Ad

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

மல்யுத்த போராளி ரவிக்குமார் தஹியா... கொலம்பிய வீரரை புரட்டிப்போட்டு காலிறுதிக்குத் தகுதி!

மல்யுத்த பூமியான ஹரியானாவிலிருந்து ஒலிம்பிக் கனவோடு கிளம்பிய இளைஞர்களில் ரவிக்குமார் தாஹியாவும் ஒருவர். டோக்கியோ ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் கொலம்பிய வீரரை வீழ்த்தி அடுத்து சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கிறார். நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படும் ரவிக்குமார் தஹியாவின் கதை என்ன?!

23 வயதாகும் ரவிக்குமார் ஹரியானாவின் சோனிபாட் மாவட்டத்திலுள்ள நஹ்ரி எனும் கிராமத்தில் பிறந்தவர். விவசாய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். ஹரியானாவிலிருந்து ஏகப்பட்ட மல்யுத்த வீரர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் இயல்பிலேயே ரவிக்குமாருக்கும் மல்யுத்தத்தின் மீது ஆர்வம் உண்டானது. ஹரியானா மண்ணின் பாரம்பரியத்தை நன்கு உணர்ந்திருந்த ரவிக்குமாரின் பெற்றோரும் அவருக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் மல்யுத்தத்திற்கு அனுமதி அளித்தனர்.

ஆசியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் சத்பால் சிங் எனும் பயிற்சியாளரிடமே ஆரம்பக்கால பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதன்பிறகு, அடுத்தக்கட்டமாக டெல்லியில் உள்ள பிரபலமான சத்ரசால் மைதான பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். நஹ்ரி கிராமத்திலிருந்து சத்ரசால் மைதானம் 40 கி.மீ தொலைவில் இருக்கிறது. ரவிக்குமாரின் தந்தை தினமும் 40 கி.மீ பயணம் செய்து தன்னுடைய மகனுக்கு தங்களுடைய பண்ணையில் கிடைக்கும் சுத்தமான பாலை கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

குடும்பத்தின் முழு ஆதரவாலும் சத்ரசால் பயிற்சி மையத்தின் தீவிர பயிற்சியாலும் ஜுனியர் அளவிலேயே வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். 2015-ல் ஜுனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரவிக்குமாருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓய்விலிருக்க வேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது. காயத்திலிருந்து மீண்டு புத்துணர்ச்சியுடன் வந்தவர் மீண்டும் பதக்க வேட்டை நடத்தினார்.

ரவிக்குமார் தஹியா
2018-ல் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019-ல் ப்ரோ ரெஸ்லிங் லீகில் ஹரியானா ஹேமர்ஸ் அணிக்காக ஆடிய அத்தனை போட்டிகளிலும் வென்று அணியை சாம்பியனாக்கினார். 2019, 2020 என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் தகுதியை அடைந்தார்.

யாருடனும் எளிதில் பேசிவிடாத கூச்ச சுபாவம் கொண்ட ரவிக்குமார் தஹியா மல்யுத்த களத்தில் இறங்கிவிட்டால் அதகளப்படுத்திவிடுகிறார். இப்போதும் சமீபத்தில் நடந்து முடிந்த போலந்து ஓபனில் வெள்ளி வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஒலிம்பிக்கின் முதல் சுற்றிலும் வென்றிருக்கிறார்.

மல்யுத்தத்தில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மீது அதிக கவனம் இருக்க, யாரும் எதிர்பாரா வகையில் ரவிக்குமார் தாஹியா பதக்கத்தை வென்று கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

ரவிக்குமார் கலந்துகொள்ளும் காலிறுதிப்போட்டி இன்றே நடைபெற இருக்கிறது!


source https://sports.vikatan.com/olympics/wrestler-ravikumar-dahiya-enters-into-quarterfinals-of-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக