Ad

புதன், 1 செப்டம்பர், 2021

`புதுச்சேரிக்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் தெலங்கானாவுக்குச் சென்றுவிட்டன!’ -எதிக்கட்சித் தலைவர்

புதுச்சேரி சட்டசபையில் 2021-22 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ததையடுத்து அதன் மீது உறுப்பினர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.கவின் எம்.எல்.ஏவுமான சிவா பேசும்போது, ``தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி இரண்டு முறையும், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரும் புதுச்சேரிக்கு வந்து நிறைய வாக்குறுதிகள் கொடுத்தனர். நீங்களும் (முதல்வர் ரங்கசாமி) மத்தியில் உள்ள ஆட்சியுடன் இணைந்து செயல்படக்கூடிய ஆட்சி புதுச்சேரியில் இருந்தால் நிதி நிறைய வரும், கடன் சுமை குறையும் என்றெல்லாம் கூறினீர்கள்.

அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தவுடன் பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தென்னிந்தியாவில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக தேர்தலுக்குப் பின்னர் சபாநயாகர், அமைச்சரவை அமைப்பதில் மூன்று மாதம் படாதபாடுபட்டு பதவிகளை பெற்றனர். இதனால் பட்ஜெட்டில் பொதுமக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 1.5 சதவிகிதம்தான் கூடுதல் நிதி கிடைத்துள்ளது. அதுபோல் மாநில அந்தஸ்து பற்றிய அறிவிப்பும் இடம் பெறவில்லை.

புதுச்சேரி பட்ஜெட்

கூடுதலாக ரூ.1,684 கோடி வருவாய் ஈட்ட இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதை செய்ய முடியுமா? எதார்த்தமாக பார்த்தால் கடனை தள்ளுபடி செய்ய முடியாது. ஆனால் வட்டி அதிகமின்றியும், கடனை நீண்ட காலம் செலுத்தும் வகையிலும் கேட்டுப் பெறலாம். புதுச்சேரியில் 22 பொதுத்துறை நிறுவனங்கள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், பத்து நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதில் பணிபுரிந்த 10,000 பேர் 8 மாதம் முதல் 5 ஆண்டுவரை சம்பளம் இல்லாமலும், வேலை இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளால் தொடங்கப்பட்டது. தற்போது ரூ.500 கோடி முதலீடு செய்தால் கூட அதுபோன்ற ஆலையை ஆரம்பிக்க முடியாது. மூடப்பட்டிருக்கும் அந்த மில்லுக்கு ரூ.40 கோடி மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மில்லை மீண்டும் திறந்து இயக்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. அந்த சர்க்கரை ஆலையில் எரிசாராயம், மின்சாரம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை கூடுதலாக உற்பத்தி செய்து இயக்கலாம்.

தொழிலதிபர்கள் மாநாடு நடத்துவது ஒருநாள் செய்தியாக மட்டுமே வரும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு தொழிற்சாலை கூட கொண்டு வரப்படவில்லை. வரும் தொழிலதிபர்கள் என்ன சலுகை தருவீர்கள் என்றுதான் கேட்பார்கள். எனவே தனி நிதி பெற்று தொழில் அதிபர்களுக்கு சலுகையை அறிவியுங்கள். தொழிலதிபர்கள் மின் இணைப்பு பெறுவதற்கே நடந்து, நடந்து இரண்டு ஜோடி செருப்பு தேய்ந்துவிடும். புதுச்சேரியில் ஒற்றைச்சாளர முறை இல்லை. எனவே இவைகளை முறைப்படுத்தி, சலுகை திட்டங்களை தொழில் தொடங்குபவர்களுக்கு அறிவிக்க வேண்டும். நாம் சொந்த காலில் நிற்கும் வகையில் வருமானம் ஈட்டுவதற்கு வழி காண வேண்டும். நிலத்தடி நீர் எடுக்காத, மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். சலுகைகள் ஏதும் தரப்படாததால் புதுச்சேரிக்கு வர நினைத்த அனைத்து தொழிற்சாலைகளும் தெலுங்கானாவிற்கு சென்றுவிட்டன.

முதல்வர் ரங்கசாமி

தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் சேதராப்பட்டில் இருபது ஆண்டுகளாக எதற்கும் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. ஆவடியில் இருந்து 60 பேர் கொண்ட குழு இடம் ஒதுக்கி கொடுத்தால் தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை துவங்குவதாக கூறி முன்வந்தது. அந்த கோப்பு மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. அந்த தொழிற்சாலை வந்திருந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்ப கிடைத்திருக்கும். முதல்வர் ஒருமுறை டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். சந்தித்து பேசினால் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்கும்.

மானிய விலையில் 4,000 ஆயிரம் கறவை மாடுகள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள். அவைகளை கொண்டுவர 500 லாரிகள் தேவைப்படும். அது முடியுமா? வெறும் அறிவிப்பாக இருந்தால் 10,000 என்று அறிவிக்க வேண்டியதுதானே, மக்கள் சந்தோஷப்படுவார்களே?

Also Read: புதுச்சேரி: `மாநில அந்தஸ்து முதல் பணி நிரந்தரம் வரை!’ -முதல்வர் ரங்கசாமி உரையின் முக்கிய அம்சங்கள்

வீடற்ற ஏழைகளுக்கு மனைப்பட்டா கொடுப்பதே நின்றுவிட்டது. தகுதியானவர்களுக்கு இலவச மனைப்பட்டா கொடுங்கள். நன்றாக விளையும் இடங்களை மனைப்பட்டாக்கள் போட அனுமதிக்கின்றனர். கரம்பாக கிடக்கும் நிலங்களை விவசாய நிலங்கள் என்று மனைப்பட்டா போடுவதற்கு அனுமதி மறுக்கின்றனர். வில்லியனூர் தொகுதியில் 425 லே-அவுட் போட்டு விற்றுள்ளனர். பத்திரப்பதிவுத் துறை மிக, மிக மோசமாக போய்விட்டது. மின் துறையை தனியார் மயமாக்க மாட்டோம் என்று அறிவியுங்கள். தற்போது மின்துறையில் உள்ள கட்டமைப்பை இரண்டு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்தாலும் உருவாக்க முடியாது. இன உணர்வை மங்கச் செய்யும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவியுங்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-opposition-leader-slams-newly-formed-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக