Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

விநாயகர் சதுர்த்தி: களையிழந்த கொசப்பேட்டை; அடையாளம் காக்கப் போராடும் சிலைத் தொழிலாளர்கள்!

சிங்கார சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மிகப்பெரிய வரலாறும், தனித்துவமிக்க அடையாளமும் இருக்கிறது. சலவைத் தொழிலுக்கு வண்ணாரப்பேட்டை, கால்நடை வளர்ப்பிற்கு பல்லாவரம், நெசவு தொழிலுக்கு சிந்தாதிரிப்பேட்டை, விகடக் கூத்துக்குக் கிண்டி எனச் சென்னையின் சந்து பொந்துகளுக்குக் கூட தனிக் கதை இருக்கிறது. ஆனால், காலசக்கரத்தின் அசுர சூழலில் தொழில்நுட்பங்கள் வளர வளர சென்னையின் பூர்வ குடி மக்களுக்கே உரித்தான கைத் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அதன் காரணமாகச் சென்னைக்கே உரிய தனித்துவமிக்க தொழில் அடையாளங்களை இன்று நாம் இழந்து விட்டு, பெயரளவுக்கு `எங்க ஏரியாவில் ஒரு காலத்துல, இந்த தொழில் தான் ரொம்ப பேமஸ்!' என்ற முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் வண்ணாரப்பேட்டை போன்ற சென்னையின் சில பகுதிகளில் தங்களின் தொழில் அடையாளத்தைக் காப்பதற்காகச் சென்னையின் பூர்வ குடிமக்கள் நவீனமயமாக்கலுக்கு மத்தியிலும் நலிவடைந்து போன தங்கள் கைத்தொழிலைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஒரு காலத்தில் சென்னையில் சிலை தயாரிப்புக்குப் பேர் போன கொசப்பேட்டையில் இன்று சிலைத் தொழிலாளர்கள் சிலர் மட்டும் தங்கள் பகுதியின் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டிப் போராடிக் கொண்டிருக்கின்றனர். 'குயவர்கள் பேட்டை' என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட பகுதி இன்று காலப்போக்கில் மருவி புரசைவாக்கத்திற்கு அருகில் 'கொசப்பேட்டை' என்று குறுகிப் போய் இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிலைத் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வந்த இன்றைய கொசப்பேட்டையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் களிமண்ணாலான சிலை தயாரிப்பினை குடிசை தொழிலாகச் செய்து வந்தனர்.

கொசப்பேட்டை

ஆனால், காலப்போக்கில் சென்னையின் பரிணாம வளர்ச்சியில் பூர்வகுடிகளின் பெரும்பாலான கைத் தொழில்கள் அழியத் தொடங்கிய நேரத்தில், கொசப்பேட்டை மக்களின் சிலை தயாரிப்பு தொழிலும் 1990-களின் இறுதியில் தொய்வைச் சந்தித்தது. களிமண் சிலை தயாரிப்பு ஒன்றினை மட்டுமே நம்பி வாழ்க்கை சக்கரத்தில் தலைமுறை தலைமுறையாய் சுழன்று கொண்டிருந்த மக்கள் கூட்டம், ஆட்டோ ஓட்டுவது, தொழிற்சாலைகளில் பணிக்குச் செல்வது என மாற்றுத் தொழில்களுக்கு மாறினார்கள். 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை அப்படியே 150, 100 எனக் குறைந்து போனது. இன்று வெறும் 40 குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் தசரா, கிருஷ்ண ஜெயந்தி எனச் சிலைகள் பிரதானமாகக் கருதப்படும் பண்டிகைகள் என்றாலே கொசப்பேட்டை தான் அனைவரின் நினைவுக்கும் வரும். அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கொசப்பேட்டைக்கு மிக முக்கிய தொடர்பும் இருக்கிறது. காரணம், கொசப்பேட்டையின் தெருக்கள் எங்கும் வர்ணங்கள் பூசித் தயாரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் தான்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்குப் பல மாதங்களுக்கு முன்பே கொசப்பேட்டையின் தெருக்கள் திருவிழாக் கோலம் பூண்டு விடும். இரவு பகலாக வர்ண கறை நீங்காத கரங்களுடன் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். சென்னையைத் தாண்டி ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கொசப்பேட்டையில் இருந்து ஆர்டரின் பேரில் வகை வகையாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால், கடந்த சில வருடங்களாக கொசப்பேட்டையின் தெருக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான கோலாகலம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதற்குத் தமிழக அரசால் விதிக்கப்பட்ட தடையே காரணம் என்கிறார்கள் அப்பகுதி சிலைத் தொழிலாளர்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கலவைகள் கொண்டு சிலைகள் செய்வதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து விட்டதால், இந்த சிலைத் தயாரிப்பு தொழிலை விட்டு வெளியேறி மாற்றுத் தொழில்களுக்குப் போனவர்கள் அநேகம் பேர்.

கொசப்பேட்டை

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சுமார் 40 குடும்பங்கள் மட்டும் பெரியளவிலான சிலைகள் செய்வதைத் தவிர்த்து விட்டு தங்கள் இல்லங்களிலேயே சிறு சிறு பொம்மைகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, விநாயகர், கிருஷ்ணர், ராமர், முருகர் என பல்வேறு கடவுள்களின் பொம்மைகளைக் குடிசைத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.

அதே போல், சிலை தயாரிப்பின் முக்கிய இடுபொருளான களிமண் போதியளவில் கிடைக்காமல் போனது, களிமண் பொம்மைகள் மீதான ஈர்ப்பு நகரத்து மக்களிடையே குறைந்து போனது என பல்வேறு காரணங்களால் கொசப்பேட்டையில் இன்று மண்பாண்ட சிலை தயாரிப்பு தொழில் நலிவடைந்து காணப்படுகிறது. இருப்பினும், கொசப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கடந்த சில வருடங்களாக அப்பகுதி சிலைத் தொழிலாளர்களால் தயாரிக்க முடியாமல் போனாலும், குயவர்கள் பேட்டை என்ற தங்கள் பகுதியின் அடையாளத்தைக் காப்பதற்காக சீஸன் நேரங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து அட்டைகளால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

Also Read: வெளிமாநிலங்களிலிருந்து விநாயகர் சிலைகள் - அடையாளத்தைக் காக்க வாங்கி விற்கும் கொசப்பேட்டை மக்கள்!

ஆனால், கடந்தாண்டு அதற்கும் வழியில்லாமல் செய்து விட்டது கொரோனா பெருந்தொற்று. நோய் பரவலால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடத் தமிழக அரசு தடை விதித்ததால் கொசப்பேட்டை பகுதி கடந்தாண்டு களையிழந்து காணப்பட்டது. நீண்டு கொண்டே சென்ற நெடுநீள ஊரடங்கில் சிலை தயாரிப்பு தொழில் முடங்கிப் போகவே, அந்த தொழிலை மட்டுமே நம்பி தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வந்த 40 குடும்பங்களின் வாழ்வாதாரம் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த வருடமும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகத் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பண்டிகை கால பரபரப்பின்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது கொசப்பேட்டை. கொசப்பேட்டையின் அடையாளமாகக் கருதப்படும் 'ஐந்து லைட்' பகுதி பிரம்மாண்ட விநாயகர் சிலைகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொசப்பேட்டை பொம்மைகள்
கமலம்மா பாட்டி

ஆங்கிலேயர் காலம் முதல் கொசப்பேட்டையில் தலைமுறை தலைமுறையாய் மண்பாண்ட சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கமலாம்மா பாட்டியின் குடும்பத்தினரைச் சந்தித்து கொசப்பேட்டையின் வியாபார நிலை குறித்துக் கேட்டறிந்தோம்.

அச்சிலிருந்து வெளியில் எடுத்த சின்னஞ்சிறிய பிள்ளையார் சிலைகளுக்கு வர்ணம் பூசிய படியே நம்மிடம் பேசினார் 75 வயதான கமலம்மா பாட்டி, "பிரிட்டிஷ் காரங்க காலத்துல இருந்தே சென்னையில களிமண் பொம்மைகள்'னாலே கொசப்பேட்டை தான். குறிப்பாக சாமி சிலைகளுக்கு இந்த இடம் ரொம்ப பேமஸ். நான் எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்துல இருந்தே இந்த தொழில் தான் செஞ்சுட்டே இருக்கேன். எங்க குடும்பத்துக்கே இந்த தொழில் தான் சோறு போட்டுட்டு இருக்கு. சென்னையில பெரிய விநாயகர் சிலை வெச்சு கொண்டாடுற பழக்கம் ஆரம்பிச்சதுல இருந்தே கொசப்பேட்டையில சிலைத் தொழிலாளர்கள் நாங்களும் பெரிய சிலைகள் தயாரிச்சு சென்னை முழுக்க சப்ளை செய்ய தொடங்கினோம். அதுக்கு முன்னாடி வரைக்கும் எங்ககிட்ட அதிகபட்ச பெரிய சிலையே 2 அடி தான். பெரிய விநாயகர் சிலைகள் இங்க செய்ய தொடங்கியதும் இந்த பகுதி இன்னும் பிரபலமாகிடுச்சு. சென்னையை தாண்டி ஆந்திரா, ஒடிஸா, மகாராஷ்டிரானு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வெச்சுட்டு இருந்தோம். எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்துல இந்த கொசப்பேட்டையில மொத்தம் 200 குடும்பங்கள் இந்த தொழில்'ல ஈடுபட்டுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ, வெறும் 40 குடும்பங்கள் மட்டும் தான் இத குடிசை தொழிலா செஞ்சுட்டு இருக்குறோம். எங்களுக்கு இது தான் முழு நேர தொழில். வருஷம் முழுக்க களிமண்ணும் கையுமா தான் இருப்போம்.

விநாயகர் சதுர்த்தி, தசரா, கிருஷ்ணஜெயந்தி'னு சில பண்டிகைகள நம்பி தான் வாழ்கையை ஓட்டிட்டு இருக்குறோம். விநாயகர் சதுர்த்தி வர்றதுக்கு மூணு - நாலு மாசத்துக்கு முன்னாடியே பிள்ளையார் சிலைகள் செய்ய ஆரம்பிச்சிடுவோம்.முன்னெல்லாம் இங்க அதிகபட்சமா 10 அடி வரைக்கும் விநாயகர் சிலைகள் செஞ்சுட்டு இருந்தோம். ஆனா, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை போட்டதால கடந்த சில வருஷமா இந்த ஏரியாவே களையிழந்து கிடக்கு. நாங்க வெளிமாநிலங்களுக்கு சப்ளை செஞ்ச காலம் மாறி, விநாயகர் சதுர்த்திக்கு வெளிமாநிலங்கள்ல இருந்து பெரிய சிலைகள் வாங்கி மேல காசு வெச்சு வித்துட்டு இருந்தோம்.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

வாங்குற சிலைக்கு வண்டி கூலி, ஆள் கூலி'னு மேல ஒரு 3,000 வெச்சு விற்பனை செய்வோம். அதே மாதிரி சிறிய பொம்மைகளை சின்னதா லாபம் வெச்சு பொம்மை வியாபாரிங்களுக்கு கொடுத்துடுவோம். ஆனா, இன்னைக்கு இந்த தொழில் ரொம்ப நலிவடைஞ்சு போயிடுச்சு. மக்கள் முன்ன மாதிரி எங்க பொம்மைகள விரும்புறதில்ல. களிமண் பொம்மைகள் மீதான ஈர்ப்பு குறைஞ்சிருச்சு. பெரும்பாலும் இப்ப எல்லாருமே பீங்கான் பொம்மைகளை தான் விரும்புறாங்க. அதே போல, களிமண் விலையும் ரொம்ப அதிகமாகிட்டதால முன்ன மாதிரி இந்த தொழில்'ல லாபம் கிடைக்குறதில்ல. இருந்தாலும், வீம்புக்கு இந்த தொழில் செஞ்சுட்டு இருக்குறோம்" என்றார் கமலா பாட்டி.

தொடர்ந்து 30 வருடங்களுக்கும் மேலாகச் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் மோகனிடம் பேசினோம். "போன வருஷம் கொரோனா ஊரடங்கால எங்க வியாபாரம் ரொம்ப மோசமா போச்சு. மாசக்கணக்குல நீண்டுகொண்டே போன ஊரடங்கால செஞ்சு வெச்ச பொம்மைகள் எல்லாம் தேங்கி வெடிச்சு வீணா போச்சு. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமை ஏற்பட்டுச்சு. அப்ப வயித்த கழுவ காய்கறி கடை போட்டு சமாளிச்சிட்டு இருந்தோம். இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா எங்க தொழில் மீண்டு வந்துட்டு இருக்கு.

கொசப்பேட்டை

போன வருஷத்துக்கு ஒப்பிடும் போது இந்த வருஷம் கொஞ்சம் பரவாயில்ல, ஆரம்பத்துல இருந்தே ஆர்டர்கள் நல்லாவே வந்துட்டு இருக்கு. இப்ப தான் கிருஷ்ண ஜெயந்தி வியாபாரம் முடிஞ்சிது. சென்னையில இருக்குற பொம்மை வியாபாரிங்க எல்லாரும் முன்கூட்டியே சொல்லி வெச்சு வாங்கிட்டு போனாங்க. இப்ப விநாயகர் சதுர்த்தி விற்பனை நடந்துட்டு இருக்கு. போன வருஷமே அரசாங்கம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடை விதிச்சதால, இந்த வருஷம் பெரிய சிலைகள் எதையும் நாங்க வாங்கல. அறிவிப்பு வந்ததுக்கு பிறகு பார்த்துக்கலாம்'னு விட்டுட்டோம். இப்ப சின்ன சிலைகள மட்டும் தான் விற்பனை செஞ்சுட்டு இருக்குறோம். இந்த தொழில்ல பெருசா லாபமில்ல, இருந்தாலும் இது தான் எங்களோட அடையாளம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/story-of-chennai-kosapet-statue-workers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக