Ad

புதன், 23 டிசம்பர், 2020

அபயா கொலை வழக்கு : பாதிரியார், கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனை! - சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் கன்னியாஸ்திரீ அபயா(19 ). கோட்டயம் பி.சி.எம் காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். 1992-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி பயஸ் டெந்த் கான்வென்ட் ஹாஸ்டல் கிச்சனுக்கு அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். முதலில் விசாரணை நடத்திய உள்ளூர் போலீஸார் அபயா கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக கூறினர். கான்வென்ட் கிச்சனில், ஃபிரிட்ஜ் அருகில் அபயாவின் ஒற்றைச் செருப்பு கிடந்திருக்கிறது. மற்றொரு செருப்பு கிணற்றுக்கு அருகில் கிடந்துள்ளது.

ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்த பாட்டில் போன்றவை அங்கு கிடந்துள்ளது. பிரிட்ஜ் பாதி திறந்த நிலையிலும், பாத்திரங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தது போன்ற தகவல்கள் வெளியானதால் இது கொலை என தகவல் கிளம்பியது. அபயாவின் தலையில் ஏற்பட்டிருந்த காயம், கழுத்தில் இருந்த நகக்கீறல்கள் உள்ளிட்டவை சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்தது.

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர்

இந்த வழக்கு குறித்து ஒன்பது மாதம் விசாரணை நடத்திய கிரைம் பிராஞ்ச், அபயாவின் செருப்பு, உடைகள் மற்றும் டயரி ஆகியவை அழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஜோமோன் புத்தன்புரா என்பவர் கோரிக்கை வைத்து தொடர்ந்து போராடினார். வழக்குச் செலவுக்காக தனது சொத்துக்களை விற்கும் நிலைக்கும் ஜோமோன் புத்தன்புரா தள்ளப்பட்டார். சி.பி.ஐ நடத்திய விசாரணையின் முடிவில் சிஸ்டர் அபயா கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்தது.

Also Read: 1992 டு 2020: கோடரியில் அடித்துக் கிணற்றில் தள்ளிய பாதிரியார்கள்... அபயா கொலை வழக்கில் நடந்தது என்ன?

கன்னியாஸ்திரீகள் மட்டும் வசிக்கும் பயஸ் டெந்த் கான்வென்டுக்குள் பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர் என்பவர் சென்று, அங்குள்ள கன்னியாஸ்திரீ செஃபியுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதிகாலையில் படிப்பதற்காக எழுந்த சிஸ்டர் அபயா தண்ணீர் குடிக்க கிச்சனுக்குச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூரையும், கன்னியாஸ்திரீ செஃபியையும் ஒன்றாக பார்த்துள்ளார். தகாத தொடர்பு வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கோடாரி கைப்பிடியால் அபயாவை அடித்துக் கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. பாதிரியார் கான்வென்டில் நின்றதை அந்தப் பகுதியில் கொள்ளையடிக்கச் சென்ற திருடன் அடைக்கா ராஜூ என்பவர் கண்டுள்ளார். அவரது சாட்சிதான் இந்த வழக்கிற்கு முக்கிய திருப்பமாக அமைந்தது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீ செஃபி

28 வருடங்களாக நடந்த சிஸ்டர் அபயா கொலை வழக்கில் இப்போது நீதி கிடைத்துள்ளது. சிஸ்டர் அபயாவை கொலை செய்தது பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி என்று திருவனந்தபுரம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விபரங்களை கோர்ட் இன்று அறிவித்தது.

அதன்படி பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூருக்கு கொலைக்காகவும், மடத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்காவும் என இரட்டை ஆயுள் தண்டனையும், ஆறரை லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. கன்னியாஸ்திரீ செஃபி-க்கு ஆயுள் தண்டனையும் ஐந்தரை லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Also Read: 28 வருட அபயா கொலை வழக்கு : திருடனின் சாட்சியால் பாதிரியார், கன்னியாஸ்திரீ சிக்கியது எப்படி?



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/cbi-court-sentenced-life-imprisonment-for-the-accused-in-nun-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக