Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

விழுப்புரம்: `அவள் இன்றி நான் இல்லை!' - இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரை சேர்ந்தவர் பூங்காவனம்(95). இவரது மனைவி எல்லம்மாள்(83). இந்த தம்பதிகளுக்கு செல்வராஜ் எனும் மகன் இருக்கிறார். இவர், தி.மு.க-யில் முக்கிய பிரமுகராக இருப்பவராம். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பூஜை செய்துவந்த பூசாரியான பூங்காவனம், 'ஏழு கொத்து' என சொல்லப்படும் அந்த கோவிலின் பூசாரி முறையில், இரண்டாவது முறையை சேர்ந்த மூத்த தலைமை பூசாரியாக இருந்து வந்துள்ளார். சுமார் 60 வருடங்களுக்கு மேற்பட்ட வாழ்க்கை பயணத்தில், மனைவி எல்லம்மாள் மீது அதீத அன்பு செலுத்தி வாழ்ந்து வந்திருக்கிறார் பூங்காவனம். மகன் சரியாக உபசரித்துக்கொள்ள, ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்துள்ளனர் இவ்விருவரும். இப்படியாக காலங்கள் கடந்து செல்ல, அன்பு மட்டும் இளமையாகவே இருக்க, வயது மட்டுமே இருவருக்கும் கூடி சென்றுள்ளது.

எல்லம்மாள், பூங்காவனம்

இந்நிலையில், நேற்று முந்தினம் (21.08.2021) இரவு 9.00 மணி அளவில் எல்லம்மாள் இயற்கை மரணம் எய்தியுள்ளார். தள்ளாடும் வயதுடைய பூங்காவனத்திடம் மனைவி இறந்த செய்தி அதிர்வலையாய் சென்று சேர்ந்துள்ளது. சோகத்தில் ஆழ்ந்துபோன பூங்காவனம், தன் குடும்ப முறைப்படி தன் மனைவிக்கு உரிய சடங்குகளை செய்துவிட்டு துக்கம் தாளாமல் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்துள்ளார். மனைவியின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் சோகத்தில் மூழ்கிய பூங்காவனம், மௌனமாகவே அமர்ந்து இருந்திருக்கிறார்.

சுமார் 12 மணி அளவில் 'அவள் இன்றி நான் இல்லை' என்பதை போல தன் உயிரையும் தன் மனைவி உயிர் சென்ற இடத்தில் இணைத்து அச்சமயமே சரிந்துள்ளார். எல்லாம்மாள் இறந்த துயரத்தில் இல்லம் நிறைந்திருக்க, பூங்காவனமும் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கொரோனா: `அவள் இல்லாமல் எப்படி இருப்பேன்?' - இறப்பிலும் பிரியாத கணவன், மனைவி

நெடுநாள் வாழ்க்கையை அன்புடன் ஒற்றுமையாகவே கடத்திய இந்த தம்பதி, இறப்பிலும் பிரியாது ஒன்றாகவே உயிர் துறந்த சம்பவம், ஒருவர் மீது ஒருவருக்கான பாசத்தை வெளிப்படுத்தியதோடு, அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/husband-and-wife-who-died-one-after-another-in-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக