Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

தூத்துக்குடியில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்! -தென்னிந்திய கடற்பகுதி பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்?

சமீபகாலமாக வங்காள ‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள், குத்தகைக்கு எடுத்துள்ளன. இந்தியாவின் வடக்குப் பகுதியான ’லடாக்’ பகுதியில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதால் அங்கு ஏற்பட்ட பதட்டம் முழுமையாக நீங்கவில்லை. இரு நாட்டுப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை பலமுறை நடந்த போதிலும் முழுமையான அமைதி ஏற்படவில்லை.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த நீர்மூழ்கி கப்பல்

இந்த நிலையில், தென்பகுதியான தமிழகக் கடலோரம் இலங்கைப் பகுதியில், சீனா தன் கப்பற்படையை வலிமைப் படுத்திவருகிறது. தென்தமிழகத்தில், நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் உள்ள ஐ.என்.எஸ் கட்டபொம்மன், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிதாக குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ’ராக்கெட் ஏவுதளம்’ என மத்திய அரசின் மிக முக்கிய நிறுவனங்கள் இங்குள்ளன.

Also Read: பதுங்கிப் பாயும் திட்டத்தில் சீனா.. சமாளிக்கத் தயாராகும் இந்தியா! - எல்லையில் நடப்பது என்ன?

இதையொட்டி, இந்தியத் தரப்பிலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை, ராணுவ தளவாடங்களை எளிதாகக் கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

தேவை ஏற்பட்டால் போர் விமானங்கள் இந்த சாலைகளில் இறங்கும் வண்ணம் சாலைகள் அமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒருபகுதியாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா", தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ்.கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படைத் தேவையான தண்ணீர் நிரப்புவதற்காகவும், இந்த நீர்மூழ்கிக் கப்பல் தூத்துக்குடி கப்பல்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும் இந்த 'சிந்துஷாஸ்ட்ரா' நீர்மூழ்கிக் கப்பல் வந்து இருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கபடுகிறது. கப்பல் இன்னும் ஒரு வார காலம் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் நீர்மூழ்கி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறைமுக கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்

எனினும், இந்திய கடற்படை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே இலங்கையில் சீனா கால்பதித்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி கிழக்கு கடற்கரை சாலை பகுதி விரிவாக்கப்பட உள்ளது. மேலும் தூத்துக்குடி பகுதியில் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம், துறைமுகம் வந்த நீர்மூழ்கி கப்பல் என பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாகவே பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/submarine-to-thoothukudi-is-the-south-indian-ocean-is-being-strengthened

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக