இந்தத் தலைமுறைக் குழந்தைகள் குழந்தைகளாக வளர்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. குழந்தைப் பருவத்து சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு, பெற்றோர் மற்றும் சமூகம் தரும் அழுத்தங்களால் எப்போதும் எதையோ நோக்கிய ஓட்டத்தில் விரட்டப்படுகிறார்கள் பெரும்பாலான குழந்தைகள். தன் குழந்தை நல்லவராக வளர வேண்டும் என்பதைவிடவும் அவன்/அவள் உலக மகா அறிவாளியாக, பிரபலமாக அறியப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகக் குழந்தையின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் செய்ய வைக்க எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள் அவர்கள்.
குழந்தைகளின் போதை அடிமைத்தனத்தை ஆரம்பித்து வைத்து அவர்களை மனநோயாளிகளாக்குவதன் பின்னணியில் பல பெற்றோர்களின் பேராசை இருப்பதைப் பற்றிப் பேசுகிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
``விஷாலுக்கு 16 வயது. `எப்போதும் ஏதோ ஓர் உலகத்துல மிதக்கிறான்... அடிக்கடி தனியா பேசிக்கிறான்.... யாருமே பேசாம யாரோ பேசறது கேட்குது'ன்னு சொல்றான்... நல்லா படிச்சுக்கிட்டிருந்தவன், திடீர்னு படிக்க மாட்டேங்குறான்...' என்ற புகார்களுடன் அவனை என்னிடம் அழைத்து வந்தார்கள் விஷாலின் பெற்றோர். தங்கள் மகனின் நடத்தை மாற்றத்தில் தங்களுக்கு எந்தப் பங்குமே இல்லை என்பது போலிருந்தது அவர்களது நடவடிக்கை. விஷாலை முழுமையாகப் பரிசோதித்ததில் கோளாறு அவனிடமில்லை என்று விளங்கியது. அவனின் பெற்றோரை அழைத்துப் பேசியதில் முழு உண்மையும் வந்தது.
விஷால் குழந்தையாக இருந்தபோது ஹைப்பர் ஆக்டிவ்வாக இருந்திருக்கிறான். அதாவது, அதீத துறுதுறுப்பு... அளவுக்கு அதிகமான குறும்புகள், சேட்டைகள் என அவனைக் கட்டுப்படுத்த முடியாமல் மனநல மருத்துவரிடம் அழைத்துப் போயிருக்கிறார்கள் அவனின் பெற்றோர். சில வருடங்கள் சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள். மருத்துவர் கொடுத்த மருந்து, மாத்திரைகளில் விஷாலிடம் நல்ல மாற்றங்கள். அதன் பிறகு அவனை படிப்பு, முதல் ரேங்க், அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட் எனப் பந்தயத்தில் ஓடத் தயார்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவனால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அப்போது அவனுக்கு சிறுவயதில் ஹைப்பர் ஆக்டிவ் பிரச்னைக்கு கொடுத்த மருந்துகள் நினைவுக்கு வர, அவற்றை மீண்டும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது நடந்தது. விடிய விடிய தூக்கமில்லாமல் படிக்கத் தொடங்கினான் விஷால். மற்ற குழந்தைகள் நான்கு மணி நேரத்தில் படிக்கும் பாடங்களை இவன், இரண்டே மணி நேரத்தில் முடித்தான். பெற்றோரின் பேராசைக்கு முடிவே இல்லாமல் போனது. மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் அவனுக்கு அந்த மாத்திரைகளை தினமும் கொடுக்கத் தொடங்கியதன் விளைவு, ஒருநாள் வினையானது. எல்லாம் ரிவர்ஸ் ஆக ஆரம்பித்தன. அவைதான் விஷாலின் பிரச்னைகளாக அவனின் பெற்றோர் சொன்ன புகார்கள்...
Also Read: இருமல் மருந்து டு பசை; நம் வீட்டிலேயே ஒளிந்திருக்கும் `போதை அபாயங்கள்' - நான் அடிமை இல்லை - 3
விஷாலின் பெற்றோர் மட்டுமல்ல, இன்னும் பல பெற்றோர்கள் பேராசையில் இப்படித்தான் செய்கிறார்கள். போதைக்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருள்கள் மருந்துகள்தான். மனநிலையை மேம்படுத்துவதற்காக (Mood Elevation) கொடுக்கப்படும் மருந்துகளைப் பலர் போதைக்காகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கவனக் குறைவு, ஹைப்பர் ஆக்டிவிட்டி போன்ற பிரச்னைகளுக்குக் கொடுக்கக்கூடிய மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்துவோர் மிக அதிகம். அவை மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி சந்தோஷ உணர்வைக் கொடுத்து ஒரு விஷயத்தில் நன்றாகக் கவனம் செலுத்த வைப்பவை. இதைப் பற்றி அறிந்தவர்கள் மற்றவர்களுக்கும் அந்த மருந்துகளைப் பழக்குவார்கள்.
பாடத்தில் நன்றாகக் கவனம் செலுத்த முடியும். படிப்பதெல்லாம் நன்றாக மனதில் பதியும். நான்கு மணி நேரம் செலவழித்துப் படிக்கும் பாடத்தை இரண்டு மணி நேரத்திலேயே படித்து விட முடியும். பள்ளியில் குழந்தையின் செயல்பாட்டை அதிகரிக்க முடியும் என்பதற்காகப் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த மருந்துகளைக் கொடுக்கிறார்கள். இந்த மருந்துகள் ஒரு கட்டத்தில் பிள்ளைகளை அவற்றுக்கு அடிமையாக்கும். அந்தக் குழந்தைகள் தூக்கமின்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். மூளை குழம்பிய நிலைக்குப் போய், கிட்டத்தட்ட மனநலப் பிறழ்வுக்கு உள்ளாகிறார்கள்.
இந்த மருந்துகள் மருத்துவர் பரிந்துரையில்லாமல் வாங்கக்கூடிய `Over the counter' மருந்துகள் கிடையாது என்றாலும், தங்களுக்குப் பழக்கப்பட்ட மருந்தகங்களில் அவற்றை மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே பலர் வாங்குவார்கள். சில மருத்துவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கிறார்கள் என்பதுதான் உச்சபட்ச கொடுமை.
Also Read: ஹெராயின், கோகைன், கஞ்சா இவற்றுக்கெல்லாம் என்ன வித்தியாசம் தெரியுமா? - நான் அடிமை இல்லை - 3
இந்த ஊக்க மருந்துகளைச் (Stimulants) சாப்பிடும்போது மத்திய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு டோபமைன் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, புத்துணர்ச்சி கிடைத்தது போன்று இருக்கும். படிக்க வேண்டும், மார்க் வாங்க வேண்டும் என்று வெறி ஏற்படும். டோபமைனின் விளைவால், த்ரில்லிங்கான அனுபவத்தைத் தேடும் பழக்கம் ஏற்படும். அளவு அதிகரிக்கும்போது பயம், சந்தேகம், காதுகளில் சத்தம் கேட்பது போல, யாரோ பேசுவது போல, தன்னை யாரோ ஃபாலோ செய்வதுபோல, கண்களில் மாயத்தோற்றம் தெரிவது போலெல்லாம் தோன்றும். ஊக்கம் கொடுக்கும் மருந்துகள் அனைத்துக்கும் பக்கவிளைவுகள் உண்டு. மருந்துகளின் அளவு அதிகரிக்கும்போது டோபமைன் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து தன்னிலை மறக்கும் சைக்கோசிஸ் (Psychosis) என்ற மனநோய் ஏற்படும். அதற்கான சிகிச்சை, கால, பண விரயம், காணாமல் போகும் குழந்தையின் உலகம் எனப் பெற்றோர்கள் இழப்பவை எக்கச்சக்கமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் போதை அடிமைகள் இருக்கிறார்களா... எப்படிக் கண்டுபிடிப்பது..?
அடுத்த திங்கள் கிழமை அத்தியாயத்தில்...
விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
source https://www.vikatan.com/health/healthy/why-giving-drugs-to-children-without-doctor-s-prescription-is-more-dangerous
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக