Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

``நிதானம் இழந்த கார்; வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த ஒரு நொடி!" - லீலா பிரசாத்தின் நம்பிக்கை கதை

``நாம் வாழுற வாழ்க்கையில் இந்த நிமிஷம் மட்டும்தான் நிஜம். நாம என்னதான் திட்டம் போட்டு வாழ்ந்தாலும், விதிப்படிதான் எல்லாம் நடக்கும். காலையில் நிறைய கனவுகளோட நண்பர்களைப் பார்க்கப் போன நான் ராத்திரிக்கு ரத்தமும் சதையுமா நகர முடியாம மூலையில் கிடந்தேன். அந்த நிமிஷத்தை நினைச்சுப் பார்த்தா இப்போகூட மனசு பதறுது" - உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் லீலா பிரசாத்.

லீலா பிரசாத்

ஒரு விபத்தில் இடுப்புக்குக் கீழ் உடல் உறுப்புச் செயல்பாட்டை இழந்தவர் லீலா பிரசாத். தனக்குள் நம்பிக்கை விதை ஏற்றி மாடலிங், ஆன்லைன் வேலைகள், வீல் சேர் மாரத்தான் எனத் தடம் பதித்து வருகிறார். ஒரு காலைப் பொழுதில் லீலா பிரசாத்தை சந்தித்தோம்.

``எனக்கு சொந்த ஊரு சென்னை காரப்பாக்கம். நடுத்தர குடும்பம். சின்ன வயசிலிருந்தே வீடு வாங்கணும், கார் வாங்கணும்னு நிறைய கனவுகளோடு வளர்ந்த பையன். வீட்டில் நிறைய கஷ்டம் இருந்தாலும் படிப்புதான் எதிர்காலம்னு என்னை பி.பி.ஏ வரை படிக்க வெச்சாங்க. படிப்பு முடிச்சதும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைச்சுது. எங்க குடும்பமே என்னைக் கொண்டாடினாங்க. நாம சம்பாதிக்கப் போறோம் நம்ம வாழ்க்கையே மாறப்போகுதுனு மனசு கொள்ளாம ஆசை. எப்போதும் போலத்தான் அன்னிக்கு காலைப் பொழுதும் விடிஞ்சுது. நான் ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்டுட்டு இருந்த ஹெல்மெட்டை எங்க அப்பா எனக்காக கிஃப்ட் பண்ணாங்க. என் ஃபிரெண்ட்ஸை பார்க்க ரொம்ப சந்தோஷமா கிளம்பிப் போனேன். வெளியே போயிட்டு வந்து வீட்டுகிட்ட நின்னு நானும் என் ஃபிரெண்ட்ஸும் பேசிட்டு இருந்தோம்.

லீலா பிரசாத்

ஒரு கார் தன்னோட கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்துச்சு. என்ன நடக்குதுனு நிதானிக்கிறதுக்குள்ள கார் என் மீது மோதி, நான் கிழே விழுந்து கிடந்தேன். என்னால் நகரக்கூட முடியல. உசுரு இருக்குதுதா இல்லையானு தெரியாத அளவுக்கு வலி. என் நண்பர்கள்தாம் ஆம்புலன்ஸில் ஏத்தி ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனாங்க.

டாக்டர்ஸ் செக் பண்ணிப் பார்த்துட்டு காலில் அடிபட்டிருக்குறதா சொல்லி கட்டு போட்டு விட்டாங்க. பத்து நாள் பெட் ரெஸ்ட்டில் இருந்தேன். பத்து நாள் கழிச்சு நடந்து பாருங்கனு டாக்டர்ஸ் சொன்னாங்க. என்னால் எழுந்து நிக்கவே முடியல. இடுப்புக்குக் கீழ் உணர்வே இல்லாத மாதிரி இருந்துச்சு. டெஸ்ட் எடுத்துப் பார்த்தப்போதான் முதுகுத்தண்டு உடைஞ்சுருச்சுனு சொன்னாங்க.

லீலா பிரசாத்

என்னால் இனி நடக்க முடியாதுங்கிற விஷயத்தையும் சொன்னாங்க. என் ஒட்டு மொத்த குடும்பமும் நிலைகுலைஞ்சு போயிருச்சு. சிகிச்சைக்காக ஆறு மாசம் மருத்துவமனையிலேயே இருந்தேன். வீட்டுக்கு வந்தும் பயங்கர மனஅழுத்தம். ஓடியாடி திரிஞ்ச வீட்டுல ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பதெல்லாம் சொல்லவே முடியாத வேதனை."

கண்ணீரைக் கட்டுப்படுத்தி சில நிமிட அமைதிக்குப் பின் பேச ஆரம்பித்தார் லீலா பிரசாத்.

``நான் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் அம்மா, அப்பாவும் அழுதுட்டே இருந்தாங்க. சாப்பிடுறது, பாத்ரூம் போறதுனு எல்லாத்துக்கும் அவங்களைச் சார்ந்து இருக்கிற மாதிரி தோணுச்சு. அவங்களக் கஷ்டப்படுத்தப் பிடிக்காமல் மாற்றுத்திறனாளி களுக்கான மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தேன். அங்கு மற்றவர்கள் படும் வலியைப் பார்த்தபோது என் வேதனை சாதாரணம்னு தோணுச்சு. அங்கு எனக்கான வேலைகளை நானே செய்யப் பழகிட்டேன். என்னை மீட்டெடுத்து புது வாழ்க்கைக்குத் தயார்படுத்திகிட்டு ஆறுமாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தேன்.

லீலா பிரசாத்

வேலைக்குப் போக முடியாது. அதுக்காக வருமானம் இல்லாமல் எத்தனை நாள் வாழ முடியும்? அதனால் வீட்டிலிருந்தே தட்கலில் டிக்கெட் புக் செய்து கொடுப்பது, ஆன்லைனில் போன் பில் கட்டிக் கொடுப்பதுனு சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். மாற்றுத்திறனாளிக்கான ஃபேஷன் ஷோவில் கலந்துக்க ஒரு வாய்ப்பு கிடைச்சுது. ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்துச்சு. ஆனால் பழகிடுச்சு.

அதன் பின் மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தானிலும் கலந்துக்க ஆரம்பிச்சேன். இப்போ நிறைய வெளியிடங்களுக்குத் தனியா துணிச்சலா போக ஆரம்பிச்சுருக்கேன். வீல் சேரிலேயே ரொம்ப தூரம் பயணம் செய்ய முடியல. அதனால் வீல் சேருடன் சேர்ந்து இருக்கக்கூடிய பிரத்யேக இரு சக்கர வாகனம் கிடைச்சா இன்னும் நிறைய இடங்களுக்குப் போய் என்னை வெளிப்படுத்திக்க உதவியா இருக்கும். யாராவது உதவினா பயனுள்ளதா இருக்கும்.

வீல் சேருடன் சேர்ந்து இருக்கக் கூடிய பிரத்யேக இருசக்கர வாகனம்

இப்போ எனக்கு கால்தான் இல்லை. மனசு முழுக்க தைரியம் நிரம்பி இருக்கு. என்னுடைய நம்பிக்கை இந்த வாழ்க்கையை இன்னும் இன்னும் அழகானதா மாத்தும். மாற்றம் ஒன்றே மாறாதது" என்றார் லீலா பிரசாத்.

லீலா பிரசாத்துக்குத் தேவைப்படும் வீல் சேருடன் சேர்ந்து இருக்கக்கூடிய பிரத்யேக இரு சக்கர வாகனம் வாங்கித் தர வாசன் அறக்கட்டளை முன்வந்துள்ளது. உதவும் உள்ளம் கொண்டவர்கள் Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோட்: IDIB000C032, ஸ்விப்ட் கோட்: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Also Read: மனம் குமுறிய மாற்றுத்திறனாளி தம்பதியர்! - வாசகர்கள் ஆதரவுடன் உதவிக்கரம் நீட்டும் வாசன் அறக்கட்டளை

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரிவிலக்கு கிடைக்கும்.

நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ``லீலா பிரசாத்துக்காக’ அல்லது `For Leela Prasad’ என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை `help@vikatan.com’ என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம்.



source https://www.vikatan.com/news/general-news/inspirational-man-leela-prasad-needs-help-to-buy-a-new-wheelchair

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக