Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

நரசிம்ம ராவ்..! - புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஓபனிங் பேட்ஸ்மேன்! #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"If you can look into the seeds of time,

And say which grain will grow and which will not"..

"காலத்தின் விதைகளுக்குள் எட்டிப்பார்த்து எது எப்படி முளைக்கும் எது பொய்த்துப் போய்விடும் என்று யாரால் சொல்ல முடியும்" என மேக்பெத் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பார்.இந்த வரிகள் அரசியலுக்கும் முற்றிலும் பொருந்தும்.

ராஜீவ் காந்தியின் இறப்பிற்குப் பின் காங்கிரஸ் கட்சி செய்வதறியாது திகைத்தது. சோனியா காந்தி தலைவராக மறுத்ததால் அர்ஜூன் சிங், சரத்பவார், நரசிம்மராவ் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் நரசிம்மராவ், நாட்டின் ஒன்பதாவது பிரதமராக அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத 58 அமைச்சர்களை கொண்ட சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தார்.1991- ஜூலை 15ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வென்றார். பிரதமரான பின் நந்தியால் தொகுதியில் போட்டியிட்டு 5,80,287 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

நரசிம்மராவ்

#கடந்து வந்த பாதை

1921 ஜூன் 28-ல் வாரங்கல் மாவட்டத்தில் லகனேபல்லியில் பிறந்தார். மெட்ரிக் தேர்வில் 1937-ல் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1938-ல் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, நாக்பூர் பல்கலையில் பயின்று பட்டம் பெற்றார்.

புனேவில் சட்டப்படிப்பும் முடித்தார். பின்னாளில் முதல்வரான பர்குல ராமகிருஷ்ணராவிடம் ஜூனியர் வழக்கறிஞராக சேர்ந்து பின் 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார்.

முதல் மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் உறுப்பினரிடம் தோல்வி கண்டாலும் 1957-ல் மந்தானி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1967-ல் சுகாதாரத்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சராக ஆந்திராவில் சிறப்பாக செயலாற்றினார்.

1971-ல் ஆந்திர முதல்வரானார் ராவ். சோசலிஸ்டாக நிலச்சீர்திருத்தம் செய்தது, தெலுங்கானா பிரச்சனை என சிறப்பாகப் பணிபுரிந்தாலும் சில காரணங்களால் 1973-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஏற்ற இறக்கத்துடன் அரசியல் பயணம் தொடர்ந்தாலும், காங்கிரஸ் மீதான விசுவாசமே அவருக்கு பெரிய பொறுப்பைப் பெற்றுத் தந்தது.

1977-ல் ஜனதா அலையும் மீறி ஹனம்கொண்டா மக்களவைத் தேர்தலில் வென்றார். அடுத்து 1980-லும் வென்று இந்திராவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சரானார். 1986 புதிய கல்விக் கொள்கையில் இவர் பரிந்துரைத்த பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. எந்த கோஷ்டியிலும் சேராமல் மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்றார்.

நரசிம்மராவ்

#புதிய பொருளாதார சீர்திருத்தம்

நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்த காலகட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். பின் யாரும் எதிர்பாராத வகையில் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கினார். வர்த்தகத்தை ப.சிதம்பரத்திற்கு வழங்கியதுடன், தொழில்துறையை தானே நிர்வகித்தார். அமர்நாத் வர்மா, மான்டெக்சிங் அலுவாலியா போன்றோரை அருகில் வைத்துக்கொண்டார்.``அறிவினம் சேர்" எனும் வாக்கிற்கேற்ப தன்னை சுற்றி திறமையானவர்களை வைத்துக்கொண்டது, அவரின் சிறந்த மதிநுட்பத்தைக் காட்டுகிறது.

"நோய் தீவிரமாக இருந்தால் சிகிச்சையும் தீவிரமாக இருந்தாக வேண்டியிருக்கிறது" என நரசிம்ம ராவின் வார்த்தைக்கு வலு சேர்க்கும் விதத்தில் நிதியமைச்சர் மன்மோகன் சிங், ஜூலை 24ல் தன் பட்ஜெட் உரையில் வர்த்தக தொழில்துறை தாராளமயமாக்கம், போட்டிப் பொருளாதாரத்துக்கு வாய்ப்பளித்து, சந்தைப் பொருளாதாரம் முறை பின்பற்றப்பட்டது.

34 தொழில் துறையில் அந்நிய முதலீடு 40 முதல் 51 சதவிகிதமாக மாற்றம், மானியக்குறைப்பு, தனியார் தொழில் தடை நீக்கம், தனியார் முதலீடு ஊக்குவிப்பு என புதிய பொருளாதாரக் கதவு திறந்தது. 49 எம்.பிக்களிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

"ஐ.எம்.எஃப்பிடம் கடன் வாங்குவது, தாகத்திற்கு விஷத்தை குடிப்பது போல’’ என்றார் ஈ.எம்.எஸ். நம்பூத்ரிபாட்.

பணவீக்கம் குறைந்தது,10 வங்கிகள் தனியார்மயமாக்கம், ஏற்றுமதி அதிகரித்து, அந்நியச் செலாவணி அதிகரிப்பு, சர்வதேச நாட்டுடன் போட்டி, தொழில்நுட்பப் பெருக்கம் போன்றவை சாதனையாக இருந்தாலும் வேலையின்மை, வறுமை, விலைவாசி, இருமுறை ரூபாய் மதிப்புக்குறைப்பு என நோயாளி காப்பாற்றப்பட்டு நோய் நீடித்த கதையானது.

நரசிம்மராவ்

#சாதனைகளும் சறுக்கல்களும்

*வங்கிகளில் மோசடி செய்த ஹர்சத் மேத்தாவின் ஊழல் பங்குச்சந்தையை பாதித்தபோது ஜி.வி ராமகிருஷ்ணாவை கொண்டு சீர்படுத்தினார். ஆனாலும், ஹர்சத் மேத்தாவின் நரசிம்ம ராவ் குறித்த குற்றச்சாட்டு தொடர்ந்தது.

*இன்போசிஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகள் விற்பனக்கு வந்தன.

*1993ல் முதன்முறையாக மத்தியப்பிரதேசத்தில் தனியார் சுங்க சாலை அமைக்கப்பட்டது.

*தனியார் தொலைக்காட்சி, தனியார் விமான சேவை மற்றும் ராஜிவ் காந்தியின் புதிய தொலைதொடர்பு கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்தார்.

*1993-ல் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மூன்றில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைத் தனது சீர்திருத்த வெற்றியாய்ப் பார்த்தார்.

*1989-ல் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி சித்ததோஷ் முகர்ஜியின் தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991 ஜுன் 25-ல் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி நீரைத் தர உத்தரவிட்டும் நரசிம்ம ராவ் அதனை நடைமுறைப் படுத்தவில்லை.

*1992 டிசம்பர் 6-ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பும், மறுநாள் நடைபெற்ற இனக்கலவரமும் நரசிம்ம ராவின் ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தின.

*1993-ல் மதப்பிரச்சனையில் அரசாங்கம் தலையிடக்கூடாது எனும் மதச்சார்பின்மை மசோதாவை சிறுபான்மை அரசாக இருந்ததால், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.

*1992 ஜுலை 17, டிசம்பர் 21 மற்றும்1993 ஜூலை 26 என மூன்று முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் நரசிம்ம ராவ்.

*பஞ்சாயத்து புனரமைப்பு நரசிம்ம ராவ் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று. 73-வது சட்டத்திருத்தத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் முறைக்கு புத்துயிர் ஊட்டினார்.1993 ஏப்ரல் 24ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

#வெளியுறவுக்கொள்கை

நரசிம்மராவின் படிப்படியான அணுகுமுறை இந்திய வெளியுறவுத்துறையில் விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.1994ல் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் பயனாக ஆறு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் ரஷ்யாவுடன் இணக்கமாக இருந்ததை, அமெரிக்கா விரும்பாத போதிலும் சுமூகமாகவே உறவு தொடர்ந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின் இந்தியா வந்த ரஷ்யப் பிரதமர் விக்டர் செர்னோமிர்டினுடன் பலதரப்பு உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டன.1992ல் நேபாளத்துடனான உறவு சுமூகமாக இருந்தது. இந்தியா-இலங்கை உறவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது.

1994 ஜூனில் சீனாவுடன் நேரடி வர்த்தகக் கூட்டு ஒப்பந்தம் கையொப்பமாகின. பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பாகிஸ்தானுக்கும், பங்ளாதேஷூக்கும் கசப்புணர்வு இருந்தது.

நரசிம்மராவ்

#சிரிக்காத மேதை

வசீகரமிக்க தோற்றமில்லை, நேரு குடும்ப வாரிசில்லை. இக்கட்டான சூழ்நிலையில் சிறுபான்மை அரசாங்கத்தை ஐந்து ஆண்டுகள் நடத்துவதென்பது சாதாரண விஷயமில்ல. சிரிக்கத் தெரியாதவர் எனச் சொன்னாலும், தெலுங்கு, மராத்தி, கன்னடம், உருது, இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் புலமை பெற்றவர்.17 மொழிகளில் பேச வல்லவர். தீவிர படிப்பாளி.

புனைப் பெயரில் கட்டுரைகள் பல எழுதியவர். இன்சைடர் எனும் நாவலை 1998-ல் வெளியிட்டார்.

பொருளாதார சீர்திருத்தம் குறித்து பேசும்போது நிச்சயம் பாராட்டவோ, விமர்சிக்கவோ இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நினைவு கூறப்படுவார் நரசிம்மராவ்!

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/news/politics/short-history-about-the-journey-of-former-pm-narasimha-rao

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக