Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

`கே.டி.ராகவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!' டி.ஜி.பி-க்கு புகார் கடிதம் அனுப்பிய ஜோதிமணி

பா.ஜ.க மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்ததோடு, 'என்னைப் பற்றி கட்சிக்கும், மக்களுக்கும் தெரியும். இதை சட்டப்படி சந்திப்பேன்' என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், கே.டி.ராகவன் மற்றும் பா.ஜ.க கட்சிக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கரூர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, 'கே.டி.ராகவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

புகார் கடிதம்

இதுகுறித்து, ஜோதிமணி தனது புகார் கடிதத்தில், "பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் என்பவரின் பாலியல் அத்துமீறல் தொடர்பான வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய அளவில், குறிப்பாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர், தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி பொதுச் செயலாளர் ஒருவர், கலிவரதன் தன்னை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாகவும், ஏமாற்றி பணம் பறித்ததாகவும் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, அவர்கள் இருவரும் பேசும் ஆடியோவும் வெளியானது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் துயரை, கண்ணீரை தமிழகமே கேட்டது. அதேபோல, பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய வித்யா பரிஷத்தின் தலைவர் சண்முகம் சுப்பையா, அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த ஒரு பெண்ணிடம் ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்துடனும் நடந்துகொண்ட வீடியோ தமிழகத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜோதிமணி

இப்பொழுது தன்னை கடவுள், பக்தர், தனது கட்சியே கடவுளை காப்பாற்ற வந்த கட்சி என்று பொய் பேசி, ஊரை ஏமாற்றிவந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுசெயலாளர் கே.டி.ராகவன், பூசை அறை அருகில் நின்றுகொண்டு, ஒரு பெண்ணிடம் தகாத வகையில் ஆபாசமாக பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டுள்ளார். ஆனால், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் தலைவர்களை தொடர்ந்து காப்பாற்றி வருவது மட்டுமல்லாமல், பாலியல் குற்றவாளிகளை ஊக்குவித்தும் வருகிறது. கலிவரதன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் வேட்பாளரானார். சண்முகம் சுப்பையா, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மதுரையில் இன்னும் துவங்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினராக மாண்புமிகு நரேந்திர மோடி அரசால் நியமிக்கப்பட்டார்.

Also Read: கரூர்:முதல் இறுதிப் பயணம்; மயானப் பாதைக்கான போராட்டத்தில் உயிரிழந்த பட்டியலினத்தவர்!-நடந்தது என்ன?

அன்று ஆட்சியில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.கவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகப் பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இந்த குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அ.தி.மு.க அரசு மூடி மறைத்துவிட்டது. பா.ஜ.க தலைவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் எடப்பாடி பழனிசாமி அரசால் மிரட்டப்பட்டார்கள். பாலியல் புகார்களை திரும்பப் பெறுமாறு அழுத்தம் தரப்பட்டது. அதனால், பாதிக்கப்பட்ட பெண்கள், அ.தி.மு.க, பா.ஜ.க அரசுகளின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அராஜகத்திற்கும், மிரட்டலுக்கும் பயந்து, புகார்களை திரும்பப் பெற்ற அவலமும் நடந்தேறியது. பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் அ.தி.மு.க தலைவர்களால் கொடுமையான பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒன்றிய பா.ஜ.க அரசின் கீழ் இயங்கும் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் இன்று வரை எவ்வித தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புகார் கடிதம்

பெயரளவிற்கு அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்றைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்களுக்கு இந்த கொடுமையான பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் பரவலாக மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் அதிகார பலத்தோடு இன்னும் வெளியில் தான் இருக்கிறார்கள். அ.தி.மு.கவின் பாலியல் குற்றங்களை பா.ஜ.கவும், பா.ஜ.கவின் பாலியல் குற்றங்களை அ.தி.மு.கவும் தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது.

தொடர்ந்து, தமிழ்நாட்டு சகோதரிகள் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த கொடும் பாலியல் குற்றவாளிகளால் பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டு வருகின்றனர். தங்களது மானத்திற்கும், குடும்பத்தினரின் உயிருக்கும் பயந்து பல சகோதரிகள் உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கி, வேதனைப்பட்டு வருகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறையின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மீறி பாதிக்கப்பட்டு, புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியே சொன்ன அவலமும் நிகழ்ந்தது. இது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கையில்லாமல் வெறென்ன?.

புகார் கடிதம்

காஷ்மீரில் எட்டு வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.கவின் அமைச்சர்கள் தேசியக்கொடியேந்தி ஊர்வலம் போன அவலத்தையும் இந்த நாடு பார்த்தது. உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் ஒரு சிறுபெண்ணை பல ஆண்டுகளாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, பாதிக்கப்பட்ட குடும்பம் புகார் அளித்ததும் ,அந்தப் பெண்ணின் முதுகெலும்பை முறித்து, அந்த குடும்பத்தையே கொலை செய்ததை மத்திய ,மாநில பா.ஜ.க அரசுகள் வேடிக்கை பார்த்ததைப் பார்த்து, இந்த தேசமே அதிர்ச்சியில் உறைந்தது.

Also Read: கே.டி ராகவன் வீடியோ விவகாரம்: `யூ-டியூபர் என்னை சந்தித்து பேசியது உண்மைதான்!’ - அண்ணாமலை சொல்வதென்ன?

இதுபோல, பல பா.ஜ.க-வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் சமூகத்திற்கும், பெண்களுக்கும் கடும் அச்சுறுத்தலாக வெளியில் உலவிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் இந்த அவலம் நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பாரதிய ஜனதா கட்சியின் பொதுசெய்லாளர் கே.டி.ராகவன் உள்ளிட்ட பா.ஜ.க, அ.தி.மு.கவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்யவேண்டும். நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும். அப்பொழுதுதான், தமிழ்நாட்டில் பெண்களாகிய நாங்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் தலைநிமிர்ந்து நடக்க முடியும்.

புகார் கடிதம்

கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றங்கள் உள்ளிட்ட கொடுமையான பாலியல் வண்புணர்வு குற்றங்களையும், அ.தி.மு.க, பா.ஜ.க அரசுகளால் பாதுகாக்கப்பட்ட பாலியல் குற்றவாளிகளையும், இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்கிற உத்திரவாதத்தை, நம்பிக்கையை இந்த அரசு தமிழக மக்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/controversy/jothimani-petition-sent-to-dgp-against-kt-ragavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக