``அத்தனைக்கும் ஆசைப்படு” என்று சொல்லும் துறவிகள்;
காசு, பணம், துட்டு, மனி என்று துள்ளியாடும் இளைஞர்கள்;
``என் வருமானத்தில் கடமைகளை சரிவர முடிக்க இயலுமா” என்று மலைக்கும் நடுத்தர வயதினர்;
கையில் உள்ள பணம் கடைசி வரை போதுமா என்று புரியாமல் குழம்பும் வயதானவர்கள் – இவர்கள் அனைவரும் சேர்ந்ததுதான் இன்றைய பணம்சூழ் உலகம்.
இந்த டிஜிட்டல் உலகில் வரவுக்கும், சேமிப்புக்கும் பல வழிமுறைகள் இருந்தாலும், நம் கடைசி பைசாவையும் உருவும் கவர்ச்சியான தூண்டில்களும் நிறைந்துள்ளன. இவற்றின் மத்தியில் வரவு, செலவு, சேமிப்பு, கடன் வகைகள், முதலீடு - இவை பற்றிய அறிவு ஓரளவாவது இருந்தால்தான் வரும் பணத்தைப் பாதுகாத்து ஒரு வளமான வாழ்வை அமைக்க முடியும். எலான் மஸ்க் போல ஸ்பேஸ் டூர் செல்ல ஆசைப்படாவிட்டாலும், கீழ்க்காணும் ஆசைகள் உங்கள் மனதில் துளிர் விடுவதில்லையா?
1. அழகிய வீடு, அதைப் பராமரிக்க, சமைக்க, துவைக்க, குழந்தைகளை கவனிக்க வேலையாட்கள் மற்றும் மெஷின்கள், லேட்டஸ்ட் மாடல் கார்.
2. குழந்தைகள் படிப்புக்கும், திருமணத்திற்கும் தேவையான பணம், ரிட்டயர் ஆனாலும் மாதாமாதம் போதிய அளவு வருமானம்.
3. அழகான ஆடை, அணிமணிகள், உயர்தர ரெஸ்டாரன்ட்டுகளில் உணவு, விமானம், கப்பல் போன்றவற்றில் இன்பச் சுற்றுலாக்கள்.
4. பெரிய மனிதர்களின் அறிமுகம், உயரிய க்ளப்களில் அழைப்பு, விளையாட்டுப் போட்டிகளை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு.
5. நம் பிள்ளைகள் முதல் அதிகாரிகள் வரை யார் தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமின்மையால் வரும் மிகப் பெரிய விடுதலை உணர்வு.
6. நாம் விரும்பும் விஷயங்களைச் செய்யும் சுதந்திரம்.
7. விருந்து, விசேஷங்கள் போன்ற கொண்டாட்டங்களுக்கு அடிக்கடி நண்பர்களை அழைக்க முடிவது. அதனால் கிடைக்கும் மரியாதை.
8. கஷ்டப்படுபவர்களுக்கு உதவ முடிவது, கல்வி, திருமணம் போன்ற நல்ல விஷயங்களுக்கு நன்கொடை அளிப்பது – இது தரும் மனத்திருப்தி.
``அதானியும், அம்பானியும் அனுபவிக்கும் இந்த விஷயங்கள் நமக்கும் கிடைக்குமா? இப்படி உடல், மனம், ஆத்மா என்று அனைத்தையும் திருப்திப்படுத்தும் வல்லமை வாய்ந்த பணம் ஏன் என்னிடம் வருவதில்லை? வந்தாலும் ஏன் தங்குவதில்லை?” என்பன போன்ற கேள்விகள் நம் அனைவர் மனதிலும் இருக்கின்றன. நம் ஆழ்மனதில் பணம் பற்றிய பலவித நெகடிவ் எண்ணங்களும் உள்ளன.
Also Read: மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது? #SmartInvestorIn100Days நாள்-91
உதாரணமாக:
-
நல்ல வழியில் வாழ்பவர்களிடம் பணம் வராது.
-
பணம் பற்றி எண்ணுவதும், பேசுவதும் தவறு.
-
பணம் பேராசையைத் தோற்றுவிக்கும்.
-
பணம் நண்பர்களையும், உறவினர்களையும் பிரித்துவிடும்.
-
எனக்குப் பணம் இருக்கவேண்டும் என்று விதி இருந்தால் அது தானே தேடி வரும்.
யோசித்துப் பாருங்கள் – இவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த முடிவுகளா? நிச்சயம் இல்லை. நாம் கேள்விப்பட்ட விஷயங்கள் மட்டுமே. மேலும் நம் சோம்பேறித்தனத்தை மூடிமறைக்க நாம் சொல்லும் காரணங்களாகவும் இருக்கின்றன. பணத்தின் முக்கியத்துவம் புரிந்தவர்கள் இதுபோன்ற நெகட்டிவ் எண்ணங்களை வளர்ப்பதில்லை. அதற்காக உழைக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
நம் வாழ்வின் தரத்தை நாம் உயர்த்த விரும்பினால், முதலில் நெகடிவ் எண்ணங்களை விரட்டி, வருமானத்தைப் பெருக்க வேண்டும். ஓரளவு பணத்தை நாம் சேமிப்பதற்கு, செலவைக் குறைக்கவேண்டும். சேமித்த பணத்தை முதலீடு செய்யத் தெரிய வேண்டும். குறைந்த வட்டியில் கடன் வாங்கி லாபம் பார்க்க அறிய வேண்டும். அரசு தரும் வரிவிலக்குகளைப் பயன்படுத்தி வரியைக் குறைக்க வேண்டும். அத்தனையையும் பாதுகாக்க இன்சூரன்ஸ் வேண்டும். இப்படி பணம் பாயும் வழிகளைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்த நமக்கு சொல்லித் தரும் வழிமுறைதான் பர்சனல் ஃபைனான்ஸ் (தனி நபர் நிதி மேலாண்மை).
கார்ப்பரேட் ஃபைனான்ஸ், பிசினஸ் ஃபைனான்ஸ், இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ், பர்சனல் ஃபைனான்ஸ் போன்றவற்றை உயர் வகுப்புகளில் கற்றுத் தருகிறார்கள்.
Also Read: சம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா?#SmartInvestorIn100Days நாள்-96
ஆனால் பர்சனல் ஃபைனான்ஸ் பேசப்படும் அளவு மற்றவை பேசப்படுவதில்லை. ஏனெனில் அது சாதாரண மக்களும் வசதியாக வாழ வழி காட்டக்கூடிய துருவ நட்சத்திரம்.
``இது தெரிந்துவிட்டால் என் வாழ்க்கையில் சந்தோஷம் நிலைக்குமா?” என்று நீங்கள் கேட்கலாம். பணம் என்றைக்கும் ஒரு கருவி மட்டுமே. சந்தோஷமும், நிம்மதியும் பணத்தால் கிட்டுவதில்லை; ஆனால் பணமின்றி அவை கிடைக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான் வள்ளுவர் ``பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்றார்.
வாருங்கள், அந்தப் பொருளையும், அதை நிர்வகிக்கும் பர்சனல் ஃபைனான்ஸ் கலையையும் தேடுவோம்.
source https://www.vikatan.com/business/finance/why-personal-finance-skills-are-important-panam-pannalam-vanga-series
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக