Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

முதல்வர் எடப்பாடிக்கு நன்றி சொன்ன `ஆல் பாஸ்' அரியர் மாணவர்கள்... மீண்டும் தேர்வெழுதும் சோகம் ஏன்?!

கொரோனா நிறைய சிக்கல்களை உண்டாக்கினாலும், அதில் சில நன்மைகளும் இருந்தன. அதிலொன்று கல்லூரி மாணவர்களுக்கான மகிழ்ச்சி. ஊரடங்குக் காரணமாக கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் ரத்தாகி 'ஆல் பாஸ்' என அறிவிக்கப்பட, இனி அரியர் தேர்வுகள் எழுத வேண்டாம் என மாணவர்கள் எடப்பாடி பழனிசாமியைக் கொண்டாடினார்கள். ஆனால், நன்மை தீமைகள் தாண்டி கொரோனா குழப்பத்தைத்தான் அதிகம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆல் பாஸ் விஷயத்திலும் இறுதியில் குழப்பமே மிஞ்சியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - அரியர் அறிவிப்பு

சென்னைப் பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்கள் அனைவரும் தேர்வானதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்காக முதல்வருக்கு நன்றி சொல்லி மாணவர்கள் ஏரியா சுவர் தொடங்கி வாட்ஸ்அப் வரை போஸ்டர் அடித்து, மீம் போட்டு கலக்கியிருந்தார்கள். அரியர் வைத்திருந்த பலரும் தேர்வே இல்லாமல் ஒரே நாளில் அத்தனை அரியர்களையும் முடித்தார்கள். அதன் பின், அரியர் தேர்வுகளுக்குப் பணம் கட்டியவர்கள் மட்டுமே பாஸ் என செய்தி வெளியானது. பின்னர், மீண்டும் எல்லோருமே பாஸ்தான் என்றார்கள். ஒவ்வொரு கல்லூரியும் தங்கள் மாணவர்களுக்கு ஒரு அப்டேட் சொல்லி குழப்பத்தை உண்டாக்கின.

Also Read: கலவரமயமான கேபிடல்; அதிகார மாற்றத்துக்கு உடன்பட்ட ட்ரம்ப்... நடந்தது என்ன?

அப்போது மகிழ்ச்சியில் திளைத்திருந்த மாணவர்களில் பலர் இப்போது தேர்வெழுதிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் விரைவில் எழுதுவார்கள். அனைத்துக் கல்லூரிகளுக்கும் சென்னைப் பல்கலைகழகம் வாய்மொழி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, இளங்கலை முடித்து முதுகலையில் சேர்ந்துவிட்ட மாணவர்கள் கூட இப்போது இளங்கலைத் தேர்வுகளை எழுத வேண்டும். யாரெல்லாம் மார்ச் மாதம் அரியர் தேர்வுகளுக்கான பணம் கட்டியிருந்தார்களோ அவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும். பல கல்லூரிகள், எதிர்காலத்தில் பிரச்னைகள் வராமலிருக்க அனைத்து மாணவர்களையும் தேர்வெழுதச் சொல்லியிருக்கின்றன. அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகின்றன. அடுத்து என்ன அறிவிப்பு வருமோ என மாணவர்கள் குழப்பத்தில் தேர்வெழுதி வருகிறார்கள்!



source https://www.vikatan.com/news/education/despite-the-all-pass-announcement-students-are-writing-exams

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக