Ad

வியாழன், 17 ஜூன், 2021

மதுரை : 'சசிகலா வினோதமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்!' - ஆர்.பி.உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் இன்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்.பி. உதயகுமார்

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் அதிமுகவை உலகம் புகழும் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அவர் மறைவுக்குப் பின் அனைத்தும் தகர்ந்துவிடும், என்று எண்ணியவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ஜெயலலிதாவின் ஆட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். இந்த சாதனையைக் கண்டு நம் எதிரிகளும் வியந்தனர் .

மாபெரும் கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு , பகட்டான வாக்குறுதிகள், மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு சதவிகிதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது .மக்களின் பேரன்பைப் பெற்று அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

சசிகலா

உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும் , நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்தி கொண்ட சிலர், அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை விரித்துக் கொண்டிருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா, இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊர் அரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

மகத்தான இரு தலைவரின் ஒப்பற்ற தியாகத்தால் புகழ் பெற்றிருக்கும் அதிமுக, மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் என்றும் நிலைபெறுமே தவிர ஒரு குடும்பத்திற்காக ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம்.

ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாக இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல்,சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இனிமேலும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



source https://www.vikatan.com/news/politics/former-minister-rb-udhayakumar-conduct-admk-meeting-in-madurai-against-sasikala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக