Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

ஆவடி: மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த கணவர்! - இரு குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த இளம்பெண்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(27). இவரது மனைவி கௌரி (24). இந்த தம்பதிக்கு தீக்சிதா(3) என்ற மகளும், அஸ்வின் (1) என்ற மகனும் இருந்தனர்.

பெயிண்டரான ரமேஷ் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டு குடும்ப செலவுக்குப் பணம் தராமல் மது அருந்தி விட்டு போதையில் தினமும் மனைவி கௌரியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். அதன் காரணமாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம், ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரமேஷ் வேலைக்குச் செல்லாமல் காலையிலேயே மது அருந்தப் பணம் கேட்டு மனைவி கௌரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் ரமேஷ் கௌரியை அடித்து விட்ட வீட்டிலிருந்து வெளியிருக்கிறார். இந்நிலையில், கணவர் தினம் தினம் குடித்து விட்டு பிரச்னை செய்வதால் மிகுந்த மன உளைச்சலிலிருந்த இளம்பெண் கௌரி, தற்கொலை செய்து கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், தான் உயிரிழந்து விட்ட பிறகு தன்னுடைய குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்பது குறித்த சில நிமிட சிந்தனையில் ஆழ்ந்த கௌரி 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதென்ற விபரீத முடிவினை கையிலெடுத்திருக்கிறார்.

கணவன் மனைவி தகராறு

அதன்படி, கௌரி வீட்டின் மேற்கூரையிலிருந்த இரும்பு கம்பியில் புடவையைக் கொண்டு இரு குழந்தைகளையும், தனித் தனியாகத் தூக்கில் தொங்க விட்டுத், துடி துடித்து இறந்ததை மனதை இரும்பாக்கிக் கொண்டு பார்த்து விட்டு தானும் ஒரு இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொதுவாக, தம்பதி இருவரும் சண்டை போட்டுக் கொண்டால் சமாதானம் செய்ய வரும் வீட்டின் உரிமையாளர் நேற்றைய தினம் மட்டும் சற்றே கால தாமதமாகக் கௌரியைப் பார்க்க வந்திருக்கிறார்.

மாடி வீட்டில் வசிக்கும் கௌரியைப் பார்க்கப் படிக்கட்டுகளில் விரைவாக ஏறி வந்தவர்கள் ஜன்னல் வழியே மூன்று உடல்கள் ஊசலாடுவதைக் கண்டு அதிர்ச்சியில் மனம் பதறிப் போயிருக்கின்றனர். பின்னர், கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த திருநின்றவூர் போலீஸார் கௌரி மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறில் இரு குழந்தைகளைக் கொன்று விட்டு, இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/young-woman-near-avadi-hangs-her-children-and-ends-her-life-due-to-family-dispute

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக