Ad

செவ்வாய், 13 டிசம்பர், 2022

ஜி20 முதல் செயற்குழு கூட்டம்: மும்பை சாலையோர குடிசைகள் பேனர் மற்றும் துணியால் மூடி மறைப்பு!

இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு மும்பையில் முதல் முறையாக அதன் மேம்பாட்டு செயற்குழு கூட்டம் நடக்கிறது. இன்று தொடங்கி 15-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கூட்டத்தில் ஜி-20 நாடுகளில் இருந்து குழுக்கள் வந்து கலந்து கொள்கிறது. அவர்கள் வந்து செல்லும் சாலைகளை மும்பை மாநகராட்சி நிர்வாகம் இரண்டு நாள்களாக சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி இருக்கிறது. அதோடு சாலையோரம் இருக்கும் குடிசைகள், சாக்கடைகள் வெளிநாட்டுக்குழுக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக வரவேற்பு பேனர்கள் மற்றும் துணியால் மூடி மறைத்திருக்கின்றனர். வெளிநாட்டு குழுக்கள் சாந்தாகுரூஸில் உள்ள நியு கிராண்ட் ஹையத் ஹோட்டலில் தங்குகின்றனர்.

சாலைகள் புதுப்பிப்பு

ஜி20 கூட்டமும் இங்குதான் நடக்கிறது. இதனால் அந்த ஹோட்டலுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. பல சாலைகள் போக்குவரத்துக்காக 4 நாள்களும் மூடப்பட்டிருக்கிறது. ஜி20 கூட்டத்துக்கு வரும் குழுக்கள் இன்று தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கும் சென்றுபார்வையிடுகின்றனர். அங்கு அவர்களுக்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 16-ம் தேதி ஜி20 உறுப்பு நாடுகளின் குழுக்கள் போரிவலியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருக்கும் கன்ஹரி குகைகள் சுற்றிக்காண்பிக்கப்படுறது. இதனால் அவர்கள் வந்து செல்லும் அனைத்து சாலைளும் சுத்தப்படுத்தப்பட்டு தண்ணீர் ஊற்றி கழுவி அழகுபடுத்தி இருக்கின்றனர்.

மேம்பாலம் அழகுபடுத்தப்படுகிறது

வாகனங்களை சிக்னல்களில் கட்டுப்படுத்தும் ஜிப்ரா கோடுகளைக்கூட புதிதாக போட்டிருக்கின்றனர். வெளிநாட்டுக்குழுக்கள் தங்கும் ஹோட்டலை சுற்றி மட்டும் 4.50 கோடி செலவு செய்து அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. 3 நாள்கள் நடைபெறும் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடைபெறுகிறது. எனவே பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் சாலைகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதோடு, தெருவோர கடைகள் எதுவும் இல்லாத வகையில் பார்த்துக்கொண்டனர். மொத்தம் 25 கோடி செலவு செய்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் வெளிநாட்டுக்குழுக்கள் வந்து செல்லும்பகுதிகளை அழகுபடுத்தி இருக்கிறது. பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வழியாக ஓடும் சாக்கடை கலந்த மித்தி ஆற்றையும் வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டனர்.

குடிசைகள் மூடி மறைப்பு

பாந்த்ரா பகுதியில் சாலையோரம் வசிக்கும் குடிசையில் வசிக்கும் சாஹித் அன்சாரியிடம் இது குறித்து கேட்டதற்கு, ``வெளிநாட்டுக்குழுக்களுக்கு எங்களது குடிசைகள் தெரியாமல் இருப்பதற்காக இது போன்று குடிசைகளை மறைத்திருக்கலாம்'' என்று தெரிவித்தார்.

அதேசமயம் சாலைகள் அழகுபடுத்தப்பட்டது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனை பார்க்கும் போது அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த போது சாக்கடைகள், குடிசைகள் சுவர் எழுப்பி மூடி மறைக்கப்பட்டதுதான் ஞாபகத்துக்கு வருவதாகவும் தெரிவித்தனர்.

ஜி20 கூட்டத்தில் ஜி20 நாடுகளின் பருவநிலை மாற்றம், எரிசக்தி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இது தவிர வேளாண்மை, கல்வி போன்ற அம்சங்கள் குறித்தும் விவாதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாலையோர குடிசைகள் மூடி மறைப்பு

பெண்களின் பங்களிப்பு, அவர்களுக்கு முக்கிய துறைகளில் பிரதிநிதித்துவம் கொடுப்பது, சமூக பொருளாதார மேம்பாடு, ஜி20யின் மேம்பாட்டு செயற்குகுழு இது வரை செய்த பணிகள் குறித்தும் 3 நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மேம்பாட்டுக்கற்கான தகவல்கள், 2030ஐ எதிர்கொள்ள ஜி20 நாடுகளின் பங்கு போன்றவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்தியா நடத்தும் முதல் கூட்டம் என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதியுடன் இருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/india/mumbai-roadside-slum-areas-are-covered-with-banners-and-clothes-due-to-the-g20-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக