Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

103 கிலோ தங்கம் மாயம்: `இந்தியாவில் முதல்முறை!’ - சிபிஐ மீது வழக்கு பதிந்த சிபிசிஐடி

சென்னையில் தங்கம் இறக்குமதியில் ஈடுபட்டு வந்த சுரானா நிறுவனம் முறைகேடு செய்வதாக சிபிஐக்குப் புகார் சென்றது. இதையடுத்து, சென்னை என்.எல்.சி போஸ் சாலையில் இருந்த அந்த நிறுவனத்தில் சி.பி.ஐ நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கக்கட்டிகள், நகைகள் உட்பட 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவை எடை பரிசோதிக்கப்பட்டு சுரானா நிறுவனத்தின் லாக்கர்களிலேயே சி.பி.ஐ முத்திரையுடன் மூடி சீல் வைக்கப்பட்டன.

தங்கம்

அந்த லாக்கர்களின் சாவிகள் சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக சி.பி.ஐ தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்தச் சாவிகள் எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன என்ற தகவல்களை சி.பி.ஐ தெரிவிக்கவில்லை.கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த விவகாரத்தில் இரண்டாவது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, குறிப்பிட்ட தங்கம் முதல் வழக்கோடு தொடர்புடையதில்லை; வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்கோடு தொடர்புடையது என்று கூறியது. சி.பி.ஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கம், அது தொடர்பான ஆவணங்களை இரண்டாவது வழக்குக்கு மாற்றியது. அந்தத் தங்கம் ஏற்கெனவே லாக்கர்களில் இருப்பதால், நீதிமன்றம் அது குறித்து நேரடியாக ஆய்வு நடத்தவில்லை. ஆவணங்களில் மட்டுமே இந்த மாற்றம் நடந்தது.

இந்தநிலையில், சுரானா நிறுவனத்தின் முறையீட்டின் பேரில் அந்தத் தங்கத்தை வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராமசுப்ரமணியன் முன்னிலையில், சுரானா நிறுவன லாக்கர்கள் திறக்கப்பட்டு தங்கத்தின் எடை கடந்த பிப்ரவரியில் சரிபார்க்கப்பட்டது. அப்போது, 103.864 கிலோ அளவுக்குத் தங்கம் மாயமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி ராமசுப்ரமணியம் முறையிட்டார்.

Also Read: `சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சி.பி.சி.ஐ.டி விசாரணை!’ - என்ன நடந்தது?

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. சிபிசிஐடி-யின் எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரி மூலம் 6 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணையில் இறங்கியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் முதற்கட்டமாக சிபிஐ மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். சிபிஐ மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவது இந்தியாவிலேயே இது முதல்முறையாகும். இந்தசூழலில், சென்னை வந்துள்ள சிபிஐ சிறப்புப் பிரிவு அதிகாரிகள், சுரானா லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மாயமான விவகாரத்தில் தனியாக விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/tn-cbcid-file-case-against-cbi-in-surana-gold-missing-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக