Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

`கொங்கு வரி வருவாய் 66 சதவிகிதமா?’ - பெஸ்ட் ராமசாமிக்கு மதிமுக பிரமுகர் ஆதாரத்துடன் பதில்

தமிழ்நாட்டில் கொங்கு மண்டல அரசியல், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, ``வரி வருவாய் அதிகம் கொடுத்தாலும், கொங்குப் பகுதியில், விகிதாசார அடிப்படையில் எந்த வளர்ச்சிப் பணியும் நடக்கவில்லை.

பெஸ்ட் ராமசாமி

Also Read: பா.ஜ.க-வின் கொங்கு ஸ்கெட்ச் - பாதிப்பு யாருக்கு? சமாளிக்குமா தி.மு.க!

தமிழ்நாட்டு வரி வருவாயில் 66 சதவிகிதம் கொங்கு மண்டலத்திலுள்ள 11 மாவட்டங்களிலிருந்துதான் செல்கிறது. நிர்வாக வசதிக்காக கொங்கு மண்டலத்தைப் பிரிப்பதில் தவறில்லை” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் இந்த விவரங்கள் குறித்த உண்மைத்தன்மை குறித்து விசாரித்திருக்கிறார். அதன்படி, தமிழகத்திலுள்ள வரி வருவாய் மண்டலங்களில் , கடந்த சில நிதியாண்டுகளின் விவரங்களைப் பெற்றிருக்கிறார். இது குறித்து ஈஸ்வரன் கூறுகையில்,

ம.தி.மு.க ஈஸ்வரன்

`` 2017-18, 2018-19, 2019-20, 2020-21 நிதியாண்டுக்கான வரி விவரங்களை பெற்றிருக்கிறேன். கோவை, சேலம், ஈரோடு ஆகிய மண்டலங்களில் பெறப்படும் வரி, மொத்தவரி வருவாயில் 18 சதவிகிதம் அளவுக்கே இருக்கிறது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில், ஒரு மாநிலத்தைப் பிரித்தால் அது அமைச்சர்களின் செலவுகளுக்கே போதாது என்ற நிலைதான் ஏற்படும். தவறான புள்ளிவிவரங்களை அளித்து மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்க வேண்டாம். நானும் கோவையைச் சேர்ந்தவன்தான். கொங்குப் பகுதியை தொழில்ரீதியாகவும், உள்கட்டமைப்புரீதியாகவும் வளர்ப்பதற்கு பல்வேறு வகையில் போராடியும்வருகிறேன்.

வரி

கொங்குப் பகுதி உண்மையாகவே வளர வேண்டும் என்ற ஆசை எனக்கு மிக அதிகம். அதனால் பிரிவினை என்ற எண்ணமே நமது பகுதியின் வளர்ச்சியைக் கெடுத்து கலவர பூமியாக்கிவிடும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/kongu-revenue-issue-mdmk-cadre-replies-with-data

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக