Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

லார்ட்ஸில் வாங்கிய அடிக்கு லீட்ஸில் பழிதீர்த்த இங்கிலாந்து...மீண்டும் பேட்டிங்கில் கோட்டைவிட்ட கோலி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களையெடுத்து 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்தது. முதல் நாளின் முக்கிய சில மொமன்ட்ஸ் இங்கே!

டாஸ்

இப்போதெல்லாம் கோலி டாஸை வெல்வதே ஆச்சர்யமான விஷயமாக மாறிவிட்டது. இந்த போட்டியிலும் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. கோலி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். லார்ட்ஸில் வரலாற்று வெற்றியை பெற்றுவிட்டு வந்திருப்பதால் டாஸில் ரொம்பவே பாசிட்டிவாகத்தான் பேசினார் கோலி. பிட்ச்சில் அவ்வளவாக புற்கள் இல்லை. அதனால் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு நல்ல ஸ்கோரை எடுத்து இங்கிலாந்து மீது அழுத்தம் செலுத்த விரும்புகிறோம் என்றார். ஆனால், கோலி பேசியதற்கு தலைகீழாகவே எல்லாம் நடந்தது

அனலாக தகித்த ஆண்டர்சன்!

ஆண்டர்சனின் ஈகோவை சீண்டினால், அவரை வெறுப்பேற்றினால் என்ன நடக்கும் என்பதை இந்திய அணிக்கு அவர் நேற்று காண்பித்தார்.

ஒரே ஸ்பெல்லில் எட்டே ஓவரில் இந்திய அணியை மீள முடியாத அதளபாதாளத்தில் தள்ளிவிட்டார். முதல் ஓவரிலேயே முழு ஃபார்மிலிருந்த கே.எல்.ராகுலை டக் அவுட் ஆக்கினார் ஆண்டர்சன்.

மூன்று பந்துகளை குட் லெந்தில் இன்கம்மிங்/இன்ஸ்விங் டெலிவரிக்களாக வீசிவிட்டு நான்காவது பந்தை ஃபுல் லென்த்தில் வெளியே எடுத்தார். அந்த பந்தில் டிரைவ் ஆட முற்பட்டு பேட்டை விட்டு ராகுல் எட்ஜ் ஆகியிருந்தார். முதல் ஓவரிலேயே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துக்கு ராகுல் அவ்வளவு அவசரமாக பேட்டை ஏன் விட்டார் என்பது புரியாத புதிர். அடுத்து கொஞ்ச நேரத்திலேயே புஜாராவையும் காலி செய்துவிட்டார். அவருக்கும் ராபின்சனுடன் இன்கம்மிங் டெலிவரிக்கு செட் செய்தே பந்தை வெளியில் எடுத்தார். அதில்தான் புஜாரா எட்ஜ் வாங்கி அவுட் ஆகியிருந்தார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் - கோலி

இதில், ஆண்டர்சன் நுணுக்கமாக செய்திருந்த இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். புஜாரா அவுட் ஆகிய அந்த பந்தை வீசும் போது ஆண்டர்சனின் மணிக்கட்டு புஜாராவை நோக்கி இருந்தது. ஆனால், பந்தின் சீம் முதல் ஸ்லிப்பை நோக்கி இருந்தது. மணிக்கட்டின் படி பார்த்தால் பந்து இன்கம்மிங் டெலிவரியாக வர வேண்டும். சீம் பொசிஷனின் படி பார்த்தால் பந்து அவுட் ஸ்விங் ஆக வேண்டும். இந்த இரண்டையும் மிக்ஸ் செய்து சர்ப்ரைஸாக பந்தை வெளியில் எடுத்து புஜாராவை எட்ஜ் ஆக்கியிருந்தார் . இந்த க்ளிப்பை மீண்டும் மீண்டும் ப்ளே செய்து கமென்ட்ரி பாக்ஸிலிருந்து பாராட்டுமழை பொழிந்து கொண்டே இருந்தார்கள்.

ஏமாற்றிய விராட் கோலி!

கோலியின் 71-வது சதத்திற்கான காத்திருப்பு கன்னித்தீவு போல நீண்டுக்கொண்டே இருக்கிறது. இந்த போட்டியிலும் ரொம்பவே சுமாராக ஆடி மோசமாக ஆண்டர்சனிடம் அவுட் ஆனார் கோலி. 2014 இங்கிலாந்து சீரிஸில் ஆண்டர்சனின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை துரத்தி சென்று தொடர்ச்சியாக அவுட் ஆனவர் கோலி. அதன்பிறகு, 2018 இங்கிலாந்து சீரிஸில் அந்த தவறை திருத்தி ரொம்பவே கட்டுப்பாடோடு ஆடி ஆண்டர்சனை வெற்றி கொண்டார்.

ஆனால், இந்த சீரிஸில் 2014 கோலி மீண்டும் வந்துவிட்டாரோ என தோன்றுகிறது. ஏனெனில், இந்த சீரிஸில் தொடர்ச்சியாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை டிரைவ் ஆட முற்பட்டு எட்ஜ் ஆகிக்கொண்டிருக்கிறார்.

நேற்றும் அப்படித்தான் அவுட் ஆனார். அவருடைய பேட்டுக்கும் பேடுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. 2014-ஐ விட இந்த முறை கோலியின் இந்த மாதிரியான விக்கெட் இழப்புகள் கூடுதல் கவலையளிப்பதாக கவாஸ்கரும் கமென்ட்ரியில் விமர்சித்திருந்தார்.

ரோஹித்தின் சொதப்பல்!

ஒரு முனையில் இந்தியா தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தாலும் இன்னொரு முனையில் ரோஹித் உறுதியாக நின்றார். அவருடைய டிஃபன்ஸ் அணுகுமுறை மென்மேலும் மெருகேறிக் கொண்டிருப்பதை இந்த ஆட்டத்தின் மூலம் உணர முடிந்தது. 100 பந்துகளுக்கு மேல் சந்தித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்.

இறுதியில் அவருடைய பலமான புல் ஷாட்டே அவருக்கு வினையாக அமைந்தது.
ENG Vs IND

ஓவர்டன் ஒரு லோ ஃபுல் டாஸை வீசிவிட்டு அடுத்த பந்தை ஷார்ட் லென்த்தில் வீசினார். அதை புல் அடிக்க முயன்று சரியாக கனெக்ட் ஆகாமல் மிட் ஆனில் கேட்ச் ஆகியிருந்தார் ரோஹித். கடந்த போட்டியிலும் மார்க் வுட் தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசியே ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். ஷார்ட் பால்களின் போது மட்டும் இது டெஸ்ட் கிரிக்கெட் என்பதை மறந்து பேட்டை சுழற்றி விடுகிறார் ரோஹித். 105 பந்துகளுக்கு 19 ரன்களை அடித்திருந்தவர் ஒரு அரைசதம் அடித்திருந்தால் கூட இந்திய அணி இன்னும் கொஞ்சம் கௌரவமான ஸ்கோரை எட்டியிருக்கும்.

டெய்ல் எண்டர்களின் டக் அவுட்!

லார்ட்ஸ் போட்டியை இந்திய அணி வென்றதற்கு மிக முக்கிய காரணம் டெய்ல் எண்டர்களின் பேட்டிங்தான். பும்ராவும் ஷமியும் அடித்துக் கொடுத்திருந்த 89 ரன்களே இந்திய அணியை வெற்றி பெற வைத்திருந்தது. ஆனால், நேற்று இருவருமே தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருந்தனர்.

67-5 என்ற நிலையிலிருந்து 78 க்கு ஆல் அவுட் எகும் நிலைக்கு இந்தியா சரிந்தது. ஆண்டர்சன் உண்டாக்கி கொடுத்த நல்ல தொடக்கத்தை ஓவர்டன், ராபின்சன், சாம் கரண் மூவருமே அற்புதமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆளுக்கு இரண்டிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இங்கிலாந்தின் சர்ப்ரைஸ் பேட்டிங்!

சமீப காலமாக இங்கிலாந்தின் டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பியிருந்தது. அதனால்தான் இந்த போட்டியில் டேவிட் மலானை ப்ளேயிங் லெவனுக்குள் அழைத்து வந்திருந்தனர். எப்படியும் ரூட்டை மட்டுமே அந்த அணி நம்பியிருக்கப் போகிறது என்ற எண்ணத்திற்கு தொடக்கத்திலேயே இங்கிலாந்து பதிலடி கொடுத்தது.

ENG Vs IND
புதிய ஓப்பனிங் கூட்டணியாக உருவெடுத்திருக்கும் பர்ன்ஸும் ஹமீதும் இந்தியாவின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டனர். பர்ன்ஸ் பொறுமையாக நின்று ஏதுவான பந்துகளை பவுண்டரி அடிக்க ஹமித் ஆரம்பத்திலிருந்தே பாசிட்டிவாக ஆடினார்.
ENG Vs IND

முதல் ஓவரையே பவுண்டரியுடன் தொடங்கியிருந்தார். பேக் ஃபுட்டை க்ரீஸுக்குள் ஊன்றி பந்தை கடைசி நொடி வரை பார்த்து ஆஃப் சைடில் அவர் அடித்த ஷாட்டுகள் எல்லாமே அட்டகாசம். இந்திய பௌலர்கள் மோசமாக வீசாவிடிலும் லார்ட்ஸில் வெளிப்பட்டிருந்த ஒரு ஃபயர் இங்கே இல்லை. ஒரு சில ஸ்லிப் கேட்ச் வாய்ப்புகளும் மிஸ் ஆனது. பர்ன்ஸ், ஹமித் இருவருமே அரைசதத்தை கடந்தனர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்களை எடுத்து விக்கெட்டே விடாமல் முடித்திருக்கிறது.

முதல் நாள் முழுவதுமே இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியது. பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே லார்ட்ஸில் பட்ட அடிக்கு மரண அடியாக திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கிறது இங்கிலாந்து. இப்போதைய நிலவரப்படி இங்கிலாந்து அணி 42 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

ENG Vs IND

இன்னும் மலான், ஜோ ரூட், பேர்ஸ்ட்டோ, பட்லர் களமிறங்க வேண்டியிருக்கிறது. லீட் 200 க்கு மேல் சென்றால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது. அதை தவிர்க்க வேண்டுமெனில் இரண்டாவது நாளில் இந்திய அணி மிரட்டலான பௌலிங்கை வெளிக்காட்டியாக வேண்டும். அப்படியில்லையெனில், ஈடன் கார்டனில் டிராவிட்- லட்சுமண் இணை ஆடியதை போல ஒரு அசாதாரணமான இன்னிங்ஸை இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடியாக வேண்டும். இங்கிலாந்தில் அப்படி ஒரு இன்னிங்ஸ் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. அசாத்தியங்கள் நிகழுமா?



source https://sports.vikatan.com/cricket/england-vs-india-third-test-first-day-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக