லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் மூலம், அதன் உரிமையாளர் அருள் சரவணன் மக்களிடம் பரிட்சயமானார். விளம்பரங்களில் வைரலான பிறகு, அவர் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் படம் வெளியாகியிருந்தது.
மக்களால் லெஜண்ட் சரவணா என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில் விளம்பரம், வெள்ளித்திரை வரிசையில் அடுத்ததாக அரசியல் என்ட்ரி குறித்தும் அவர் மனம் திறந்திருக்கிறார்.
கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் அருள் சரவணன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சென்னை எப்படி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறதோ, அதேபோல கோவையும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருப்பதை பார்க்க முடிகிறது.
விண்ணை முட்டும் அளவுக்கு வந்த நிறைய அழைப்புகளை நிராகரித்திருக்கிறேன். நண்பருடைய அன்புக்கு கட்டுப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
அடுத்தப் படத்துக்கான கதை தயாராகி வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும். நான் அரசியலுக்கு வருவதை மக்களும், மகேசனும்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் கூப்பிட்டால் நிச்சயம் வருவேன்.
இன்றைய அரசியல் நன்றாகப் போய் கொண்டிருக்கிறது. அரசாங்கம் சிறப்பாக செயல்படுகிறது. அரசியலும் சரி, மக்களின் எண்ணமும் சீரிய சிந்தனையில் போகிறது” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/legend-arul-saravanan-opens-up-about-his-political-entry-in-kovai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக