Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

மதுரையில் கொடூரம் : `13 வயது சிறுமி; 3 வருடங்கள்..! - பாலியல் தொழிலில் தள்ளிய உறவினர்

மதுரையில் ஆதரவற்ற சிறுமியை கடந்த 3 வருடங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர சம்பவத்தில் 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிறார் வதை

மதுரையை சேர்ந்த அந்த சிறுமிக்கு(13 வயது), தந்தை இல்லாத நிலையில் தாயும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். குடும்பத்தின் ஏழ்மை நிலையை பயன்படுத்திக்கொண்ட உறவினர் பெண் ஜெயலட்சுமி என்பவர், நான் வளர்க்கிறேன் என்று கடந்த 2015-ல் சிறுமியை அழைத்து சென்றுள்ளார். ஆனால், அவரோ அச்சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில், பாலியல் தரகர்களாக செயல்பட்டு வரும், அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், சரவணபிரபு, சின்னதம்பி ஆகியோருடன் சேர்ந்து மதுரை மட்டுமின்றி பல இடங்களுக்கு அச்சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், இது தொடர்பாக ஆள்கடத்தல் தடுப்பு காவல்துறையினருக்கு புகார் சென்றதை அடுத்து, சிறுமியின் உறவினரான ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பெண் தரகர்களை தேடி வந்தனர்.

மதுரை உத்தங்குடி அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆள் கடத்தல், விபசார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் சென்று சிறுமியை மீட்டு சரவணபிரபு என்பவரையும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா உள்ளிட்ட 5 பெண் தரகர்களையும் கைது செய்தனர். அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள்

சிறுமியிடம் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியை 600-க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சிறுமியை வளர்ப்பதாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/in-madurai-5-women-arrested-in-child-abuse-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக