Ad

புதன், 1 செப்டம்பர், 2021

AKS - 8|மதுரையை எரித்த கண்ணகியே சென்னை வந்தாலும் கையில் சிலம்போடு ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் நிச்சயம்!

தேனி பாண்டியனும், கவிதாவும் காதலர்களாக இருப்பார்கள் என ஒரு முடிவுக்கு வந்திருந்த நமக்கு அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள் மட்டுமே என சொல்லி ட்விஸ்ட் கொடுக்கிறது நேற்றைய எபிசோட்.

பாண்டியனின் தந்தையும், கவிதாவின் தந்தையும் நண்பர்கள். அவர்கள் இருவரும் பிரியக்கூடாது என அருகருகே வீடுக் கட்டிக் கொள்கிறார்கள். பாண்டியனும், கவிதாவும் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாக படிக்கிறார்கள். இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதும், எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதும் சிறுவயது முதலே தொடரும் பழக்கம். சென்னையில் வேலைக்கு வந்த பாண்டியனுடன் கவிதாவை எப்படி அனுமதித்தார்கள் என்று புனிதா கேட்கிறாள். வழியனுப்பி வைத்ததே கவிதாவின் தந்தைதான் என்று பாண்டியன் சொல்வதை புனிதா ஆச்சரியமாக பார்க்கிறாள்.

AKS - 8 | ஆதலினால் காதல் செய்வீர்

தனது பள்ளி வயதில் இருந்து நண்பர்களுடன் தொடர்ந்து நட்புடன் இருக்க ஆண்களுக்கே இங்கே அதிகம் சாத்தியம். பேரன் பேத்தி எடுத்தும்கூட நாள்தோறும் பார்த்துக் கொள்ளும் அளவு நட்புடன் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அருகருகே வீடு கட்டிக் கொள்வது, பிள்ளைகள் ஒன்றாக வளர்ப்பது என உறவினர்கள் போல இருக்கிறார்கள். பலருக்கும் தங்கள் உடன்பிறந்தவர்களுடன் இருப்பதைவிட நெருங்கிய நண்பர்களுடன் பழகுவது, மனம்விட்டு பேசுவது, ஈகோ இல்லாமல் இருப்பது எல்லாம் கம்ஃபர்டபிளாக இருக்கின்றது.

பெண்களுக்கு திருமணத்துக்குப் பிறகு தனது வகுப்பு தோழிகளுடன் பேசுவதற்குகூட வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டிய சூழ்நிலை இன்றும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இருக்கிறது.

விகடனின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸான ‘வல்லமை தாராயோ’வை பார்த்து மற்ற பெண்களுக்கு பரிந்துரைத்தபோது அதை பார்த்துவிட்டு பேசிய பெண்கள், சீரிஸ் தங்களுக்கு அப்படியே பொருந்திப் போவதாகவும், தங்கள் வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்த்ததைப் போல இருந்ததாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட அதைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட எல்லோருமே தங்கள் பள்ளி / கல்லூரி நட்பை தொடர்வதில்கூட வீட்டில் சிக்கல் இருக்கின்றது என்றார்கள்.

திரையில் ஆண்களின் நட்பு கொண்டாடப்படும் காட்சிகளை பார்க்கும்போது அது மகிழ்ச்சியாக இருந்தாலும் நமக்கு அது வாய்க்கவில்லை என்கிற ஏக்கம் பெண்களுக்கு நிச்சயமாக இருக்கும்.

AKS - 8 | ஆதலினால் காதல் செய்வீர்

ஆண் - பெண் நண்பர்களாக இருப்பதை சமூகம் எப்படி அணுகுகிறது என்பதை பாண்டியனும் கவிதாவும் காலையிலிருந்து வீடு தேடிய அனுபவம் மூலம் உணர்கிறார்கள்.

பாண்டியன், கவிதா போல் ஆணும், பெண்ணும் சிறுவயதிலிருந்து நண்பர்களாக இருப்பது, சேர்ந்து சுற்றுவது, ஒன்றாக தங்கி இருப்பதும் சமீபமாக ஒரு சிலருக்கு சாத்தியம்தான் என்றாலும் சமூகம் அவர்களுக்குள் காதல் இருக்குமா என்று எப்போதும் பூதக்கண்ணாடி கொண்டு உற்று நோக்குகிறது. ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டுமே இருப்பது சாத்தியம் இல்லை என்று திரைப்படங்களில் வசனங்கள் வைக்கிறார்கள். ஒரு சில திரைப்படங்கள் ஆண்-பெண் நட்பை போற்றி எடுக்கப்பட்டிருந்தாலும் படம் முடிவதற்குள் அதுவும் காதலாக மாறி விடுகிறது. பெண்களை சக மனிதராக பார்க்க முடியாதவர்கள், பெண்களை போகப் பொருளாக, உடமையாக மட்டுமே பார்ப்பவர்கள்தான் ஆணும், பெண்ணும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

’நம் சமூகம் இதைத்தான் ஏற்றுக்கொள்ளும்’ என்று இன்னும் பிற்போக்குத்தனங்களை அதிகமாக தொலைக்காட்சி சீரியல்கள் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில் டிஜிட்டல் சீரிஸ்கள் பிராக்டிகலாகவும், இன்றைய தலைமுறை பற்றிய புரிதலுடனும் வருவது வரவேற்கத்தக்கது.

காயத்ரி புனிதாவுக்கு கால் செய்து தன்னால் அந்த வீட்டில் அவர்களுடன் இருக்க முடியாது என்கிறாள். புனிதா வீட்டுக்கு வந்து பேசுவதாக சொல்லிவிட்டு வரும்போது வீடு கிடைக்கவில்லை என்று குழம்பிக்கொண்டிருந்த பாண்டியன், கவிதாவையும் உடன் அழைத்து வருகிறாள்.

AKS - 8 | ஆதலினால் காதல் செய்வீர்

புனிதாவை கண்டதும் அவள் முற்றிலும் நகரத்து பெண்ணாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடையும் காயத்ரியிடம் இதையெல்லாம் வீட்டில் சொல்ல வேண்டாம் என்கிறாள் புனிதா. ‘’இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லும் புனிதாவிடம், தன்னால் அப்படி இருக்க முடியாது, தான் எங்கு சென்றாலும் மாறமாட்டேன் என்கிறாள் காயத்ரி. ஆண்களுடன் ஒரே வீட்டில் தங்குவது தன்னால் இயலாது என்று சொல்லும் காயத்ரியை புனிதா சமாதானம் செய்கிறாள்.

இரவு காயத்ரியை அழைத்து அவள் ரூமுக்கு சென்று விட்டாளா என விசாரிக்கிறான் சுந்தர். அவள் இன்னும் சாப்பிடவில்லை என்று தெரிந்ததும், 7 மணிக்கு இரவு உணவை முடித்து விடவேண்டும், 8 மணி ஆகியும் ஏன் சாப்பிடவில்லை என்று தனது அறிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்கிறான் சுந்தர். காயத்ரி வாய்தவறி தனக்கு சிவாவுடன் ஏற்பட்ட மோதலை சொல்ல ஆரம்பிக்கிறாள். புனிதா ஓடிவந்த தடுத்து விடுகிறாள். பிறகு அவனை சமாளித்து முடித்ததும் புனிதா காயத்ரியிடம் இது போன்ற விஷயங்களை அவனிடம் சொன்னால், வேலைக்கு போக வேண்டாம் என அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் என்று சொல்கிறாள்.

AKS - 8 | ஆதலினால் காதல் செய்வீர்

பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, தனியாக விடுதிகளில் தங்க கூடாது, வெளியூர் செல்ல கூடாது, ஆண்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, ஒரே வீட்டில் தங்கக்கூடாது, காதலிக்கக் கூடாது, நண்பர்களாக கூட இருக்கக் கூடாது என்று ஏகப்பட்ட ’கூடாதுகளை’ நம் பண்பாடுகளில்(?!) ஒன்றாக்கி வைத்திருக்கிறார்கள்.

காயத்ரி புனிதா உடன் தங்குவதற்காக தான் ஊரில் இருந்து வருகிறாள். அங்கு ஆண்கள் தங்கி இருப்பார்கள் என்று காயத்ரிக்கு முன்னமே தெரியாது. தெரியவரும்போது காயத்ரியும் அதில் உடன்பாடு இல்லை என்றுதான் சொல்கிறாள். அவளுக்கு சுந்தரை பிடித்துதான் நிச்சயம் செய்து இருக்கிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் சிவாவுடன் ஏற்பட்ட மோதல் தெரிய வரும்போது பழி மொத்தமும் காயத்ரி மீதுதான் விழும். இதனால் பாதிக்கப்படுவது காயத்ரியின் வேலை, பொருளாதார சுதந்திரம் மற்றும் கனவுகள். இங்கே குடும்ப அமைப்பு அப்படித்தான் இருக்கிறது.

AKS - 8 | ஆதலினால் காதல் செய்வீர்

பெண்கள் தங்கள் மேல் தவறே இல்லை என்றபோதும் சில விஷயங்களை வீட்டில் சொன்னால் தங்களுடைய கல்வி மற்றும் வேலைக்கு பிரச்னை என்று பல நேரங்களில் உண்மைகளை மறைக்கவும் அல்லது பொய் சொல்லவும் செய்கிறார்கள். பெரும்பாலான பெண்களுக்கு இப்படி பொய் சொல்வதிலும், வீட்டில் உண்மையை மறைப்பதிலும் உடன்பாடு இருப்பது இல்லை. அது மிகவும் அசௌகரியமான செயல். உறவுகளுக்குள் யதார்த்தமாக இருக்க இயலாது.

ஆனால், ஆண்களைப்பற்றி ஆண்களே தவறான புரிதலுடன் இருப்பது, வீட்டில் அர்த்தமற்ற கட்டுப்பாடுகள், மற்றும் அச்சுறுத்தல்கள்தான் பெண்கள் தங்கள் மேல் தவறில்லாத விஷயங்களில்கூட பொய் சொல்ல காரணமாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு பிரச்னை வரும்போதும் வீட்டில் சொல்ல பயந்து பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு.

வீட்டுக்கு பாண்டியன், கவிதாவை அழைத்து வரும் புனிதா அவர்களை பரத் மற்றும் சிவாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். காயத்ரி ’கண்ணகி 2.0’ போல இருப்பதாகவும், விட்டால் சென்னையை எரித்து விடுவாள் என்றும் புனிதாவை கண்டதும் பரத் சொல்கிறான். கண்ணகியே வந்தாலும், “கையில இருக்கிற ப்ராப்பர்ட்டி செமையா இருக்கே.. Come, let’s do a Insta Reel with that babe” என்று அழைக்குமளவு அட்வான்ஸ்டாக இருக்கும் 2K கிட்ஸ் மத்தியில் காயத்ரி இரண்டு மாதங்கள் தாக்குபிடிப்பாளா?

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinaal-kaadhal-seiveer-episode-8-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக