Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

இறைவனே இறங்கிவந்து அருளும் இறையானூரில் மகா சுதர்சன ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

திருமாலின் திருக்கரத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் திருவருள் கொண்டவர் ஸ்ரீசக்கரத்தாழ்வார் எனும் மகா சுதர்சனர். ஆயுதம் என்றால் சுதர்சனம், வாகனம் என்றால் கருடன், தொண்டன் என்றால் அனுமன் என்பது வைணவ நம்பிக்கை. திருமாலுக்கு இணையானவர் என்று இவரை வேதாந்த தேசிகர் போற்றுகிறார். திருமால் ஆலயங்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் திருக்கரங்கள் கொண்டு அருள் செய்பவர். 'சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு' என பெரியாழ்வார் சுதர்சனரை வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையான சுதர்சனருக்கு வேதாந்த தேசிகர், சுதர்சனாஷ்டகத்தில் பலவாறுப் போற்றியுள்ளார்.

'பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தரும் சுதர்சனரே, அவர்களின் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர். சோம்பல், கடன், வியாதி, எதிரி பயம், தீய சக்திகளின் தாக்கம் போன்றவற்றை முற்றிலும் நீக்கி நிம்மதி அளிப்பவர். குறிப்பாக மாணவர்களின் மந்த நிலைகளை நீக்கி கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. ஸ்ரீசக்கரத்தாழ்வாரும், ஸ்ரீ நரசிம்மரும் இணைந்திருக்கும் திருவுருவை வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நால் வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், சப்த ரிஷிகளையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

ஹோமம்

ஆனி மாதம் தசமி திதியில் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்த ஸ்ரீசுதர்சனரின் ஜயந்தி விழா வரும் ஜூன் மாதம் 20-ம் தேதி வரவுள்ளது. தீமைகளை அழிக்கவும், நன்மைகளை காக்கவும் அருளும் ஸ்ரீசுதர்சனர் தீனதயாளர் என்று வணங்கப்படுபவர். இவரை வழிபடுவதால், ஜன்மாந்திர பாவங்கள், தோஷங்கள், தீங்குகள், தீவினைகள், கெடுதிகள் யாவும் நீங்கும். சிவப்பு மலர்களால் ஸ்ரீசுதர்சனரை அர்ச்சித்து, ஸ்ரீசுதர்சன காயத்ரி மந்திரத்தை உச்சரித்து இந்நாளில் இவரது அருளைப் பெறலாம். ஸ்ரீசுதர்சனரை சரண் அடைபவர்கள் மரண பயமின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள். ஸ்ரீசுதர்சன ஜயந்தி நாளில் சுதர்சனப் பெருமாளை வணங்கி அவரது ஆசியைப் பெறலாம் என்பது ஐதிகம்.

மகா சுதர்சனர் அவதரித்த அற்புதமான இந்தத் திருநாளில் திண்டிவனம் இறையானூரில் அருளும் ஶ்ரீஆதிகேசவர் மற்றும் ஶ்ரீசுதர்சனரின் திருவருளுடன், உலக நன்மைக்காகவும் கொடுந்தொற்று பாதிப்புகள் விரைவில் நீங்கி மக்கள் சுபிட்சம் பெறவும், வாசகர்களின் குடும்ப நலன் ஓங்கவும் அவர்களின் உற்றார் உறவுகள் அனைவரும் நன்மைகள் அடையவும் வேண்டி, மகா சுதர்சன ஹோமம் நடைபெறவுள்ளது. திண்டிவனத்துக்கு அருகே சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இறையானூர். இங்குஶ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஶ்ரீஆதிகேசவ பெருமாள். கேச - கேசிகை அசுரரை அடக்கியதில் பெரும் உதவி செய்த மகா சுதர்சனருக்குப் பெருமாள் இங்கு அருளாசி வழங்கினாராம். ஆகவே இங்கே விசேஷமாக ஆராதிக்கப்படுகிறார் மகா சுதர்சனர்.

இறையானூர் ஶ்ரீஆதிகேசவர் திருக்கோயிலில், சக்தி விகடனும் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து வழங்கும் ஶ்ரீமகா சுதர்சன ஹோம வைபவம், ஜூன் 20 அன்று காலையில் நடைபெறவுள்ளது.

சுதர்சன சக்கரம்

மகா சுதர்சன ஹோமத்தின் பலன்கள்

பொதுவாக இந்த ஹோமத்தில் ஶ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஶ்ரீசுதர்சன காயத்ரீ, ஶ்ரீசுதர்சன மாலா மந்திரம், ஶ்ரீநரசிம்ம மந்திரம், ஶ்ரீநரசிம்ம காயத்ரி, ஶ்ரீவிஷ்ணு காயத்ரி, ஶ்ரீலட்சுமி காயத்ரி, ஶ்ரீலட்சுமி மந்திரம், ஶ்ரீதன்வந்திரி மந்திரம், ஶ்ரீபாஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வது உண்டு. இதனால் இந்த ஹோமத்தின் பலன் அளவிடற்கரியதாக விளங்குகிறது.

ஶ்ரீசுதர்சன ஹோமம் ஆபத்துகளிலிருந்து நம்மைக் காக்கும். பயணம், நெருப்பு தொடர்பான பணிகள், போர்ச் சூழல், காட்டுப் பணிகள் முதலான சூழலில் நம்முடன் இருந்து ரக்ஷிக்கும் சுதர்சனமூர்த்தியின் துணையை இந்த ஹோமம் பெற்றுத் தரும்.

பூர்வஜன்ம வினைப் பயனால் சிலர் தீவினை களுக்கும் தீய சக்திகளின் பாதிப்புகளுக்கும் ஆளாக நேரிடும். இதுபோன்ற பாதிப்புகள் நம்மை அணுகவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது இந்த ஹோமம்.

மேலும் மகா சுதர்சன ஹோமத்தில் சங்கல்பித்து வழிபடுவதால், எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும், வீட்டில் கால்நடைச் செல்வங்கள் நிறைய பலனளிக்கும், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாவார்கள்,

கண்ணுக்குத் தெரியாத நோய்கள் குணமாகும். அத்துடன், சகல சாப தோஷங்களுக்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

உன்னதமான இந்த ஹோம வைபவத்தில் வாசகர்களும் தங்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் உற்றார் உறவுகளுக்காகவும் சங்கல்பம் செய்து இறையருள் பெறலாம்!

சுதர்சன ஹோமம்

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

இந்த நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/news/sakthi-vikatan-is-organizing-sudharshana-homam-at-iraiyanur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக