித்தபோது கிடைத்த தகவல் அடிப்படையில் நடந்த ரெய்டு '' என்கிறார்கள். ஆனால், இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள் என்கிற காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர்.
அவர் தொடர்ந்து சொல்லும்போது, ''இரட்டை இலை பெற லஞ்சம் பெறப்பட்ட்ட விவகாரத்தில் சுகேஷை அப்ரூவராக்க ரகசிய ஏற்பாடுகள் நடக்கிறது. சுகேஷ் வாயைத் திறந்தால் தினகரனுக்கும் சசிகலாவுக்கும் கடிவாளம் போட்டுவிடலாம் என டெல்லி மேலிடம் முடிவு செய்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவருடன் சுகேஷ் நெருக்கத்தில் இருந்திருக்கிறார். அந்த அதிகாரி ஓய்வு பெற்றுவிட்டார். அவரையும் சேர்த்து இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு நடந்த லஞ்ச பேர விவகாரத்தில் விசாரணை வளையத்தில் கொண்டுவர டெல்லி போலீஸாருடன், மத்திய அமலாக்கப்பிரிவினரும் கைகோத்து களத்தில் இறங்கியுள்ளனர். பொறுத்திருந்து பாருங்கள் '' என்கிறார்.
விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...
விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi
source https://www.vikatan.com/government-and-politics/politics/will-sukesh-become-approver-new-problem-for-dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக