Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

குளிரும் இங்கிலாந்திலும் கொதிக்கும் கோலியின் வெப்பம்... இந்தியாவின் வெற்றி வேட்கை லீட்ஸில் தொடருமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெட்டிங்லி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற உற்சாகத்துடன் தொடரை வெல்லும் முனைப்போடு இந்திய அணி களமிறங்க இருக்கிறது. தங்களின் கௌரவமாக பெருமையாக கருதும் லார்ட்ஸ் மைதானத்திலேயே தோல்வியை தழுவியதால் திருப்பி அடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

இத்தொடரை பொறுத்தவரைக்கும் ஆரம்பத்தில் இருந்து இந்தியாவின் கையே ஓங்கியிருக்கிறது. முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி டிராவை நோக்கி நகர்ந்திருந்தது. ஒருவேளை போட்டி முழுமையாக நடைபெற்றிருந்தால் இந்தியா இந்நேரம் 2-0 என முன்னிலை பெற்றிருக்கக்கூடும்.

இந்தியா Vs இங்கிலாந்து லீட்ஸ் டெஸ்ட்
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலுமே இந்திய அணி இங்கிலாந்தை விட ஒரு படி மேலேயே இருக்கிறது. இந்தியாவுக்கு இத்தனை நாளாக மிகப்பெரிய பிரச்னையாக இருந்த ஓப்பனிங் சிக்கல் ரோஹித் மற்றும் ராகுல் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட்களிலுமே இருவரும் மிகச்சிறப்பாக ஆடியிருக்கின்றனர். கிட்டத்தட்ட 11 வருடங்களாக SENA நாடுகளில் இந்திய ஓப்பனிங் கூட்டணி சதமடிக்காமலேயே இருந்தது. அந்த குறையை லார்ட்ஸில் இருவரும் போக்கியிருந்தனர். லார்ட்ஸில் முதல் இன்னிங்ஸில் இருவரும் ஆடிய ஆட்டம் செம க்ளாஸானது. அதே மாதிரியான அணுகுமுறை இந்த ஹெட்டிங்லி டெஸ்ட்டிலும் தொடர வேண்டும். குறிப்பாக ரோஹித் ஷர்மா இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் ஆடியாக வேண்டும். ஒயிட்பால் ஹேங் ஓவரோடு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதுதான் ரோஹித்தின் பிரச்னையாக இருந்தது.

அதை கடந்த லார்ட்ஸ் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அற்புதமாக மாற்றியிருந்தார். ஒரு தேர்ந்த டெஸ்ட் மேட்ச் ஓப்பனரை போல நிதானத்தோடும் பொறுமையோடும் ஆடியிருந்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மார்க்வுட் ஷார்ட் பாலில் விரித்த வலையில் ஒரு சிக்சர் அடித்த பிறகும் தனது ட்ரேட்மார்க் புல் ஷாட்டை ஆடி ஃபீல்டரின் கையில் பந்தை கொடுத்திருப்பார். ஒயிட்பால் ஹேங் ஓவர் என்பது இதுவே. லார்ட்ஸ் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் ஆடியதை போல தொடர்ந்து நிதானமான இன்னிங்ஸ்களை சீராக ஆட வேண்டும்.

இந்தியா Vs இங்கிலாந்து லீட்ஸ் டெஸ்ட்

ஓப்பனிங் பிரச்னை தீர்ந்தாலும் இந்திய மிடில் ஆர்டர் தொடர்ந்து ஆட்டம் கண்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த லார்ட்ஸ் போட்டியில் அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த புஜாராவும் ரஹானேவும் ஒரு அற்புதமான இன்னிங்ஸை ஆடிக்கொடுத்திருந்தனர். இந்தியா அந்த போட்டியை வென்றதற்கான முக்கிய காரணங்களில் அவர்களது பேட்டிங்கும் ஒன்று. ஆனால்,நெருக்கடியில் வெளிப்பட்ட அந்த ஆட்டம் சீராக அத்தனை போட்டிகளிலும் வெளிப்பட்டாக வேண்டும். அதுதான் இருவருக்கும் பிரச்னையாக இருக்கிறது. ரஹானே ஆஸ்திரேலிய சீரிஸில் மெல்பர்ன் டெஸ்ட் சென்சுரிக்குப் பிறகு கடந்த போட்டியில்தான் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு இன்னிங்ஸை ஆடியிருந்தார். புஜாரா இன்னமும் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆட தடுமாறுகிறார். இருவருமே ஃபார்முக்கு திரும்புவதற்கான சிறிய சமிக்ஞை கடந்த போட்டியில் வெளிப்பட்டிருக்கிறது. அது இந்த போட்டியிலும் தொடர வேண்டும்.

இவர்களை தாண்டியும் கவலைக்குரிய நிலையில் இருக்கிறார் கிங் கோலி. சதங்கள் அடிப்பது பெரிய இன்னிங்ஸ் ஆடுவது இவற்றையெல்லாம் மறந்தே விட்டார் போல! கோலியின் சதத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

இந்தியா Vs இங்கிலாந்து லீட்ஸ் டெஸ்ட்
டெக்னிக்கலாகவோ தன்னம்பிக்கை ரீதியாகவோ கோலியிடம் எந்த பிரச்னையும் பெரிதாக வெளிப்படவில்லை என்பது ஆறுதலான விஷயம். அதனால் எப்போது வேண்டுமானாலும் ஒரு அட்டகாசமான சதம் அவரிடமிருந்து வரலாம். அது ஹெட்டிங்லி டெஸ்ட்டாக இருக்கும்பட்சத்தில் கூடுதல் சிறப்பாக இருக்கும். ரசிகர்களின் காத்திருப்பும் முடிவுக்கு வரும்.

பௌலிங்கை பொறுத்தவரையில் இந்திய பௌலர்கள் உச்சகட்ட ஃபார்மில் இருக்கின்றனர். நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் சீறிப்பாயும் தோட்டாவாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கின்றனர். அதனால் வேகப்பந்து வீச்சில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. சிராஜ், ஷமி, பும்ரா மூவருமே உறுதியாக ஆடுவார்கள். பேட்டிங் மற்றும் வேரியேஷன் இரண்டையும் மனதில் வைத்து யோசித்தால் இஷாந்த்துக்கு பதில் ஷர்துல் ப்ளேயிங் லெவனுக்குள் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், வெற்றி பெற்ற கூட்டணியை கோலி மாற்றமாட்டார் என்றே தோன்றுகிறது.

ப்ளேயிங் லெவனில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு மாற்றம் அஷ்வினே. மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இந்த தொடருக்காக கவுன்ட்டி போட்டியில் ஆடி 5 விக்கெட் ஹாலெல்லாம் எடுத்திருந்தார். அவர் ப்ளெயிங் லெவனில் இல்லாதது பெரிய ஏமாற்றமே.

இந்தியா Vs இங்கிலாந்து லீட்ஸ் டெஸ்ட்

இப்போதைக்கு ஜடேஜாவை பென்ச்சில் வைத்துவிட்டு அஷ்வினை எடுக்கும் ஒரே வாய்ப்பு மட்டுமே அதிகமாக இருக்கிறது. அஷ்வினின் தற்போதைய ஃபார்முக்கு நிச்சயமாக அதை செய்யலாம். ஜடேஜாவினால் பந்துவீச்சில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. ஓவரை கடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறார். ஆனால், அந்த இடத்தில் அஷ்வின் ஆடும்போது அஷ்வின் விக்கெட்டுக்காக மூர்க்கமாக முயற்சி செய்வார்.

பேட்டிங்கிலும் இப்போது நல்ல ஃபார்மில்தான் இருக்கிறார். ஜடேஜாவால் பேட்டிங்கில் செய்து கொடுக்க முடிவதை ஏறக்குறைய அஷ்வினாலும் அப்படியே செய்து கொடுக்க முடியும். மேலும், இங்கிலாந்து அணியில் நான்கைந்து இடக்கை பேட்ஸ்மேன்கள் இடம்பெறக்கூடும். அந்த சூழலில் அஷ்வின் நல்ல தேர்வாக இருப்பார். கோலி மனது வைத்தால் ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின் உள்ளே வரலாம். I had other ideas பாணியில் இஷாந்த் ஷர்மாவை உட்கார வைத்து விட்டு ஜடேஜா, அஷ்வின் இருவரையுமே கூட கோலி உள்ளே கொண்டு வரலாம். அதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், நடக்கவே நடக்காதென்று சொல்லிவிட முடியாது.

இந்தியாவை பொறுத்தவரைக்கும் பேச வேண்டிய விஷயங்கள் இவ்வளவுதான். மிடில் ஆர்டர் இன்னும் வலுப்பட்டு கடந்த போட்டியில் ஆடியதை போலவே ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக ஆடினாலே போதும்.

பிரச்சனை, அழுத்தம், குழப்பம் எல்லாமே இங்கிலாந்து பக்கமே. ஜோ ரூட்டை தவிர மற்ற எல்லா பேட்ஸ்மேன்களுமே என்ன நடக்கிறதென்றே தெரியாமல் அவுட் ஆகிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 29 முறை இங்கிலாந்தின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகியிருக்கின்றனர். பேட்டிங் பளு மொத்தத்தையும் ஜோ ரூட் மட்டுமே தாங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் டெஸ்ட்டில் மட்டுமே நன்றாக ஆடுகிறார்கள் என விமர்சிக்கப்பட்டு, ஒயிட்பால் கிரிக்கெட்டுக்கு தனிக்கவனம் செலுத்தி முன்னேறிய அணிக்கு இப்போது அப்படியே தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது.

ஒயிட்பாலுக்கு தேவையான அட்டாக்கிங் பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கிறார்கள். டெஸ்ட்டுக்கு தேவையான க்ளாஸ் பேட்ஸ்மேன்கள் எங்கே? எனும் கேள்வி எழுந்துள்ளது. டேவிட் மலான் அணிக்குள் வந்துள்ளார். அவர் மூலமாவது டாப் ஆர்டர் கொஞ்சம் ஸ்திரமடைந்தால்தான் இங்கிலாந்து இந்த தொடரை காப்பாற்ற முடியும்.

ஜோ ரூட்

ஹெட்டிங்லி என்றவுடனேயே பென் ஸ்டோக்ஸ் ஆஷஸில் ஆடிய ஹீரோயிக் இன்னிங்ஸ்தான் நியாபகம் வரும். அவர் இந்தத் தொடரில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு. ஏற்கனவே காயம் காரணமாக ஸ்டூவர்ட் பிராட் விலகியிருக்கும் சூழலில் மார்க் வுட்டும் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். பேட்டிங்கிற்கு ரூட், பௌலிங்கிற்கு ஆண்டர்சன் இவர்கள் இருவருமேதான் மொத்த பாரத்தையும் தாங்கியாக வேண்டும். இந்த போட்டியையும் கோட்டைவிடும்பட்சத்தில் தொடர்ந்து இரண்டு தொடர்களை சொந்தமண்ணில் வெல்ல முடியாத அணியாக இங்கிலாந்து தலைகுனிவை சந்திக்கும்.

முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் என இங்கிலாந்து அணியை ரவுண்டு கட்டி விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த அழுத்தமுமே இங்கிலாந்து அணியின் மீதுதான் இருக்கிறது. இதுவே இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.

அதேநேரத்தில், இந்த சூழலை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் கூடுதல் கவனத்தோடு ஆடி தொடரை கைப்பற்றும் வேலையில் இறங்க வேணடும். இந்த போட்டியை வெல்லும்பட்சத்தில் தொடர் தோல்வி என்கிற ரிசல்ட்டை இந்தியா தவிர்த்துவிட முடியும். அதன்மூலம் 1971, 1986, 2007 தொடர்களுக்கு பிறகு இங்கிலாந்தில் ஒரு தொடரை வெல்லும் வரலாற்று சாதனையை நோக்கி இந்தியா பயணிக்க முடியும்.



source https://sports.vikatan.com/cricket/will-kohlis-indian-cricket-team-defeat-england-once-again-in-leeds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக