Ad

வியாழன், 3 நவம்பர், 2022

"சொந்த வீடு போனாலும் வாடகை வீட்டுல சந்தோஷமா இருக்கேன்!"- கஞ்சா கருப்பு உருக்கம்

`பிதாமகன்' படத்தின் மூலம் அறிமுகமானதால், அதன் கதாபாத்திரத்தின் அடைமொழியுடன் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அமீரின் `பருத்திவீரன்', ஷங்கர் தயாரித்த `அறை எண் 305-ல் கடவுள்' என ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். பிக் பாஸ் முதல் சீசனிலும் ஆஜரானவர். இப்போதும் அரை டஜன் படங்களில் நடித்துவரும் கஞ்சா கருப்புவிடம் பேசினேன்.

ஒரு காலகட்டத்தில் பிஸியா இருந்தீங்க... அதன்பிறகு ஒரு இடைவெளி இருந்துச்சு. இப்ப மறுபடியும் பிஸி ஆகியிருக்கீங்க... என்ன பிளான்?

கஞ்சா கருப்பு

"நெசம்தான். வெற்றிகளை சந்திக்கறவனைவிட தோல்விகளை சந்திக்கறவன், அதிலிருந்து பாடங்களைக் கத்துக்குவான். தோல்விதரும் பாடம்தான் அடுத்த படிக்கட்டில் கால்வைக்க உத்வேகத்தைக் கொடுக்கும். ஒரு படவிழாவில் இயக்குநர் அமீரண்ணன் சொன்னதை இப்பவும் வேதவாக்கா எடுத்துக்கிட்டு உழைக்கறேன். 'சினிமாங்கறது ஒரு பொக்கிஷம். சுழன்றுகிட்டே இருக்கற ஒரு கருவி மாதிரி... அதை உன் கையில ஏந்திதான் தாங்கிக்கணும். அதை விட்டுட்டீனா உடைஞ்சிடும். அப்படி உடைஞ்சிட்டா அது மறுபடியும் ஒட்டமுடியாது'ன்னார். ஆரம்பக்காலங்கள்ல நான் கவனமில்லாமல் இருந்தேன். இப்ப கவனத்தோடு இருக்கேன். மேனேஜர் வச்சா, என் வாழ்க்கை கெட்டுப்போயிடும்னு புரிஞ்சுக்கிட்டேன். என் சம்பளம் எந்தத் தொகையா இருந்தாலும் நாமே நேரடியா பேசி வாங்கிக்கறதுதான் என் வாழ்க்கைக்கு நல்லதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். அந்தப் பாடத்தால என் வாழ்க்கை நல்லபடியா போயிட்டிருக்கு."

கடந்த தேர்தல்ல அ.தி.மு.க-வுக்கு பிரசாரமெல்லாம் போனீங்க... முன்னாள் முதல்வர் கருணாநிதி கையால கலைமாமணியும் வாங்கியிருக்கீங்க... இப்ப முதல்வர் ஸ்டாலின் ஆட்சி எப்படியிருக்கு?

''நல்லா இருக்கு. பிரச்னை எதுமில்ல. மக்களுக்குத் தேவையான விஷயங்கள் நிறைய நல்லா பண்றார். அதைப்போல தொடர்ந்து சரியா பண்ணிட்டு இருந்தால், அடுத்தும் அவங்கதான் ஜெயிப்பாங்க. அதைப்போல, இளைய தளபதி உதயநிதி ஸ்டாலினும் நல்லா பண்றார். கலைஞர் ஐயாவைப் பத்தியும் சொல்லியாகணும். சினிமாவில் யாருமே செய்திராததை அவர் செய்திருக்கார். படத் தலைப்புகளைத் தமிழில் வைத்தால் வரிச்சலுகைன்னு கொடுத்தார். தனிப்பட்ட முறையிலும் அவர் கையால அவர் கையெழுத்து போட்டுக் கலைமாமணி விருது வாங்கியிருக்கேன். அந்த விழாவுல மன்மோகன் சிங்கும் இருந்தார். மேடையில என் பெயரை அறிவிக்கும் போது, மன்மோகன் சிங் 'கஞ்சானா என்ன அர்த்தம்?'ன்னு கலைஞர் ஐயாகிட்ட கேட்க, அதற்கு ஐயா பதில் சொன்னார். அதெல்லாம் இனிமையான தருணங்கள்!"

கஞ்சா கருப்பு

இப்ப நடிக்கற படங்கள்..?

"மலையாளத்தில் ரெண்டு படங்கள் நடிச்சு முடிச்சிட்டேன். அமீரண்ணன் நடிக்கற 'நாற்காலி', சீனு ராமசாமியண்ணனின் 'இடிமுழக்கம்' படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. அடுத்து பரபரப்பான அரசியல் கதை கொண்ட ஒரு படத்தில் வித்தியாசமான ரோலில் நடிக்கறேன். அது பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும்னு அந்தப் படத்தை ரொம்ப எதிர்பார்க்கறேன்."

அது சரி, இப்ப சென்னையில் இருக்கீங்களா இல்ல, சிவகங்கையில இருந்து வந்துட்டுப் போயிட்டு இருக்கீங்களா?

"கண்ட கண்டவய்ங்கல்லாம் மெட்ராஸுக்குள்ள சுத்துறாய்ங்க, இந்த கஞ்சா கருப்பு சுத்தக்கூடாதா? சென்னையிலதான் இருக்கேன். என்னுடைய பழைய வீடான 'பாலா - அமீர் இல்லம்' வீட்டைக் கொடுத்துட்டேன். இப்ப மாசம் முப்பாதாயிரம்ன்னு வாடகை வீட்டுல இருக்கேன். சொந்த வீடு போனாலும் வாடகை வீட்டுல சந்தோஷமாதான் இருக்கேன்."



source https://cinema.vikatan.com/tamil-cinema/ganja-karuppu-interview-about-his-acting-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக